கனேடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கிறது
கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் தொடுக்கப்பட்ட பலமுனை அழுத்தங்களுக்கு இணக்கமாக கனடாவின் தற்பொழுதைய ஆளும் கன்ஸர்வேடிவ் கட்சி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தீவிரவாத இயக்கமாக அடையாளம் கண்டிருக்கிறது. இதன்மூலம் கனேடியர்கள் விடுதலைப்புலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபடுவதையும், நிதி திரட்டுவதையும் கிரிமினல் குற்றம் என அறிவித்திருக்கிறது.
இது கன்ஸர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் செயலாக்கம்தான், இதை ஓரளவு தமிழர்கள் எதிர்பார்த்ததுதான் என்ற போதும் நான் அவதானித்த வகையில் கனேடிய ஈழத் தமிழர்களிடையே இவ்வளவு விரைவாக இது வந்தது அதிர்ச்சியளித்திருக்கிறது. இன்று மாலை 9:45க்கு கனேடியத் தமிழ் வானொலியில் என்னுடைய வாராந்திர நிகழ்ச்சியை அடுத்து இது குறித்த ஒரு உரையாடல் நடைபெற்றது. அவசரமாகப் பதிவு செய்த ஒலிக்கோப்பு இங்கே.
நிகழ்ச்சியில் பங்குபெற்றவரகள் அருட்தந்தை பிரான்ஸிஸ் சேவியர், தியோ ஆண்டனி, வானொலி சார்பாக விஜே குலத்துங்கன்.
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. You also need to have JavaScript enabled in your browser.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புக்களுக்கு உதவி வழங்க அனுமதியுண்டு: கனடிய அரசு
[திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2006, 23:34 ஈழம்] [புதினம் நிருபர்]
கனடாவில் பயங்கரவாத அமைப்புக்களுக்கான பட்டியலில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், ஏப்ரல் 8ம் திகதி 2006ம் ஆண்டிலிருந்து இணைத்துக் கொள்ளப்படுவதாக, கனடிய பொதுநல பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக்வெல் டே இன்று அறிவித்தார்.
கடந்த காலத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த செயற்பாடு, முன்னைய அரசால் கிடப்பில் போடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், கனடிய மக்களை பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு தமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறினார்.
இந்த முடிவு சரியானது என்று நியாயப்படுத்திய கனடிய வெளிநாட்டமைச்சர் பீற்றர் மைக்கே, சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் கனடா தொடர்ந்தும் ஆர்வம் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள், சமாதான முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாகக் கூறிய பீற்றர் மைக்கே, சமாதான முயற்சிகளில் அவர்கள் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது செயற்பாடுகள் சந்தேகத்திற்குள்ளாக்குவதாக விளக்கினார்.
சிறிலங்கா அரசும், பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணும் விடயத்தில் தான் வழங்கிய உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று தெரிவித்த வெளிநாட்டமைச்சர் மைக்கே, அவ்வாறு சிறிலங்கா அரசு உறுதிமொழிகளை இதுவரை கடைப்பிடித்து வருகிறதா இல்லையா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில், 39 ஆவது பயங்கரவாத அமைப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்திற்கு நேரடியாக உதவி செய்வது, இயக்க செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பன தடை செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த அமைப்புடன் தொடர்புடைய முன்னணி அமைப்புக்கள் தொடர்ந்தும் தங்கள் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு எந்தத் தடையும் வழங்கப்படவில்லை என்பது, அரச அறிவிப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த இயக்கத்துடன் தொடர்புடைய ஏனைய அமைப்புக்களிடம், விரும்பியவர்கள் உதவி வழங்குவதற்கும் ஏனைய ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்குவதற்கும், இணைந்து செயற்படுவதற்கும் இந்தச் சட்டம் தடை விதிக்கவில்லை என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

சென்ற வார outlookindia.com-ல் புலிகளின் நிதிதிரட்டல் சம்பந்தமாக ஒரு கட்டுரை வந்திருந்தது. இச்சமயத்தில் திடீரென்று அது ஏன் என்று யோசித்திருந்தேன், ஒருவேளை இத்தடை குறித்து எழுந்து கொண்டிருந்த செய்திகளின் பாதிப்பாகவும் இருந்திருக்கலாம்.