மதுரைத் திட்டத்தில் நவீன இலக்கியங்களை உள்ளிட உதவுங்கள்
by வெங்கட் • March 23, 2006 • இலக்கியம், சமூகம் • 4 Comments
இதுநாள்வரை மதுரைத்திட்டத்தில் தன்னார்வலர்களால் தட்டச்சு செய்யப்பட்டு, மெய்ப்புர் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பவனவற்றுள் பெரும்பான்மை செவ்வியல் இலக்கியங்களே. செவ்வியல் இலக்கியங்களை மின்வடிவில் எல்லோருக்கும் எளிதாக, இலவசமாகக் கிடைக்கச் செய்வதில் மதுரைத் திட்டத்தின் பங்கு அற்புதமானது.
இத் திட்டத்திற்கு தட்டசு செய்ய, மெய்ப்புப் பார்க்க உதவுவதில் ஒரு முக்கியமான மகிழ்ச்சி, அதே சமயத்தில் அந்த நூல்களையும் நம்மால் ஆழ்ந்து படிக்க முடியும். மதுரைத் திட்டத்தின் நல்ல நோக்கங்களில் ஆர்வமுள்ள சிலர் செவ்வியல் இலக்கியங்கள் என்றவுடன் ஒதுங்கிவிடுகிறார்கள். நம்மால் இவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது, புரியாமல் தட்டச்சு செய்யும்பொழுது தவறுகள் மலியும் என்ற பயமிருக்கிறது. இப்பொழுது மதுரைத் திட்டத்தின் அடுத்த இலக்காக இருபதாம் நூற்றாண்டின் காப்புரிமையற்ற இலக்கியங்களை உள்ளிடுதல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுதைய இலக்காக இருக்கும் சில படைப்பாளிகள்;
- பாரதியார்
- பாரதிதாசன்
- மறைமலை அடிகள்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- சி.என். அண்ணாதுரை
- கல்கி கிருஷ்ணமூர்த்தி
- திரு.வி.க
- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
- பா. ஜீவானந்தம்
- நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை
- வ.உ. சிதம்பரனார்
- யோகி சுத்தானந்த பாரதி
- ஈ.எஸ்.கே. ஐயங்கார்
- வ.ரா
- கவி. கா.மூ ஷெரீஃப்
- நாவலர் சோமசுந்தர பாரதியார்
- பரலி சு. நெல்லையப்பர்
- வ.வே.சு. ஐயர்
- காரைக்குடி சா. கணேசன்
- எஸ்.டி.எஸ். யோகி
- ந. மு. வேங்கடசாமி நாட்டார்
- ந. பிச்சமூர்த்தி
- க.ந. சுப்ரமணியம்
இவர்களில் யாருடைய படைப்புகளையாவது நீங்கள் தட்டச்சு செய்து உதவ உங்களை மதுரைத் திட்டம் அழைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் மதுரைத் திட்டத்தின் ஒருங்கமைப்பாளர் கல்யாணசுந்தரத்தைத் தொடர்பு கொள்ளவும்.
தற்காலப் படைப்பாளிகள் சிலரும் (ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, உள்ளிட்ட இன்னும் சிலர்) தங்கள் படைப்புகளின் மின்பதிப்புரிமையை மதுரைத் திட்டத்திற்கு இலவசமாக வழங்கியிருக்கிறார்கள். இவர்களது படைப்புகளையும் நீங்கள் மின்னாக்கம் செய்ய உதவலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு புத்தகம் என்ற அளவில் மதுரைத் திட்டத்திற்குப் பங்களித்தால் நம் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாக்கவும் பரப்பவும் முடியும்.
பதிவிற்கு நன்றி வெங்கட். மதுரைத்திட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கல்யாணசுந்தரத்தின் முகவரி சரியானதா? ஏனெனில் அது geocities முகவரியைக் கொண்டுள்ளது.
பாலு
வெங்கட்,
பதிவிற்கு நன்றி! விரைவில் திரு கல்யாணசுந்தரம் அவர்களைத் தொடர்பு கொள்கிறேன்.
ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம் இணையத்தில் எழுதியுள்ளேன் அதை மதுரை திட்டத்தல் எப்படி சேர்ப்பது திரு. கல்யாணசுந்தரத்தைத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி என்ன?
இரத்தினவேலு – kalyan.geo@yahoo.com என்ற முகவரிக்கு புத்தகத்தை அனுப்பவும். நீங்கள் தட்டச்சு செய்ததை வேறு யாராவது ஒருவர் மெய்ப்புப் பார்க்க (Proof-reading) வேண்டியிருக்கும். எதற்கும் கல்யாணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுகள்.