விழிமின்! எழுமின்!
(புரட்சி தலைப்பில் மாத்திரம்தான், மன்னிக்கவும்).
ஆண்குறியின் எழுச்சிக்கு நைட்ரிக் ஆக்ஸைடின் பங்கு முக்கியமானது என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விஷயம். (வயாகரா பற்றிய விக்கிப்பீடியா கட்டுரை).
இன்றைக்கு யாகூ அறிவியல் பகுதியில் வெளியாகியிருக்கும் கட்டுரை நைட்ரிக் ஆக்ஸைடின் இன்னொரு முக்கியமான பங்கை விளக்குகிறது. மூளையின் தாலமஸ் (thalamus) என்ற பகுதி இதுநாள் வரை ஒரு கதவைப்போல சமிக்ஞைகளை மூளையில் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பமாத்திரமே பயன்படுவதாகக் கருதப்பட்டது. (ஆமாம், தமிழில் முகுளம் என்று சொல்லப்படுவது தாலமஸ்-தானா? அல்லது வேறு பகுதியா என்று நினைவிருப்பவர்கள் தெருட்டவும்). இப்பொழுது அதற்கும் மேலாக எந்தவகையான சமிக்ஞகளை உள்வாங்குவது என்ற தெரிவையும் தாலமஸ் செய்வதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
காலையில் விழித்தவுடன் பரவும் சூரிய ஒளி, கடிகாரத்தின் மணியோசை (இன்னும் பால்காரன் கூவல், அம்மா போடும் காஃபி மணம்) என்ற பலவிதமான சமிக்ஞைகளையும் உள்வாங்கிக் கொண்டு தாலமஸ் மூளையை ஒரு கணினி துவங்குவதைப் போலத் துவக்கி வைக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது நம் மூளையின் அமைப்பும் செயற்பாடும் குறித்த மிக முக்கியமான புரிதல் என்று நம்புகிறேன். (நம் உடலிலேயே மூளையைப் பற்றி மாத்திரம்தான் நமக்கு மிகக் குறைவாகத் தெரியும்).
மறுபுறத்தில் விழிப்பதற்கும் (மூளை), எழுவதற்கும் (அதுதாங்க) நைட்ரிக் ஆக்ஸைடின் பங்கு தெளிவாகியிருக்கிறது.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments
No comments yet.
Leave a comment