• செல்பேசிவழியே நீர் இறைத்தல்

    by  • August 13, 2010 • அறிவியல்/நுட்பம், சமூகம் • 2 Comments

    இந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு என்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.  கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள் இவற்றுக்கிடையே  விவசாயிகள் (வயோதிகர்கள், குழந்தைகளும் அடக்கம்) வயலுக்கு பம்ப் செட்டைப் பயன்படுத்தி நீரிறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.

    புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஆஸ்ட்வல் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்று இப்பொழுது பெரும் வெற்றி கண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் இரண்டு ரூபாய் அலாரம் கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி, பின்னர் ரேடியோ அலைவரிசையை முயன்று இறுதியாக செல்பேசிகளின் வழியே குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தொலைவிலிருந்தபடி பம்ப் செட்களை இயக்க வழிகண்டிருக்கிறார். இந்த அயராத பயணத்தில் அவரது மனைவி அவருக்குப் பெருந்துணையாகத் தொடர்ந்து வந்திருக்கிறார்.  நானோ கணேஷ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கண்டுபிடிப்பு வளரும் சந்தைகளுக்கான செல்பேசி பயன்பாடுகளுக்கான முதல் பரிசை நோக்கியாவிடமிருந்து பெற்றிருக்கிறது.

    சமீபத்திய தி எக்கனாமிஸ்ட் சஞ்சிகை சந்தோஷின் கண்டுபிடிப்பைப் பற்றிய உற்சாகமூட்டும் செய்தியை வெளியிட்டிருக்கிறது.  இவரது கண்டுபிடிப்பு இப்பொழுது ஆஸ்ஸியன் (Ossian) எனும் நிறுவனம் வழியே சந்தைப்படுத்தப்படுகிறது.   கீழிருக்கும் சலனப்படத்தில் சந்தோஷின் நானோ கணேஷ் கொண்டு நீர் இறைக்கப்படுவதைப் பார்க்கலாம்.

    பெரும்பாலான அற்புதக் கண்டுபிடிப்புகள் சொந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில்தான் துவங்குகின்றன. ஆங்கிலத்தில் scratching a personal itch என்பார்கள். கூலிக்காக வேலை செய்யும்பொழுது இதுபோன்ற எளிமையான, அழகான கருவிகள் உருவாதல் கடினம்.  இன்னொரு அற்புதமான விஷயம், கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஒரே பிரச்சினைக்குத் தீர்வுகாண தொடர்ச்சியாக முயன்றமை.  இந்த நெடும்பயணத்தில் அலாரம் கடிகாரங்கள், ரேடியோ அலைவரிசை என்று தொடர்ச்சியாகத் நுட்பத்தை மேம்படுத்தியும் மாற்றியமைத்தும் வந்திருக்கிறார்.  கூடவே பெரும்பாலான துவக்கநிலை நிறுவனங்களில் அற்புதமான குழு ஒற்றுமை தேவைப்படுகிறது. சந்தோஷின் மனைவி இரவு பகலென்று பாரமல் அவருடன் இணைந்து நுட்பத்தை மேம்படுத்த உதவியிருக்கிறார்.  உற்சாகமூட்டும் மகிழ்ச்சிகரமான செய்தி.

    YouTube Preview Image

    2 Responses to செல்பேசிவழியே நீர் இறைத்தல்

    1. kavi_rt
      August 13, 2010 at 2:49 pm

      அருமையான கண்டுபிடிப்பு. நீரிறைப்பது ஒரு புறம். மடை மாற்றுவது என்று சொல்வார்கள் அதாவது குறிப்பிட்ட நேரம் கழித்து மற்றொருவர் வயலில் பாயும் தண்ணீரை உங்கள் வயலுக்கு மாற்றவேண்டும் இது பெரும்பாலும் இரண்டாம் சாமத்திலோ அல்லது மூன்றாம் சாமத்திலோ நடப்பது. ரொம்பவும் கடினமான ஒரு விஷயம். கிராமங்களில் இருப்பவர்களுக்கு இயல்பான ஒன்று, அதற்கு இந்தக் கருவி எந்த வகையில் உபயோகப்படும் என்பது தெரியவில்லை.

    2. வெங்கட்
      August 13, 2010 at 3:04 pm

      மடை மாற்றுவது பற்றி தெரியும் (கும்மோணத்துக்காரனுக்குத் தெரியாமல் இருக்குமா). இது மின்சார மோட்டார்களை குறுஞ்செய்தி வழியே இயக்க/நிறுத்தச் செய்யும் வழிமுறை. வரப்புல கொஞ்சம் வெட்டிவிட்டு வாய்க்கால்லேந்து தண்ணி பாச்சுவதுதான் நம்மூர் மடை மாத்தரது. இதையும் குழாய்வழி செய்து வால்வுகளைப் பொருத்தி செல்பேசியால் இயக்க முடியும்.

      திறந்த வழி நீர்ப்பாசனம் நம்மூரில் இருக்கும் திறனற்ற செயல்முறைகளில் ஒன்று. பகல் நேரத்தில் ஆவியாகி நீர் இழப்பது அதிகம், எந்த நேரத்திலும் வாய்க்காலில் பக்கவாட்டுக் கசிவு வழியே நீர் இழப்புதும் உண்டு. குழாய்வழிப் பாசனத்திற்கு முற்றிலுமாக மாறி வால்வுகள், அடைப்பான்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது முக்கியம். ஊர்ப்பக்கம் வயல்வரப்புகளில் நடந்து 15 வருடத்திற்கு மேலாகிவிட்டது. இப்பொழுது எப்படியிருக்கிறதோ தெரியவில்லை.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *