• ஒபாமாவுக்கு வாழ்த்துகள்

    by  • November 5, 2008 • சமூகம் • 6 Comments

    முழு முடிவுகள் வராத நிலையிலும் கூட ஒபாமாவின் வெற்றி இப்பொழுது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகியிருக்கிறது. இந்தத் தேர்தலின் ஆதியிலிருந்தே ஒபாமாவை ஆதரித்தவன் என்ற முறையில் இது மகிழ்ச்சியான முடிவு.  ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தன் வரலாற்றுக் கறைகளைக் களைந்தெரியும் முக்கியமான கட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள்.

    என்னுடைய பல எழுத்துக்களில் அமெரிக்காவின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன் நான். இருந்தபோதும் அமெரிக்காவின் சில ஆதார விழுமியங்கள் உலகிலேயேன் மிகவும் உன்னதமானவை. இவற்றுள் முக்கியமாக நான் கருதுவது தளையற்ற சிந்தனைகள் (இதனால்தான் அறிவியல்/நுட்பத்தில் அமெரிக்கா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது).  இருந்தபோதிலும் பணக்காரனின் வயலில் பாயும் வெள்ளம் கசிந்துதான் ஏழையின் காணிக்கு வரவேண்டும் என்ற சிந்தனை அதன் மிகப் பெரும் கரும்புள்ளிகளில் ஒன்று. மற்றது சமீபகாலமாக வளர்ந்துவரும் சமய வெறி.  இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி இல்லாவிட்டால் கூட குறைந்தபட்சம் காற்புள்ளியாவது ஒபாமாவால் இடமுடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது.  கடந்த எட்டு வருடங்களில் வறட்டு முரட்டுத்தனத்தை மாத்திரமே உலக நாடுகளிடம் காட்டிய அமெரிக்கா தனது மூர்க்கத்தைக் களைந்தெரிந்து ஒரு உன்னத முதன்மை நாடாக உலக நாடுகளிடையே தன் பெயரை மீட்டெடுக்க வேண்டும்.

    ஒபாமா அப்பழுக்கற்றவர் என்ற எண்ணம் எனக்கு ஒருப்போதும் இருந்ததில்லை. ஆனால் போட்டியிட்ட எல்லோரைக் காட்டிலும் மிகக் குறைவான எதிரெண்ணங்களைக் கொண்டவர் என்பதே அவரிடம் நான் கண்ட (காணும்) முக்கிய தகுதி.  இன்றைய அமெரிக்க மற்றும் உலக நடப்பில் ஒபாமாவின் துவக்கம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக தேர்தலில் காட்டிய சில நல்ல பண்புகளைத் தொடர்ந்தாலே போதும் பல எதிர்ப்புகளைச் சமாளிக்கலாம் என்று நம்புகிறேன். குறிப்பாக அனைவரையும் அரவணைத்துச் செல்வது.

    செனட்டர் மெக்கெய்ன் இந்தத் தோல்வியால் ஒன்றும் சிதைந்துப் போகப் போவதில்லை. அவருடைய நீண்ட நாளைய சேவை அமெரிக்கர்களால் நன்றியுடன் நினைவுகூறப்படும் என்று நம்புகிறேன். இன்னும் சில காலமாவது செனட்டாராகத் தொடரவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

    சிக்கலான துவக்கம். தடைகளைக் களைந்தெரிந்து வெற்றிகளைச் சேர்க்க ஒபாமாவுக்கு இனிய வாழ்த்துகள்.

    (இதை எழுதி முடிக்கும் நேரத்தில் 54 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக ஒரு டெமாக்ரடிக் வேட்பாளர் (ஒபாமா) வர்ஜீனியாவில் வெற்றி பெறுவார் என்ற அறிவிப்பு வருகிறது. இன்னும் முழு முடிவுகள் வரவில்லை எனினும் … சரியாக 11:00 மணி, சி.என்.என் ஒபாமாவின் வெற்றியை உறுதியான அறிவிப்பாக்கியிருக்கிறது.)

    6 Responses to ஒபாமாவுக்கு வாழ்த்துகள்

    1. புகழன்
      November 5, 2008 at 12:41 am

      மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இது நற்செய்தி.

    2. S. Sankarapandi
      November 5, 2008 at 12:54 am

      ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வாழ்த்துகள்!

      ஒபாமா வெற்றிபெற வேண்டும், பெறுவார் என்று நம்பியவர்களில் நானுமொருவன்.

      ஒபாமாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினத்தவருக்குச் சம உரிமையும், மதிப்பும் அளிப்பது மட்டுமல்லாமல், தம்மையே ஆளும் உரிமையைக்கூட அளிப்பவர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றனர்.

      அமெரிக்க அரசுகள் உலகெங்கும் தீராத பிரச்னைகளையும், குழப்பங்களையும் உண்டு பண்ணினாலும் அமெரிக்க மக்களில் பெரும்பாலோரைப் பற்றி எனக்கு எப்பொழுதும் நல்லதொரு கருத்துண்டு. அது மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

      அமெரிக்காவின் சிறுபான்மையினத்தவரான கறுப்பினத்தவர்களுக்கு இது ஒரு மகத்தான வெற்றி, அமெரிக்காவின் மீதான நம்பிக்கையை பலப்படுத்தும் வெற்றி.

      அமெரிக்காவில் வசிக்கும் இத்தனையாண்டுகளில் முதல்முறையாக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததற்குப் பெருமையடைகிறேன்.

      எதேச்சையாகக் கடந்த வாரம்தான் ஈழத்து நண்பர் ஒருவரின் பதிவில் இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன் என்று வேதனையுடன் சொல்ல நேர்ந்தது.

      http://blog.sajeek.com/?p=431

      ஏதிலிகளில் கூட திபெத்து நாட்டு ஏதிலிகளை விட தமிழீழ ஏதிலிகளைப் பலமடங்குகள் கேவலமாக நடத்தும் என் தாய்நாடு இந்தியாவை எண்ணி வெட்கப்படுகிறேன்.

      http://www.tamilwin.com/view.php?20IWnp20e1j0A2ebiG7X3bdF9EY4dc82h2cc41pO2d43oQH3b02PLI3e

      நன்றி – சொ.சங்கரபாண்டி

    3. admin
      November 5, 2008 at 1:08 am

      புகழன் – நன்றிகள்.

      சங்கரபாண்டி – உண்மைதான். ஒபாமாவின் கருத்துகள், வருங்காலத்தில் அவர் நடைமுறைகள் எப்படியிருந்தாலும் தடை உடைக்கப்பட்டிருக்கிறது.அமெரிக்க கறுப்பினத்தவர் முகங்களில் முதன் முறையாக தடியடியாலும், கண்ணீர்ப்புகையாலும், வறுமையாலும் இல்லாமல் ஆனந்தக் கண்ணீர் வருவதை திரும்பத்திரும்ப தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

      ஈழம் – என்றைக்குமே நல்லது நடக்கும் என்று நம்புகின்றவன் என்ற முறையில் இதற்கும் ஒரு இனிய விடிவு வரும் என்றே நம்புகிறேன்.

      நேற்று இங்கே ஒரு ஈழத்து நண்பர் (நல்ல வசதியான வியாபாரம் வைத்திருப்பவர்) பேசிக்கொண்டிருந்தபொழுது அவர் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நடிகர்கள் உண்ணாவிரதத்தையும் நடிகர் பேச்சையும் பற்றி உணர்ச்சிப் பரவசமாகப் பேசினார். அவருடைய பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு வேதனை மேலிட்டது. அவரிடம் எதிர்மறையாக எதையும் பேச வேண்டாம் என்று நீண்ட நேரம் பேசாமல் இருந்தேன். ஆனால் போகப்போக தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார் என்ற வருத்தம் மேலிட மெதுவாக, விரிவாக இந்த உண்ணாவிரதம், நிதி திரட்டல், பேச்சு அபத்தங்களைப் பற்றிச் சொன்னேன். அவரது முகத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது.

      இந்தியாவில் சுயநலத்தைத் தாண்டி ஈழத்தின் நிலையைப் பற்றி கவலைப்படுபவர்களே இல்லையோ என்ற கோபம்தான் மிஞ்சுகிறது.

    4. பத்மா அர்விந்த்
      November 5, 2008 at 10:13 am

      வெங்கட்
      ஒபாமா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே. ஆனால் அடிமனதில் ஹிலரி தேர்ந்தெடுக்கபடாததன் ஏமாற்றம் இருக்கவே செய்கிறது. மெக்கெயின் மிக சிறந்த மனிதர். தவறான காலத்தில் போட்டியிட்டதும், சாரா பேலினின் கோமாளித்தனமும், மெக்கெயினுக்கு ஏதேனும் நேர்தால் சாரா தலைமைஏற்க நேரிட்டால் என்பது ஒரு பயங்கரமான கற்பனையாகவும் இருந்தது, காலின் பாவெலின் ஓபாமா ஆதரவு, போன்றவை அவர் தோற்க காரணம். சில நாட்களுக்கு முன் அவர் போர்க்கைதியாக அடைந்த துன்பங்களை நேரிடையாக கேட்க நேர்ந்தது மிக்க மரியாதையை தோற்றுவித்தது.

      நேற்று பாதி நாட்களுக்கு மேல் மக்களை ஓட்டு போட அழைத்து சென்ற ஒரு புதிய அனுபவம் இந்த தேர்தலில் கிடைத்து.
      எடிசனில் மேயராக இருக்கும் ஜூன் சாய் காணும் எதிர்ப்புகள் இல்லாமல், தன் அரவணைத்து செல்லும் குணத்தால் சில திட்டங்களை நிறைவேற்றினாலே மகிழ்ச்சி தரும்.

    5. S. Sankarapandi
      November 5, 2008 at 10:29 am

      வெங்கட், உண்மைதான், கறுப்பினத்தவர் முகங்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர் நெஞ்சைத் தொட்டது. இங்கு அலுவலகங்களில் அவர்கள் சமமாக நடத்தப் பட்டாலும் அல்லது தோற்றமளித்தாலும் அவர்களைப் பற்றிய பெரும்பாலானோரின் (இந்தியர்கள் உள்பட) உள்ளுணர்வு அவர்களைத் தகுதியில்லாதவர்களாகவே கருதுகிறது. அது கறுப்பினத்தவர்களுக்கும் தெரியும் என்பதால் பெரும்பாலான வேலைகளில் அவர்களுக்குக் கூனிக்குறுகும் நிலைதான். அதனாலேயே பலர் தம் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் புறக்கணிப்பதுமுண்டு. (நம்மூரிலும் தலித்து மாணவர்களும், ஊழியர்களும் இப்படியொரு சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள்.) நான் முன்பு இதுபற்றிச் சொன்னது போலவே ஒபாமாவின் வெற்றி அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. (http://uspresident08.wordpress.com/2008/10/27/%E0%AE%9A%E0%AF%8A-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A/)

      ஈழம் பற்றிய உங்கள் வருத்தத்தில் உடன்படுகிறேன். புலம் பெயர்ந்த ஈழமக்களில் பலர் இப்படியொரு கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது.

      நன்றி – சொ.சங்கரபாண்டி

    6. November 7, 2008 at 11:47 pm

      வெங்கட்

      நலமா..?

      // என்னுடைய பல எழுத்துக்களில் அமெரிக்காவின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன் நான் //

      சில விமர்சனங்களில் அளவுக்கதிகமான அமேரிக்க வெறுப்பு தென்பட்டதுமுண்டு. இருந்துவிட்டு ‘போகட்டும்’. ;)

      8 வருடங்களுக்கு முன்பு டூப்யா புஷ் #2 க்கு வாக்களித்தேன். நிறைய நம்பிக்கை இருந்தது அவர் மேல்.

      கூடுதலாக மேலிருந்து கீழ் பரவும் பொருளாதாரத்திலும் முழு நம்பிக்கை இருந்தது, அப்போது.

      9/11/01 பின் கொஞ்சம்,கொஞ்சமாய் ஏமாற்றமாய் மாறியது. *வேறு வழியில்லாமல்* கெர்ரிக்கு 4 வருடங்கள் முன்பும், தற்போது ஒபாமாவுக்கும் வாக்களிக்க வேண்டியதாயிற்று.

      மெக்கெய்ன் அவர் அவராகவே இருந்திருந்தால் எளிதாக இருந்திருக்கும், எனக்கு வாக்களிக்க. கடந்த சில மாதங்களில்
      அவர் தலைகீழாக மாறியது என் எண்ணத்தை மாற்றியது. தற்போது, வாக்குறுதிகளை அள்ளி வீசி அதிபராகிவிட்ட ஒபாமாவை-அனுபவம் இல்லாத-அமேரிக்காவின் ஆணிவேரான முதலாளித்துவம் என சொல்லப்படும் முதலீட்டுத்துவத்தை ஒழிக்கக் கூடிய ஒபாமாவுக்கு வாக்களித்தாகிவிட்டது. டூப்யா காலத்தில் ஆரம்பித்த அரசாங்கத்தின் ஊடுருவல், தனிமனித வாழ்க்கையில் இன்னும் கூடுதலாகக் கூடுமே என எண்ணும் போதும், தனிமனித பொறுப்புகள் இன்னும் நீர்த்து போய்
      எதற்கும் அரசை நம்புகின்ற மனப்பாங்கு அதிகரிக்குமே என எண்ணும் போது மனம் பெரிதும் களைப்படைகிறது.

      இருந்தாலும் முழுதாக நம்பிக்கை அற்றுப் போகவில்லை.

      இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் நேரமில்லை.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *