• உம்மாச்சி செல்ஃபோன்

    by  • February 28, 2007 • கனடா, சமூகம், நகைச்சுவை • 4 Comments

    நான் நிறைய நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்த விஷயம் இது. இங்கே பாட்டு கேட்பதற்காக, படம் பார்ப்பதற்காக செல்பேசிகளை விற்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக கனடாவின் மூன்றாவது பெரிய செல்பேசி நிறுவனமான டெலஸ் செல்பேசிகளில் ஃபோர்னோ படங்களையும் விற்க முடிவெடுத்தது. அதற்கு கொஞ்சம் எதிர்ப்பு வரவே இப்பொழுது ஒத்திப் போட்டிருக்கிறது. பாட்டு, படம், ஃபோர்னோ இவை மூன்றுக்கும் அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகக் கூடிய சமாச்சாரம் ஆத்திகம். இதை இன்னும் செல்பேசிக்காரர்கள் பயன்படுத்தவில்லையே என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.

    எத்தனைக் காலம்தான் இது இல்லாமலிருக்க முடியும். இஸ்ரேலில் ஒரு நிறுவனம் இப்பொழுது ‘கோஷர் ஃபோன்’ சிலவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வகையறா ஃபோன்களில் டங்குசிக்கு டங்குசிக்கு வகை அழைப்புமணிகள் இருக்காது. அதற்குப் பதிலாக இறைவனையோ இறைதூதரையோ போற்றும் பாடல்கள் உள்வரும் அழைப்பைச் சொல்லும். (நம்மூரில் இது அரோஹரா, கோவிந்தா, சரணம் ஐய்யப்பா, ஜெய்சாய்ராம் என்று இருக்கலாம். ரிலையன்ஸ் இதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது).

    இது மிக அற்புதமான சந்தைப்படுத்தல் உத்தி. மதகுருமார்களால் ஆசிர்வதிக்கப்பட்டுவிட்டால் போதும், அவர்கள் வாரம்தோறும் நடக்கும் தொழுகைகளில் அதிதீவிரமாக இந்த செல்பேசிகளைச் சந்தைப்படுத்துவார்கள். இஸ்ரேலில் இதுபோன்ற கோஷர் செல்பேசிகளில் Kosher-to-Kosher அழைப்புகளின் கட்டணம் குறைவாக இருக்கிறதாம். இது இன்னமும் தீவிரமாக ஜனங்களை ஜோதியில் ஐக்கியப்படுத்தும்.

    என்னுடைய இன்னொரு நெடுநாள் ஜோசியம் – யாராவது ஒரு புண்ணியவான் வாட்டிகனை சரிகட்டினால் ஜனங்களுக்கு ‘கத்தோலிக்க காண்டாம்கள்’ கிடைக்கும். பூனைக்கு மணிகட்டப்போகும் அந்தப் புண்ணியாத்மா யாரோ.

    4 Responses to உம்மாச்சி செல்ஃபோன்

    1. March 1, 2007 at 2:17 am

      நான் பயன்படுத்தும் செல்பேசியில் அழைப்புமணி ” சர்வ மங்கள மாங்கல்யே சிவா சர்வாதிக சாதிகே” என்று ஒலிக்கிறது. காயத்திரி மந்திரம் ஒலிக்கும் செல்பேசிகளும் உண்டு. அதே சமயம் என் செல்பேசிக்கு தொடர்பு கொண்டவருக்கு “பர்ஸோ.ரே.” குரு பாட்டு கேட்கும்; வீட்டிற்குள் ஆன்மீகமும் வெளியில் லௌகீகமும் போல :)

    2. April 11, 2007 at 5:51 am

      மணியன் சொல்வது போல், நம் நாட்டில் இது புதுமை அல்ல.என் சித்தி செல்லில் விஷ்னு ஸஹஸ்ரநாமம் ஒலிக்கும்.என் மாடி வீட்டு முஸ்லிம் வீட்டு செல்லில் “அல்லா ஹு அக்பர்” ஒலிக்கின்ற்து. நான் jingle bellsஉம் கேட்டு இருக்கிறேன்.

    3. April 11, 2007 at 8:03 am

      நீங்கள் உங்கள் ரசனைக்கு ஏற்ப Ring Tone-யோ Hello Tune-யோ வைத்துக் கொள்ளலாமே. இதில் செல் நிறுவனங்கள் என்ன சந்தைபடுத்த போகிறார்கள்?

      செல் வழியே விற்பனை என்ற அளவில் பார்த்தாலும் அது ஒரு ஊடகம்தானே இணையம் போல். Reliance CDMA தொலை பேசிகளில் எல்லா வகை படங்களும், பாடல்களும் ரொம்ப நாட்களாகவே தரவிறக்க கிடைக்கின்றன.

      கத்தோலிக்க காண்டோம்கள் சாத்தியம் குறைவு என்று எண்ணுகிறேன். ஆனால் ஆத்திக வழியில் வயாக்ரா போன்ற மருந்துகளுக்கு பெரும் சந்தை இருக்கிறது.

    4. வெங்கட்
      April 11, 2007 at 8:24 pm

      லக்ஷ்மி/ஸ்ரீதர் வெங்கட்

      தனித்தனியாக நமக்குப் பிடித்த படங்களைப் போட்டுக்கொள்வது, பாட்டுகளை அழைப்புமணியாக்கிக்கொள்வதைப் பற்றியல்ல இது.

      நிறுவன ரீதியாக ஒரு செல்போனை இது ஜெஹோவாஸ் விட்னஸ்களுக்கு உகந்த செல்போன் என்று மதகுருமார் ஆசிர்வதிப்பதைப் பற்றியது. இஸ்ரேலியில் சொல்லப்பட்ட போன் சுத்தமான கோஷர் ஃபோன், அதில் கிளுகிளுப்பூட்டும் படங்களும் பாடல்களும் கிடையாது (அதாவது கோஷர் ஃபோன் சேவை வழியே இதை பெறுவது சாத்தியமில்லை). மறுபுறம் அன்றாட தினபலன், பிரார்த்தனை தகவல்கள், எத்தனை மணிக்கு இன்றைக்கு சாப்பிடுவது கடவுளுக்கு உகந்தது என்பதைப் போன்ற விஷயங்கள் சேவை வழியே சுலபமாகக் கிடைக்கும்.

      சொல்லத்தேவையில்லை; கோஷர் ஃபோனுக்குப் பணம் கொடுத்துவிட்டு வேறு இடத்திலிருந்து அசிங்கமான சமாச்சாரங்களை எடுத்துப் போட்டுக்கொள்வது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானதுதான்.

      To hack a phone is ‘spiritual’ to subscribe to a service is ‘religious’. The latter is institutionalization.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *