• தலையில் சுமக்கப்படும் அவலங்கள் – சில தீர்வுகள்

    by  • March 10, 2006 • அறிவியல்/நுட்பம், சமூகம் • 42 Comments

    சில நாட்களுக்கு முன்னால் எழுதிய கீதா ராமசாமியின் புத்தக அறிமுகத்தின் தொடர் பதிவு இது.

    கீதா ராமசாமியின் இந்தப் புத்தகத்தில் தீர்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று தெரியாது.  என் மனதிற்குப் பட்டவரை கீழ்க்கண்டவற்றையே நான் விடிவுதரும் தீர்வுகளாக நம்புகிறேன்.

    தலித்துகளின் தலைவர்களாக அறியப்படுவர்களுக்கு  தாழ்மையான வேண்டுகோள் ஒன்றுண்டு.  உங்கள் கற்பு, தமிழ்க் கலாச்சாரம், தொகுதி உடன்பாடு இவற்றையெல்லாம் வரும் தேர்தல் முடிந்தவுடன் (அதில் உங்களது வெற்றி தோல்வி என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்)  அடுத்த இரண்டாண்டுகளுக்காவது கைவிடுங்கள்.  உடனடியாக  சுத்திகரிப்பில் நேரடி மானிட உழைப்பைத் தடைசெய்ய அதில் நுட்பங்களைப் புகுத்த அரசை வறுபுறுத்துங்கள்.  அவர்களிடமிருந்து எப்பாடுபட்டாவது ஒரு கால இலக்கைத் தீர்மானமாகப் பெறுங்கள்.   (இன்னும் பத்து வருடங்களில் மனிதக் கழிவைத் தலையில் சுமப்பதை முற்றாக நிறுத்துவோம்.  இத்யாதி…).   அதியற்புத துவக்க நிலை வர்த்தக நிறுவனங்களிடையே ‘காலவரையறை உத்தி’ (Time-bound Strategy)  என்று ஒன்று இருக்கும். இதில் காலக்கெடு மிகவும் முக்கியம்.  இத்தனை மாதங்களுக்குள் இந்த இலக்கை எட்டியாக வேண்டும் என்று ஒவ்வொரு கட்டத்தைவிட்டும் வெளியேறும் தீர்மானமாம முன்விதித்த காலக்கெடுக்களை அந்த நிறுவனங்கள் வரையறுத்துக் கொள்வதைக் காணலாம்.   அப்படியாக இந்த சாதி அவலத்தின் ஒவ்வொரு கூறுகளையும் ஆய்ந்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தீர்மானமான காலக்கெடு வைத்துக் கொண்டு போராட வேண்டியது மிகவும் முக்கியம்.  துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பின் அரைநூறாண்டுக்கும் மேலாகக் கழிந்தும் சமூக அவலங்களைக் குறித்தப் போராட்டத்தில் துவக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறோம்.

    என் தனிப்பட்ட கணிப்பின்படி சுகாதாரக் கேடுள்ள தொழில்களிளும் ஆபத்துகள் நிறைந்த தொழில்களிலும் நுட்பங்களையும் கருவிகளையும் முனைந்து புகுத்துதல், நமக்கேயான கருவிகளை வடிவமைத்துக் கொள்ளுதல் மிகவும் முக்கியம்.  பத்து வருடங்களுக்கு மேலாக  பிரிட்டன், கனடா, ஜப்பான் நாடுகளில் வசித்ததில் நான் கண்டது இதுதான்; எங்கள் வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்ய பல கருவிகள் இருக்கின்றன.  அதிக சிரமமின்றி கழிவறையின் துர்நாற்றத்தைப்  போக்கவும்,  சுகாதாரத்தை உறுதி செய்யவும் புதுவித வேதிப்பொருட்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறன.   இந்த நிலையில் தனிமனிதன் அவன் சுகாதாரத்தை அவனே பேணிக்கொள்வது எளிதாகிறது.  இதுவே நான் காணும் தீர்வு. இதில் அறிவியலின் பங்கு நிறையவே இருக்கிறது.  வாரம் தோறும் என் கழிவறையை நான் சுத்தம் செய்யாவிட்டால்,  என் குளியல் தொட்டியில் கொஞ்சம் கறுப்பு படிந்துவிட்டால்,  எனக்கு உடனடியாக சுத்தம் செய்தாக வேண்டும்.   இதில் கட்டாயம் எனக்கு பெருமையிருக்கிறது.   இந்த சுத்திகரிப்பு காரியங்களைச் செய்யும் கருவிகளையும் அதற்கு உதவும் வேதிப்பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வமிருக்கிறது.

    என் தாத்தா காலத்தில் அவருடைய மீசையையும், தாடியையும் மழிக்க நாவிதன் வரவேண்டியிருந்தது.  என் தந்தையின் காலத்தில் சேப்டி ரேஸர்கள் என்று சொல்லப்படும் சவரச சாதனங்கள் பெருக, மழித்தலுக்காக நாவிதனை நாடவேண்டிய அவசியம் விட்டுப் போனது.  என் காலத்தில் முன்று பிளேடு ரேஸ்ர்கள், ஐந்து பிளேடு ஜில்லட்டின் என்று வர, தாடியை எடுக்க சலூனுக்குப் போவது கேலிக்கும், வியப்புக்கும் உரிய விடயமாக ஆகிப் போயிருக்கிறது.    இதுதான் உண்மை.   கருவிகள் வளர வளர  செய்தொழிலில்  உயர்வு தாழ்வு சொல்லும் மனப்பான்மை நம்மை விட்டோடிவிடும்.    இதைச் சென்னையிலேயே ஒரளவு காணமுடிகிறது சிங்கப்பூர்காரர்கள் வந்து கருவிகளைக் கொண்டு தெரு சுத்தம் செய்ய ஆரம்பித்த உடன் அதில் ஈடுபடும் இளைஞர்களிடையே சுறுசுறுப்பையும் தன் தொழில் மட்டமில்லை என்ற தன்னம்பிக்கையும் பார்க்க முடிந்தது.

    என் அலுவலகத்தில் தரையைச் சுத்தம் செய்ய ஒரு நிறுவனத்திற்குக் குத்தகையிருக்கிறது.  செவ்வாய் தோறும் மாலையில் என் அறையைச் சுத்தம் செய்யும் பெண்மனி வருவதற்குள் நானே என் குப்பைகளை எடுத்துப் போட்டுவிட்டு மேசையை ஒழுங்குபடுத்தி வைக்கிறேன்.   இதற்குக் காரணம் அந்தத் தொழிலைச் செய்ய வருபவரிடம் எனக்கிருக்கும் மதிப்பு; அந்தத் தொழிலைச் செய்பவருக்குத் தன் உடலுழைப்பின் உன்னதத்தின் மேல் இருக்கும் தன்னம்பிக்கை என்னிடம் அவர்மீது மதிப்பாக எதிரொளிக்கிறது.    பிறப்பால் வலிந்து ஒரு தொழிலைச் செய்யப் பலவந்தப்படுத்தும் பொழுது இது ஒருக்காலத்திலும் சாத்தியமாகாது.   பிறப்பால் கோவிலில் இருக்கும் குருக்கள் உட்பட.   பிறப்பினால் பிரதமாரானோம் என்ற அவநம்பிக்கை அவ்வப்பொழுது இந்திராகாந்தியையே வதைத்திருக்கும் என்று நம்புபவன் நான்.   தொழிலையும் பிறப்பையும், அது எந்தத் தொழிலாக இருந்தாலும், பிரித்தெடுப்பது மிக முக்கியம்.   அதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழியாக எல்லா தொழிலகளிலும் கருவிகளைப் புகுத்துவதுதான் என்று தோன்றுகிறது.   நம்மூரில் வெட்டியான் என்பது தாழ்ந்த தொழில் ஆனால் இங்கே “Funeral Director”  சமூகத்தில் மிகவும் கௌரவமானது.   இரண்டுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசம் கருவிகளின் பயன்பாடு.

    இங்கே அற்புத முடியலங்காரச் சாதனங்கள் கிடைக்கையில் என் மகன்களுக்கு நானோ, என் மனைவியோதான் முடி வெட்டிவிடுகிறோம். இன்றளவும் அவர்கள் சலூனுக்குப் போனதில்லை.  இதில் கட்டாயம் பெருமிதம் இருக்கிறது.  நம் அடிப்படைத் தேவைகளுக்கு பிறரை நாடாமல் இருக்க்ப்பது உன்னதமான விடயமாகத்தான் தெரிகிறது எனக்கு.  இதில் கட்டாயம் நுட்பத்தின் பங்கு நிறையவே இருக்கிறது.

    ஒருகாலத்தில் அறிவை பிறப்பினால் மறுக்கும் நிலை நம்மிடையே இருந்தது உண்மைதான்.  ஆனால் இன்றைக்கு இது பெருமளவில் மறைந்துவிட்டது.    இதன் அடுத்த கட்டமாக நுட்பங்களைப் புகுத்துவது அவசியம்.  எனவே, மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி தலித் தலைவர்கள்  (சமூக முன்னேற்றத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட ஒவ்வொருவர்களும்) நுட்பங்களின் பங்கைத் தம் மக்களுக்குப் போதிக்க வேண்டும்.   அந்த நிலையில் அம்பட்டன், நாவிதன், பரியாரி என்று பிறப்பால் பணிக்கப்படுவது மறைந்துபோய் சிகையலங்காரக் கலைஞர்கள் என்று பெருமைமிக்க, ஆதாயமிக்கத் தொழிலாக மாறிப்போகும்.    அப்பொழுது பிறப்பு வித்தியாசமின்றி  எல்லோரும் அதில் முனைவது நிச்சயம்.

    விடுதலைக்கு வெளியிலிருக்கும் சக்திகளுடன் போராடிக்கொண்டிருப்பதுடன் சமூகத்தின் உள்ளிருந்தே இந்த மாற்ற்த்தை விதைப்பதும் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது.     ஒத்த/மாற்று கருத்துக்களை அறிய ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன்.

    —-

    இன்றைக்கு உலகப் பேரழகிகளில் ஒருவராகக் கருதப்படும் ஆஞ்சலீனா ஜோலி தான் சிறுவயதில் Funeral Director  ஆக விருப்பப்பட்டதைச் சொல்லியிருக்கிறார்;

    “I wanted to be a funeral director,” she says. She goes back into her office and returns with incontrovertible evidence: her copy of the 1987 Funeral Service Institute Handbook. “It was one of those by-mail courses to learn how to be a funeral director,” she says.

    42 Responses to தலையில் சுமக்கப்படும் அவலங்கள் – சில தீர்வுகள்

    1. Padma Arvind
      March 12, 2006 at 3:45 pm

      வெங்கட்: அறிவியல் வளர்ச்சியும், கல்வியறிவும் முக்கியம். உதாரணமாக வங்கிகல் கணிணி மயமாக்கப்பட்டபோது பலருக்கு வேலை போகலாமென்று அரசியல்வாதிகள் தூண்டிவிட்டு சுய ஆதாயம் தேட முயன்றனர். கருவி மயமாக்கலும் வேறுவேலைக்கு செல்ல போதிய கல்வியறிவும், தொழில் துறைகளில் பயிற்சியும் தரப்பட வேண்டும். அரசியலாக்காமல் இதற்காக திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். ஆசியாவில் இன்னும் 53% சரியான கழிவறைகள் தேவை. சபர்மதி, மீரட் போன்ற இடங்களில் இதே கொடுமைதான் என மனித உரிமை கழகம் செயல்பட முனைந்துள்ளது. இவை ஏற்படும் வரை குறைந்த பட்சம் அவர்கள் சுகாதாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவும், போதிய கையுறைகள், மூக்கு வாய் ஆகியவற்றை துணி கொண்டு மூட, இலவசமாக கையுறைகள் போன்றவை வழங்கலாம். கல்வியறிவும் சுகாதார பாதுகாப்பும், கருவிமயமாக்குதலிலும் இந்தியா செயல்பட வேண்டும். புத்தக அறிமுகத்திற்கு நன்றி

    2. venkat
      March 13, 2006 at 7:34 pm

      பத்மா, இன்று காலைதான் காத்திருந்த உங்கள் கருத்தை இங்கே அனுமதிக்க முடிந்தது. இப்பொழுதுதான் பதிலெழுத முடிகிறது. மன்னிக்கவும்.

      குறைந்த பட்சம் நீங்கள் ஒருவராவது இதற்குக் கருத்தெழுதியிருப்பதற்கு நன்றி. நம் மக்களுக்கு இதெல்லாம் விவாதத்திற்கு உகந்த விஷயங்களாகப்படவில்லை போலிருக்கிறது. :(

      நீங்கள் சொல்லது பணியில் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்தது (கையுறைகள், இன்னபிற). நான் சொல்ல வருவது இவற்றைக் கடந்து மனிதனின் நேரடித் தொடர்பு இல்லாமலேயே முற்றிலும் கருவிகளைக் கொண்டு சுகாதாரக் கேடான தொழில்களை நிறைவேற்றுவது. இப்படியொரு நிலை வந்தால்தான் நம்மில் செய்தொழிலில் தாழ்ச்சி-உயர்ச்சி சொல்லும் மனப்பாங்கு விட்டொழியும். அதுவே சாதீயக் கொடுமைகளை ஒழிக்கும்.

    3. Padma Arvind
      March 13, 2006 at 8:15 pm

      நன்றி வெங்கட். கருவி மயமாக்கப்படும் வரை சுகாதார கன்காணிப்பும் தகுதியை மேம்படுத்த கல்வியறிவும் தேவை.

    4. March 13, 2006 at 9:34 pm

      வெங்கட் அவர்களே,

      மிக நல்ல பதிவை அளித்துள்ளீர்கள். தங்களுக்கு கிடைக்கும் அவமானங்களிலிருந்து மீண்டு வர தலித்துகளே முயற்சி செய்ய வேண்டும் என்பதைக் கூறும் முகமாக நான் தலித்துகளை முதலில் இரட்டை தம்ளர் முறை செயலில் இருக்கும் டீக்கடைகளை பகிஷ்கரித்து தங்களுக்கான டீக்கடைகளை தாங்களே அமைத்துக் கொள்ளும்படிக் கூறினேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html

      அதற்கு வந்தப் பின்னூட்டங்கள் முக்கால்வாசி எதிர்மறையாகவே இருந்தன. இத்தனைக்கும் நான் கூறிய யோசனைக்கு ரொம்ப முதலீடு எல்லாம் தேவையில்லை. இருப்பினும் இதெல்லாம் நடக்காத காரியம் என்றே பலர் பின்னூட்டமிட்டு அரசுதான் தீர்வு தர வேண்டும் என்று கூறினர். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

      நீங்கள் கூறுவது போல இயந்திரங்களை உபயோகித்து வேலை செய்தால் அவ்வேலைகளை செய்ய பலர் முன்வருவார்கள் என்றுதான் தோன்றுகிறது. இங்கு கூட எக்ஸ்னோரா அமைப்பு மூலம் குப்பை அள்ளுவதை தனியார்மயமாக்கியதற்கு நகராட்சியில் வேலை செய்யும் பல ஸ்வீப்பர்கள் தங்கள் வேலை வாய்ப்பு போய் விடுவதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் தனியாரிடம் வேலை செய்யத் தயாராக இல்லை. ஏனெனில் அரசு ஊழியர் என்ற பெயரை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. பிரச்சினைதான்.

      பேங்குகளில் கணினி அறிமுகமானபோதும் இவ்வாறுதான் யூனியன்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இப்போது பல பேங்குகளில் தேவையற்ற ஸ்டாஃப் குறைந்தாலும், வேலை பாட்டுக்கு நடக்கிறது. அதே நிலை மற்ற இடங்களிலும் நடக்கும் என்றே எதிர்பார்ப்போம்.

      இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக அதன் நகலை என்னுடைய மேலே குறிப்பிட்ட இரட்டை தம்ளர் பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html

      அன்புடன்,
      டோண்டு ராகவன்

    5. venkat
      March 13, 2006 at 10:21 pm

      டோண்டு, நான் சொல்ல வந்ததைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      நான் ஒருப்போதும் தலித்துகளுக்கான தீர்வை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல மாட்டேன். (இரட்டைத் தம்ளர் முறையை அவர்களாகவே புறக்கணித்து வெற்றி காணமுடியாது). ஆண்டாண்டு காலமாக அடக்கிவைக்கைப்பட்டிருந்த தலித்துகளுக்கு பிற சமுதாயங்கள் நேரடி உதவியளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன (அந்த உதவியை அளிக்க முற்படுவதன் மூலம் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்படும் சிலபல இழப்புகளையும் உள்ளிட்டு).

      என் பதிவில் நான் தெளிவாகச் சொல்லியிருப்பது “அரசாங்கத்தையும், அரசியல் கட்சிகளையும் வற்புறுத்த வேண்டும்”. இதில் எங்கும் அவர்களாகவே எல்லா கருவிகளையும் உருவாக்கிக் கொண்டு உய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அந்தக் கருவிகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் கடமை என்பது என் தீர்வு (உருவாக்கிக் கொடுப்பது என்று எழுதும்பொழுது வேதனையாகத்தான் இருக்கிறது. அதை ஏன் உருவாக்கி ‘தலித்துகள் கையில்’ கொடுக்கவேண்டும் என்ற நிலையே அபத்தமானது. ஆனால் இது வலிதரும் உண்மை. தீர்வின் முதல்கட்டமாக மட்டுமே நான் இதைப் பார்க்கிறேன். அதாவது இப்பொழுதிருக்கும் தொழிலாளிகளிடம் கருவிகள் கொடுப்பது. கருவிகள் வரவர இத்தொழில்களின் இழிவு குறைந்து பிற சமூகங்களும் பங்கெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்).

      மற்றபடி இரட்டைத் தம்ளர் முறை போன்ற அபத்தத்தின் உச்சகட்டத்தை அரசின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுதான் மிகச் சரியானது. இதில் எனக்கு மாற்று கருத்தில்லை. இதில் எந்தவிதமான தார்மீகத் தவறுகளும்கூட இல்லையென்றுதான் நான் நம்புகிறேன்.

    6. March 14, 2006 at 12:36 am

      “மற்றபடி இரட்டைத் தம்ளர் முறை போன்ற அபத்தத்தின் உச்சகட்டத்தை அரசின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுதான் மிகச் சரியானது. இதில் எனக்கு மாற்று கருத்தில்லை.”

      நீங்கள் சொன்ன இந்த முறையை கடந்த 55 ஆண்டுகளாக செயல்படுத்த முடிந்ததா? நான் கூறியது லேட்டரல் திங்கிங் என்ற குறுக்கு வெட்டு முறையில் யோசிப்பதேயாகும். ஏற்கனவே நாடார் சமூகங்கள் செய்ததுதான். அவர்கள் செய்ததை ஏன் மற்றவர்களும் சிந்திக்கக் கூடாது? நேரடியாக எதிர்ப்பது பலன் தரவில்லையென்றால் வேறு வழிகளில் சிந்திப்பதுதானே முறை?

      யுத்தம் என்று வந்தால் எல்லா வழிகளிலும் செய்து பார்ப்பதுதான் முறை. குதிரைக்கு கண் பக்கம் கூடு போடுவதுபோல இருக்கக் கூடாது.

      இந்தப் பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக அதன் நகலை என்னுடைய மேலே குறிப்பிட்ட இரட்டை தம்ளர் பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html

      அன்புடன்,
      டோண்டு ராகவன்

    7. March 14, 2006 at 6:03 am

      “நம் மக்களுக்கு இதெல்லாம் விவாதத்திற்கு உகந்த விஷயங்களாகப்படவில்லை போலிருக்கிறது.” // உங்கள் வருத்தம் புரிகிறது. ஒரு பதிவாளன், தமிழ்மணத்தில் உள்ளவன் என்ற முறையில் என் தனிப்பட்ட மன்னிப்புக் கோறலை உங்கள் முன் வைக்கிறேன். மன்னிக்கவும்.

      என் வயதுக் காலத்திலேயே கிராமங்களில் கூட நாவிதர் (பழைய பெயர் – குடிமகன்)என்ற இழிநிலை மறைந்து விட்டது; வண்ணார் குலமும் அந்த அவல நிலைகளிலிருந்து வெளிவந்து விட்டது. – எல்லாமே ‘ஏறக்குறைய’ என்ற அடைமொழியோடு எழுதுவது நலமென நினைக்கிறேன்.

      நீங்கள் சொன்ன 3பிளேடு ஜில்லட்ட்டின் (இங்கு இன்னும் 5 பிளேடு வரவில்லை!)வந்த பிறகும், வீடுகளில் வாஷிங் மெஷின்கள் வந்த பிறகும் இந்த இரு சாதி அடையாளங்கள் அவர்கள் மேலிருந்து இறங்கியுள்ளன. அதிலும் வீட்டுக்கு வந்து அழுக்குத்துணி சேகரித்தவர்கள் லாண்டரிக் கடை போட்டப் பிறகும்,அதே போலவே, வீட்டுக்கு வந்த நாவிதர் சலூன் கடை போட்ட பிறகும் அவர்களின் identitiy முழுவதுமாக மாறிவிட்டது.

      கொஞ்சம் மாறியிருக்கிறோம். இன்னும் நிறைய மாற்றங்கள் தேவை. கருவி மயமாக்கல் நிச்சயமாக இந்த நாற்றமெடுக்கும் பாரதத்தை மாற்றும்; அது மட்டுமே மாற்ற முடியும். ஆனால், என் வழக்கமான் ஐயம்: எந்தப் பூனைக்கு யார், எங்கே, எப்படி மணி கட்டுவது?

    8. March 14, 2006 at 6:37 am

      டோண்டுவின் ‘இரட்டைத் தம்ளர்’ மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கே நீங்கள் இங்கு இட்டிருக்கும் உங்கள் பின்னூட்டத்தை நான் (உங்கள் அனுமதியின்றே) அங்கே அளித்துள்ளேன். உங்கள் தனி முகவரி தெரியாததால் முன் அனுமதி பெற வழி தெரியாது இப்படி செய்துள்ளேன். மீறலாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். தவறெனின் மன்னிக்க. என் முகவரி:
      dharumi2@gmail.com

    9. sarah
      March 14, 2006 at 7:30 am

      //அதிலும் வீட்டுக்கு வந்து அழுக்குத்துணி சேகரித்தவர்கள் லாண்டரிக் கடை போட்டப் பிறகும்,அதே போலவே, வீட்டுக்கு வந்த நாவிதர் சலூன் கடை போட்ட பிறகும் அவர்களின் identitiy முழுவதுமாக மாறிவிட்டது.
      //

      sir, I think since you are living in madhurai, this happens. Still in my aunts house which is a village near palani, even now “naasuvan” used to come to do that job for my periappa and the other village high caste people sitting in the varaandaah. Even now, the dobby ( we call her house as vaannaan viiidu) used to come and give sarees for all teh weddings too, even now. But i didnot see this only in one villages, to my knowledge personally i can point out minimum 5 villages where i lived and have direct experience.

      In villages, it is not gone even in 2006

      Only in the towns it is finished to some extent. But in villages you can clearly see these people named after their profession, and still continuing to be the same.

      Thank you venkat for writing about these aspects. Unless and util governement forcibly takes action, i feel that the situation will continue forever.

      sarah

    10. தாணு
      March 14, 2006 at 11:26 am

      தருமி சொன்னதுபோல் சலூன்களும் சலவை நிலையங்களும் வந்த பிறகு , நகர்ப் புரங்களில் ஓரளவு சாதீய அடையாளங்கள் மாற்றப் பட்டிருக்கலாம். ஆனால் இன்னமும்கூட நானிருக்கும் பகுதியிலெல்லாம், சில குடும்பத்துக்கு ஒரு நாவிதர், துணிதுவைப்பவர் எல்லாம் பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைகள்தனத்துடன் வாரிசுகளாக இருக்கிறார்கள். இது நன்கு படித்து சுய மரியாதையில் ஊறியதாக பீற்றிக் கொள்பவர்களின் வீட்டிலும் உள்ளதை நான் அறிவேன்.
      நம்மால் முடிந்தது, வெங்கட் சொன்னதுபோல் குறிப்பிட்ட வேலைக்கென ஒருவரை பணி அமர்த்தியிருந்தாலும், அந்த வேலையில் நம்மால் செய்யக் கூடிய அளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே! இன்றும்கூட எங்கள் வீட்டின் கழிவறை நான் குளிக்கும்போது என்னால் தான் கழுவப்படும்,அதைச் செய்ய ஒரு ஆள் அமர்த்தியிருந்தாலும் கூட.(வேலைக்கு ஆளே இல்லாமல் முடியாது, நம் பணி அப்படி) சிறுதுளிதான் என் பங்கு என்றாலும் சந்தோஷம் தரும் வேலை!

    11. March 15, 2006 at 12:43 am

      அன்புள்ள வெங்கட்,

      இப்பதிவைப் பற்றி எனக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி என்னுடைய கருத்தை பின்னூட்டமாக அளிக்கும்படி என் அருமை நண்பர் தருமி அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக மட்டுமே இதை எழுதுகிறேன்.

      சாதாரணமாக இம்மாதிரியான விஷயங்களில் நான் என்னுடைய கருத்தை எழுதுவதே இல்லை.

      ஏனென்றால் இதுபோன்ற பதிவுகளில் வரும் விஷயங்கள் மலையேறிபோய் காலங்கள் பல சென்றுவிட்டன.. எங்கோ ஒரு மூலையில் இன்னமும் பழக்கத்திலிருக்கும் இதுபோன்ற விஷயங்களைப்பற்றி எழுதி இது இன்னமும் இருக்கிறது, இருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டி எழுதுவதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை.

      நான் என்னுடைய வங்கி அனுபவத்தில் பல குக்கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். நீங்கள் இருப்பதாக கூறும் பழக்கங்களை எங்கோ ஒரிரண்டு இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தங்களை எந்தவிதத்திலும் யாரும் இழிவுபடுத்தியதாக என்னிடம் முறையிட்டதில்லை. DRI என்ற அரசு திட்டத்தில் என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்றவர்கள் பலரும் Scavengers எனப்படும் கழிவறை சுத்தம் செய்யும் தொழிலை செய்பவர்கள்தான். கவனிக்கவும்.. இது வெறும் ஊதியத்திற்காக அவர்கள் செய்யும் தொழில். இதில் எந்தவித இழிநிலையையும் சமுதாயமோ அல்லது அவர்களைச் சூழ்ந்துள்ளவர்களோ அவர்கள் மேல் இப்போது காண்பதில்லை. இதுபோன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என தங்களைக் கூறிக்கொண்டு மறைந்துக்கொண்டிருக்கும் பழக்கங்களைப் பற்றி இனியும் எழுதி அதில் ஈடுபட்டிருப்பவரை ஏதோ தீண்டப்படாதவர்களென சமுதாயம் கருதி ஒதுக்குவதாக ஒரு பிரம்மையை, பிம்பத்தை ஏற்படுத்தாதீர்கள், ப்ளீஸ்..

      இத்தருணத்தில் நான் நேரில் அனுபவித்த ஒரு நிகழ்ச்சியை கூறலாம் என்று நினைக்கிறேன்.

      சென்னையிலுள்ள ஒரு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஒரு அலுவல் விஷயமாகச் சென்றிருந்தேன். அந்நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக differently abled என்பார்களே அவர்களை அதிக அளவில் பணியில் சேர்த்ததற்கான விருதைப் பெற்ற நிறுவனம். நானும் என்னுடைய சக அதிகாரி ஒருவரும் அந்நிறுவன வாயிலில் நுழைந்தபோது எங்களை வரவேற்க அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வந்தார். அப்போது ஒரு உடல் ஊனமுற்ற ஒரு கணினி பொறியாளர் கைகளால் ஊர்ந்து ஒரு அறையில் இருந்து வேறொரு அறைக்கு சென்றுக்கொண்டிருந்தார். எங்களுடன் நின்றுக்கொண்டிருந்த நிர்வாக இயக்குனரோ அல்லது அந்நிறுவனத்தின் வேறு அதிகாரிகளோ அதைக் கண்டுக்கொள்ளவே இல்லை. நானும் அதைப் பொருட்படுத்தாமல் நின்றிருந்தேன். என்னுடன் வந்த அதிகாரி மட்டும் அவர் சென்று மறையும் வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கும் என்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அவருடைய செய்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. நாங்கள் நிர்வாக இயக்குனரின் அறைக்குள் நுழைந்தது என்னுடன் வந்த அதிகாரி அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு சார் இந்தமாதிரி ஆளுங்களுக்கு நீங்க செய்ற உதவி மகத்தானது என்றார். அவர் அமைதியாக நான் ஒன்று கூறினால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே என்று கேட்டுவிட்டு சொன்னார். அவர்களை நீங்கள் பார்த்த கோணத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை. அவர்களும் நம்மிடமிருந்து பச்சாதாபத்தையல்ல ஒரு அங்கீகாரத்தையே எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் அவர் சென்று மறையும் வரை பார்த்தது அவருடைய மனதில் நிச்சயம் ஒரு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும். இனிமேல் அப்படி செய்யாதீர்கள் என்றார்.

      ஆம்.. அதையேத்தான் நானும் இங்கு கூறவிரும்புகிறேன்..

      Just leave them alone.

    12. venkat
      March 15, 2006 at 9:43 am

      பின்னூட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி! வேலைப்பளு காரணமாக நேற்று பதிலெழுத முடியாமல் போய்விட்டது. இன்று ஒவ்வொன்றாக (கூடியவரை) எழுதுகிறேன்.

    13. venkat
      March 15, 2006 at 9:45 am

      தருமி, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! அடையாளங்கள் முழுவதுமாக அழிந்துபோய்விடவில்லை. ஆனால் அவற்றை அழிக்கும் வழி என்ன என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது. என் பதிவின் நோக்கம் அதுதான். திரு. டோண்டுவின் பதிவில் என் பின்னூட்டத்தை மறுபதிப்பு செய்ததற்கு நன்றி!

      உங்களுக்கிருக்கும் முக்கியமான  ஆதங்கம் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது.  இதற்கு விடையாகத்தான் நான் இந்தப் பதிவையே தொடங்கியிருக்கிறேன். தலித்துகளின் தலைவர்களாக அறியப்படுபவர்களுக்கு இதில் முக்கிய பங்கிருக்கிறது.  அவர்கள் வெறும் ஓசை எழுப்பிக் கொண்டிருப்பது, இன்றைய அவலத்திற்குப் பொறுப்பு பார்ப்பனர்களா அல்ல சாதி இந்துக்களா என்று வாதிட்டுக் கொண்டிருப்பது,  முக்கிய வேலையாக தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது, தமிழச்சியின் கற்புக்குப் பங்கம் வராமல் பாத்துக்கொள்வது என்று செய்துகொண்டிருக்கும் காரியங்களில் எனக்குப் பொறுமையிழந்து போகிறது.   மாறாக ஆக வேண்டியது என்ன என்று பட்டியலிட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் முன்வைத்து, குறிப்பிட்ட கால இலக்குக்குள் அவற்றை அடையப் பாடுபட வேண்டியது (இடையில் தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஒன்றும் அழிவு வந்துவிடாது).  எனத் தம் மக்களின் நேரடி நலனை இலக்குவைத்துச் செயல்பட வேண்டியது முக்கியம் என்பது என் கருத்து.

      உதாரணமாக, இந்தியாவின் பெரும் நிறுவனமான இரயில்வேயை முதலில் எடுத்துக்கொள்ளலாம். இன்னும் ஐந்து வருடங்களுக்குள் இந்திய இரயில்வேயில் கழிவு சுத்திகரிப்புத் தொழிலுக்கு நேரடி மனிதபலத்தைப் பயன்படுத்தக்கூடாது.  இயந்திரங்கள் தேவை என்று வரையறுத்துக்கொண்டு அதில் போராடலாம்.   இப்படித் தெளிவாக வரையறுக்கப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்பொழுது  தங்கள் கவனத்தை குஷ்பு, தங்கர்பச்சான், சுகாசினி என்று சிதறவிடுவது நியாயமா?

      ஏன் தலித் தலைவர்கள் மாத்திரம் செய்ய வேண்டும்?  இவ்வளவு தலைமுறை அவர்களை அழித்துக் கொழித்தீர்களே உனக்கு இதில் பங்கில்லையா என்று கேட்கக்கூடும்.  கட்டாயம், நம் எல்லோருக்கும் பங்கிருக்கிறது.  ஆனால் செயல்முறையில் பார்க்கும்பொழுது இதை முன்னின்று நடத்தும் தகுதியும் திறமையும் அவர்களுக்கு மாத்திரமே இருப்பதாகத் தெரிகிறது.    தலித்துகள் அல்லாதா நம்மில் பலருக்கும் இதில் ஆர்வமிருக்கிறது.   இது பெரும் சக்தியாக உருவாகும்பொழுது இந்த ஒத்தநெஞ்சினரின் நேரடிப்பங்கு கட்டாயம் வரும். ஆனால் முன்னின்று நடத்தும் திறமை இல்லாததுபோல்தான் தோன்றுகிறது.   எனவே பூனைக்கு மணி கட்ட வேண்டியது அந்தத் தலைவர்கள்தான்.

    14. venkat
      March 15, 2006 at 10:07 am

      சரா – நகரங்களில் மாறிவிட்டது (அல்லது குறைந்தபட்சம் மாறிக்கொண்டு வருகிறது, அல்லது மாறுதலுக்கான சாத்தியங்கள் தென்படுகின்றன என்பதில் உங்களுக்கு மறுகருத்து இல்லை என்று நம்புகிறேன்). இதுதான் என் கருதுகோள். அப்படியான மாற்றத்திற்கான காரணிகள் நேரடியாகப் புலப்படும்பொழுது அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பிழையல்லவா? இதுதான் என் பதிவின் அடிநாதம். மாற்றத்திற்கான காரணிகளில் முக்கியமானதாக நான் கருதுவதை முன்வைத்திருக்கிறேன். (இல்லை வேறு காரணம் என்றால் யாராவது என்னைத் தெருட்டினால் நன்றியுடையவனாக இருப்பேன்). கிராமங்களில் மாறவில்லை என்பதை நான் கட்டாயம் ஒத்துக்கொள்கிறேன். ஏன் நகரங்களில் மாற்றம் விளைவிக்ககூடிய காரணிகளில் சிலவற்றை நாம் கிராமங்களில் முயற்சி செய்யக்கூடாது?

      என் பதிவின் நோக்கம் நேரிடைச் செயல்வழிக்கான சாத்தியங்களை ஆராய்வது. ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் தவறியவற்றையும், ஒருவருக்கொருவர் குற்றம் சாற்றுவதையும் தவறாது செய்துவருகிறோம்.

      நம்மில் படித்த, தொழில்நுட்பம் அறிந்த சமுக இயக்கியல் உணரக்கூடிய நண்பர்கள்கூட விரல்சுட்டும் காரணிகளையே திரும்பத்திரும்ப எழுப்பி இரைச்சலை மாத்திரமே உண்டாக்கிக் கொண்டிருப்பது வேதனையான விடயம். இது கட்டாயம் கவர்ச்சிகரமான விடயமில்லை. இந்துமதத்தை ஒழிக்கவேண்டும், பார்ப்பனர்களை அழிக்க வேண்டும் என்று சொன்னால் சுவாரசியமாகப் படிப்பார்கள், வரிந்துகட்டிக் கொண்டு கிறிஸ்துவனாக மாறியும் சாதி ஒழியாது, தலித்துகளின் இன்றைய எதிரி பார்ப்பனர்கள் இல்லை, தேவரும் நாடாரும் என்பார்கள். இந்த வாதங்களையும் எதிர்வாதங்களையும் மாத்திரமே இன்னும் எத்தனை நாட்களுக்கு எழுப்பி நாம் இன்பம் தூய்க்கப்போகிறோம் என்று தெரியவில்லை.

    15. venkat
      March 15, 2006 at 10:23 am

      தாணு – ஒருகாலத்தில் கழிவறையைக் கழுவ இன்னொருவரை நாம் சார்ந்திருந்த நிலையிலிருந்து இன்றைக்கு நாம் (நகரங்களில் வசிக்கும் நம்மில் ஒருசிலராவது) மாறி அந்த வேலையை இன்னொருவர் தலையில் கட்டாமல் இருப்பதற்கு எது உதவியிருக்கிறது என்று யோசிக்க வைப்பதே என் பதிவின் நோக்கம்.

      நூறுபேரை கழிவறை கழுவவைத்துத்தான் நான் சுத்தமாக இருக்கிறேன் என்று தன்னைத் தானே நொந்துகொள்ளமாலிருக்க, அந்த குற்ற உணர்விலிருந்து விடுபட, பிறரையும் விடுவிக்க படித்த நம்மால் முடியவில்லையென்றால் யார் செய்வார்கள்?

    16. March 15, 2006 at 10:48 am

      this is the reply, i’ve posted in thangamani’z blog.

      Its really humiliating to see those things (pee alluthal) in INDIA which considers itself to be a next super power (LOL)

      பதிவுக்கு சம்பந்தம் இல்லாத செய்தியாக இது இருக்கலாம்!

      மயிரை அலங்காரம் செய்த பின்னர் குளிப்பது சுகாதாரம் என்றால் இந்தியாவில் எத்தனை பேர் மயிரை வெட்டுவதற்கு முன், மயிரை கழுவி விட்டு அமட்டனிடம் தலையை கொடுக்க செல்கிறார்கள். தலைய கொடுக்கிறவன் எந்த சாதிக்காரனாய் இருந்தாலும்…

      புழுத்த, அழுக்குத் தலையில் ஒருத்தன் கைவைத்து மயிரை குறைக்கலாம்…ஆனா இவங்க சுகாதாரத்திற்காக மயிரை வெட்டியபின் குளிக்கலாம், மத்தவங்க சுகாதாரம் பத்தி எங்களுக்கு கவலை இல்லீங்கோ…

      மொதல்ல மனுசனை மனுசனாய் மதிக்க கத்துக்கோங்க…அப்புறம் பதிவெல்லாம் பக்கம் பக்கமாய் எய்தலாம்.

      நீ குளிச்சியான்னு என்ன பாத்து யாராவது கொளச்சீங்கன்னா, எனக்கு கருத்து தெரிஞ்சதிலிருந்து நா தலைய கழுவிட்டு தா மயிரு வெட்ட போயிருக்கேன். எனக்கு கருத்து தெரிஞ்சது 18 வயசுல…:-)

    17. Ramachandranusha
      March 15, 2006 at 10:48 am

      வெங்கட் நுனிப்புல் முதல் பதிவில் நான் தொட்ட விஷயம் இதுதான். நகரங்களில் மாறிவிட்டதா?
      சென்னையில் அடையாறு பகுதியில் தெருவில் அனைத்து மேன் ஹோல் மூடிகள் திறக்கப்பட்டு, ஒருவர் வெறும் கோவணம் மட்டும்
      அணிந்து எந்த உபகரணமும் இன்று முக்குளித்து தலையில் இருந்து கழிவு நீர் வழிய வழிய கழிவுகளை ஒரு கூடையில் எடுத்து
      தர இன்னொருவர் எடுத்து ஓரமாய் கொட்ட, பார்க்க பார்க்க நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்ற கேள்வி மனதில்
      எழுந்தது. திருமா போன்றவர்களுக்கு இந்த பிரச்சனையை தீர்க்க ஏதாவது செய்யக் கூடாதா என்ற ஆதங்கம் எழுந்தது.
      அடுத்து அதே சென்னையில் நாங்கள் இருந்த சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியின் உள்ளே ரங்கராஜபுரம் என்ற ஏரியா உள்ளது.
      முழுவதும் வன்னியர்கள் வசிக்கும் பகுதி என்று சொல்லப்பட்டது. உள்ளே அந்த தெருக்களை வலம் வரும் பொழுது சைதை ஆறு
      வந்தது. ஆற்றை ஒட்டிய பகுதி மிக சுகாதாரக்கேட்டுடன் இருந்தது. என்னுடன் வந்த வேலைக்காரம்மா அங்க போக வேண்டாம்,
      முடிவெட்டும் சாதியினர் வசிக்கும் பகுதி என்றார்.
      கழிவுகளை அகற்றுபவர்களைப் பற்றிய செய்தி ஒன்று. தமிழகத்தில் தெலுங்கு பேசும் வகுப்பினர் என்றும், ஆந்திராவில் அவர்கள்
      தமிழ் பேசுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. இது சரியான தகவலா என்று தெரியவில்லை. நான் பார்த்த சென்னையில் தெலுங்கு
      பேசுவார்கள்.

    18. Padma Arvind
      March 15, 2006 at 11:04 am

      ஜோசப் : நீங்கள் சொன்னதுபோல பல பழக்கங்கள் மாரிவிட்டன என்பதை நம்பவே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்னமும் கிராமங்களில் இந்த பழக்கம் இருப்பதாக புள்ளியியல் விவரங்களோடு பேசும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை. இரண்டு வருடங்கள் முன்பு நான் பொதுநலத்துறை, உலக சுகாதார மையம் குழுக்களில் கலந்துகொள்ளும் வரை.

    19. Jayashree Govindarajan
      March 15, 2006 at 11:58 am

      வெங்கட் மிக்க நன்றி ப்ளஸ் ஆச்சரியம். நான் சொல்லவந்த கருத்துகளையே அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயம் தொழில்நுட்ப மேம்பாடு, சட்ட திருத்தங்கள், இன்னும் பத்மா சொல்வதுபோல் செய்பவர்களுக்கான உறைகள் பாதுகாப்பு வசதிகள்தான் இந்தப் பிரச்சினையை தீர்க்கமுடியும்.

      இதை நான் சொல்லிவிட்ட இடம்தான் தவறாகி நேரவிரயம் ஆகிவிட்டது. :( இது தொடர்பான உங்கள் முதல்பதிவைப் படித்தேன். இந்தப் பதிவை கவனிக்கத் தவறி வசந்த் பதிவு வழியாக தாமதமாகவே வந்தேன். மிக்க நன்றி. புரிந்து கொள்பவர்கள் புரிந்துகொள்வார்கள். உங்கள் முயற்சிகளுக்கும் இந்தப் பதிவிற்கும் என் பாராட்டுகள்.

    20. Ramachandranusha
      March 15, 2006 at 12:29 pm

      ஜோசப் சார், நான் பார்த்த அடையாறு சம்பவம் சென்ற ஏப்ரல் மாதம் நடந்தது. அந்த ஏரியா முழுவதும் நாற்றம் குடலை பிடிங்கியது.

    21. தாணு
      March 15, 2006 at 3:36 pm

      வெங்கட்
      நீங்கள் கூறியது போல் ஒரு விழிப்புணர்வாவது வர வேண்டும் என்பதுதான் உண்மை. ஆனாலும் இது போன்ற விஷயங்களில் எந்திரமயமாகல் சில தீர்வுகலைக் கண்டிப்பாகக் கொடுக்கும். அந்தக் கால எடுப்பு கக்கூஸ் மாதிரி இருந்தால் என்னால் முனைந்து கழுவ முடியுமா? வெஸ்டர்ன் டாய்லெட் என்பதால் அருவெறுப்பின்றி செய்ய முடிகிறது. செப்டிக் டாங்க் க்ளீன் பண்ண புதுவித இயந்திரங்களுடன் கூடிய லாரிகளில் வரும் மனிதர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ய்யரும் பார்ப்பதில்லை. `சவரத் தொழில்’ மேம்படுத்தப் பட்டு `பியூட்டி பார்லர்கள்’ ஆனபிறகு `மேல்தட்டு’ மகளிரே அந்தத் தொழிலை ஆசையுடன் செய்கிறார்கள்.
      எனவே பேசிப் பேசி பிரச்னைகளைத் தீர்க்க முடியாது; தொழில் மேம்பாடுதான் ஒரே வழி.

    22. March 15, 2006 at 4:07 pm

      இந்தப் பதிவுசம்பந்தமா நண்பர் தருமிக்கு போட்ட பதிலை இங்கே போடறேன்.

      //அவர் இன்னும் 10 வருசத்துக்குள்ளே மாறுதல் வரணுமுன்னு சொல்றார். ஆனா எதுக்கு 10 வருசம்?
      வெளிநாட்டுலே கண்டுபிடிச்ச எத்தனை விஷயங்கள நம்ம நாட்டுக்கேத்தாப்புலே கொண்டுவந்துட்டோம்.
      அதுபோல இந்த சுத்தம் செய்யற மெஷினுங்களை பயன்படுத்தவும், வேணுமுன்னா அவைகளை இறக்குமதி
      செய்யவும் சிலமாதங்கள் போதாதா?

      ‘வேணுமெங்கில் பலா வேருலேயும் காய்க்கும்’ ( பழமொழி)

      மெத்தனத்துக்கு, செல்ஃபோன் மாதிரி இதுலே பணம் பண்ணமுடியாதுன்றது ஒரு காரணமா இருக்குமோ?

      மொதலாவது நம்ம ஜனங்களே சுத்தத்தின் அவசியத்தைப் புரிஞ்சுக்கிட்டு நடக்கணும். ச்சும்மா,’சுத்தம் சோறு
      போடும்’னு உரக்கப் படிச்சிட்டு வெளியே தெருவிலே அசிங்கம் செய்யக்கூடாது. இதுலே (மன்னிக்கணும்) ஆம்பிளைங்கதான்
      அதிகம். பொபளையாவது அக்கம்பக்கம் பார்க்க வேண்டியிருக்கு. பனகல் பார்க் எவ்வளோ பிஸியான இடம்?
      அங்கேகூட…ச்சே(-:

      அப்புறம் தண்ணிவசதி வேணும். இதுக்கெல்லாம் ‘கடல்’தண்ணியை பயன்படுத்த முடியும்தானே?

      அரசாங்கம் & மத்த பெரிய கம்பெனிங்க( இதுசம்பந்தமா புது பிஸினெஸ் ஆரம்பிக்கலாம்) சேர்ந்து செய்யணும்.
      மக்கள் வரிப்பணத்தை அரசியல்வாதிங்க தின்னறதை ச்சும்மா ஒரு வருஷம் விட்டாலும் போதும் இதெல்லாம் நடக்க.

      ஆனா………….. பூனைக்கு மணி கட்டறது யாரு?

      அடிப்படை வசதி செஞ்சு கொடுக்கறது அரசாங்கத்தின் கடமைன்னு இன்னமும் நினைக்கிறேன். செஞ்சு கொடுத்தபிறகு
      பராமரிப்பு மக்கள் கையிலே.

      என்னமோ தோணுது. சொல்லிட்டேன். //

      காசு பண்ணக்கூடிய விஷயங்கள் வெளிநாட்டுலே வந்த அடுத்த வருசமே, சிலசமயம் இன்னும் சீக்கிரமே இந்தியாவுக்கு
      வந்துருதேங்க. இதையெல்லாம் இன்னும் ஏன் கொண்டுவரலேன்ற ஆதங்கம்தான். பத்மா சொன்னதுபோல கையுறை,
      முகமூடி எல்லாம் சுத்தம் செய்யும் தொழிலாளர் பாதுகாப்புக்கு. ஆனா நான் கேக்கறது, இதையெல்லாம் போட்டுக்கிட்டு
      இன்னும் அவுங்களே சுத்தம் செய்யணுமான்னுதான்? எத்தனை விஷயம் மனித உழைப்பு இல்லாம நடக்குது, இதுக்கு
      மட்டும் ஏனாம்?

    23. venkat
      March 15, 2006 at 4:08 pm

      ஜோஸப் – உங்கள் ஆர்வமான நீளமான பதிலுக்கு நன்றி!

      நீங்கள் சொல்லும் “அவர்களைத் தனியே விடுங்கள்” என்பது உண்மையானாலும், இது ஒரள்வுக்குத்தான் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். நல்ல மனதால் வேலை கொடுத்தபின் வேண்டுமானால் ஊனமுற்றவர்களை அவர்கள் போக்கில் விட்டு தனித்துக் காட்டாமல் தன்னிறைவையும் கௌரவத்தையும் கொடுக்கலாம். ஆனால் இதற்கு முதல் வேலை அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது. அந்த நேரத்தில் அவர்களுடைய தாழ் நிலையை அங்கீகரித்துச் செயல்படுவது முக்கியம். முன்னேறிய நாடுகளிலும் ஊனமுற்றவர்கள், முதியோர், போன்ற உதவி தேவைப்படுவர்களைத் தனித்து அங்கீகரித்து உதவி செய்வதுதான் வழக்கம்.

      நம்மூரில் பெரும்பாலும் கோவில் வாசலில் இருக்கும் முடவனுக்குப் பத்து பைசா போட்டால் புண்ணியம் என்றுதான் நினைப்பார்கள். அந்தப் பத்துபைசாவை விட அவரது சுயசார்புக்கு வித்திடத்தக்க வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களின் நீண்ட காலத் தேவையைப் போக்கும் என்று யாரும் சிந்திப்பதில்லை.

      இதேபோலத்தான் தலித்துகளுக்கு இன்றைக்கு எல்லாவற்றையும் விட முக்கியத் தேவை கல்வி. அவர்களுக்கு வழிகாட்ட முதல் முக்கியமாக இதையே நாம் முயற்சிக்க வேண்டும்.

    24. venkat
      March 15, 2006 at 4:22 pm

      பொட்”டீ”க்கடை. நீங்கள் சலூனுக்குப் போகுமுன் தலை குளித்துவிட்டுப் போவதாகச் சொல்லியீருக்கிறீர்கள். நான் அலுவலில் சுத்தம் செய்பவர் வருமுன் என் குப்பைத்தொட்டியைக் காலி செய்வதை எழுதியிருக்கிறேன்.

      இதெல்லாம் தொழிலைச் செய்பவரின் மீது நமக்கு இருக்கும் மரியாதையினால் தானாக வருவது. இந்த மரியாதையை உருவாக்குவதில் அவரின் திறமைக்கு முதலிடம் வகிக்கிறது. திறமையான தொழில்காரரென்ற்றால் நாம் அவரை மதிக்கத் தயங்குவதில்லை.

      தொழிலாளியின் திறமையை உயர்த்த உயர் நுட்பக் கருவிகள் பெரிதும் உதவி செய்கின்றன. இதைத் தான் என் பதிவில் நான் முன்வைத்திருக்கிறேன்.

    25. venkat
      March 15, 2006 at 4:26 pm

      உஷா,

      >வெங்கட் நுனிப்புல் முதல் பதிவில் நான் தொட்ட விஷயம் இதுதான். நகரங்களில் மாறிவிட்டதா?

      நான் சாரா-வுக்கு நகரங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று எழுதியதற்கான பதில் இது என்று நினைக்கிறேன்.

      கட்டாயம் நகரங்களில் சில விஷயங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் நீங்கள் சொன்ன பாதாள கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற சிக்கலான விஷயங்களை அது இன்னும் தொடவில்லை. ஆனால் மாற்றத்திற்கான அறிகுறிகளை, அதை விளைவிக்கும் காரணிகளை நாம் அடையாளம் கண்டு அவற்றைத் துரிதப்படுத்துவது நல்ல வழியல்லவா?

    26. Padma Arvind
      March 15, 2006 at 4:38 pm

      துளசி
      நான் மனிதர்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. கருவி மயமான நிலை வரும் வரை, அடிப்படி சுகாதாரத்தை பாதுகாப்பது என்ற அடிப்படையை கூட நாம் யோசிக்கவில்லை என்றுதான். கல்வியறிவை எப்படி அரசாங்கம் பொறுப்பெடுத்து செய்ய வேண்டும் என்பதை என் பதிவில் சொல்லி இருக்கிறேன். பலரும் கருத்தை தவறாக புரிந்துகொண்டு இந்த மக்களை பத்மா இன்னும் சுத்தம் மட்டுமே செய்ய சொல்கிறார் என்று வெட்டி ஒட்டி போட்டு பாடாய் படுத்துவதற்குள் இந்த பின்னூட்டம்:)கருவி மயமானால் இதனை நம்பியிருப்பவருக்கு வேரு தொழில்நுட்பங்கள் கற்றுத்தர வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறேன்.

    27. March 15, 2006 at 5:23 pm

      பத்மா,

      உங்க கருத்து தவறுன்னு சொல்லலை. ஒருவேளை நான் சொன்னதோட ‘தொனி’ அப்படின்னு
      நினைச்சுகீட்டீங்களா? கருவி வரும்வரை மனுஷனுக்குப் பாதுகாப்புன்றது நல்லவிஷயம்தான். ஆனாகருவியைக்
      கொண்டுவர்றதுலே ஏன் மெத்தனம்/காலதாமதம்னு ஒரு ஆதங்கம்தான்.

      யாரா இருந்தாலும், அடிப்படைக்கல்வி அவசியமுன்னுதான் நனும் நினைக்கிறேன். படிப்புன்னு வந்தாலே
      அதைக்கொண்டு வேற வேலைக்குப் போயிருவாங்கதானே?

      என் கருத்தைப் புரியும்படியாகச் சொல்லாததால் வந்த குழப்பம் இது. தவறுக்கு மன்னிக்கணும்.

    28. March 15, 2006 at 5:26 pm

      //நம்மில் படித்த, தொழில்நுட்பம் அறிந்த சமுக இயக்கியல் உணரக்கூடிய நண்பர்கள்கூட விரல்சுட்டும் காரணிகளையே திரும்பத்திரும்ப எழுப்பி இரைச்சலை மாத்திரமே உண்டாக்கிக் கொண்டிருப்பது வேதனையான விடயம். இது கட்டாயம் கவர்ச்சிகரமான விடயமில்லை. இந்துமதத்தை ஒழிக்கவேண்டும், பார்ப்பனர்களை அழிக்க வேண்டும் என்று சொன்னால் சுவாரசியமாகப் படிப்பார்கள், வரிந்துகட்டிக் கொண்டு கிறிஸ்துவனாக மாறியும் சாதி ஒழியாது, தலித்துகளின் இன்றைய எதிரி பார்ப்பனர்கள் இல்லை, தேவரும் நாடாரும் என்பார்கள். இந்த வாதங்களையும் எதிர்வாதங்களையும் மாத்திரமே இன்னும் எத்தனை நாட்களுக்கு எழுப்பி நாம் இன்பம் தூய்க்கப்போகிறோம் என்று தெரியவில்லை.//

      இந்த வரிகள் என்னையும் சுட்டுவதாக நான் புரிந்துகொள்வதால் சில விதயங்களை மட்டும் சொல்லி விலகுகிறேன்..

      1. இந்து மதம்-பார்ப்பனர் இதை இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஒன்றாக புரிந்துகொள்ளப்போகிறீர்கள்?

      2. இந்து மத ஒழிப்பு, சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல என் போன்றவர்களுக்கும் கூட ஏன் அவசியம் என்பதை என்னை விட சமூக இயங்கியலில் அதிக அறிவும், செயல்முறை அனுபவமும், கொண்ட அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக விஞ்ஞானிகளை இப்போதும் புறந்தள்ளி காருண்ய உபதேசங்கள் கேட்டு நடக்கவேண்டிய காலங்கள் மாறிவிட்டன.

      3. தலித்துகளை ஒழிக்கவேண்டும் (அப்படியொரு நிலை அல்லாது) என்பதை சரியாகப் புரிந்துகொள்ளுகிற உங்களைப்போன்ற நண்பர்கள் கூட பார்பனர்களை ஒழிக்கவேண்டும் என்று பெரியாரோ, அம்பேத்காரோ சொன்னால் புரிந்துகொள்ள முடியாமற் போவது ஏன் என்பது ஆச்சர்யம் தான் தருகிறது.

      4. இந்து மதம் என்றால் என்ன- அதன் ஒழிப்பு என்றால் என்ன என்பதைக் குறித்து அதையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்று சொன்னவர்களைப் படித்து பிறகு அதைப்பற்ற்றிய விவாதங்களைச் செய்தல் உங்களைப்போன்றவர்க்கு அழகு வெங்கட். அல்லாவிடில் பார்பனர் என்பதில் பெருமைகொள்ளுங்கள் என்று வலைப்பதிவு செய்பவர்களின் கருத்துக்களில் இருந்து இதை வேறுபடுத்தி புரிந்து கொள்ளுதல் இயலாததாகிவிடும்.

      5.இன்பம் துய்க்க எழுதுவதாய்ச் சொல்வதை நான் எழுதுவதே உங்களுக்கு துன்பம் விளைவிக்கத்தான் என்பதாக புரிந்துகொள்ளலாமா வெங்கட்? குடைபிடிப்பதும், செருப்பணிந்து நடப்பதும் ஒரு சாராரை அவமானப்படுத்தத்தான் என்ற அகராதியின் புதிய பதிப்பு என்று கொள்ளலாமா?

      6. இந்து மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஒழிப்பதுதான் (அவர்கள் ஒழிக்கவிரும்பிய விதத்தில) தங்களுக்கு சமூக விடுதலைக்கான வழியென்று சொன்னால், விவாதித்தால் அதைச் செய்ய அவர்களுக்கே மிக அதிகமான உரிமை/ தேவை இருக்கிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள முயலாமல் இதெல்லாம் அநியாயம் என்று சொல்ல ஓடிவருபவர்களின் நியாய உணர்வு பற்றி உங்களூக்கு கேள்வி எழவில்லையா வெங்கட்? பீயள்ளுவர்களுக்கான் இப்படி ஒரு தீர்வை முன்வைக்க உங்களுக்கு இருக்கும் அதே உரிமையில் இந்து மதத்தை ஒழிப்பதுதான் அதற்கான தீர்வு என்பதாய் ஒரு வாதத்தை அவர்கள் சொன்னால் அதற்குத்தான் நான் அதிக கவனம் கொடுப்பேன் வெங்கட். ஏனெனில் இந்து மதத்தை காப்பாற்ற அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை என்பது ஒருபுறம், இன்னொரு புறம் இந்த வாதத்தை முன்வைப்பவர்களான புத்தர், பல சித்தர்கள், பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் மற்ற எவரையும் விட மனிதநேயத்தையும், சர்வ ஜன சமத்துவத்தையும் விழைந்த சமூக விஞ்ஞானிகள் என்பதாலும்.

      7. கடைசியாய் திரு Jayashree Govindarajanக்கு:

      உங்கள் நேரவிரயம் என்னுடைய பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்டதால் நிகழ்ந்திருந்தால் அதற்காக என்னுடைய தாழ்மையான வருத்தங்கள். உங்கள் பின்னூட்டங்களில் நான் கண்ட அறியாமையின் நிழலை அலட்சியப்படுத்தியே நீங்கள் சொல்லிய தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உங்கள் கருத்துக்களை புரிந்துகொள்ள முயன்றேன். ஆனாலும் அதனால் பயனில்லை என்றே உணர்கிறேன். உங்களுக்கு பெரியாரைப்படிக்க வேண்டுமென்றாலும் ரோசாவசந்துகள் போன்ற நம்பிக்கையான இடம் வேண்டும; பின்னூட்டமிடவேண்டுமென்றாலும் வெங்கட்டின் பதிவுகள் தான் வேண்டுமென்றால் நல்லது Jayashree, நீங்கள் விரும்பியது கிடைக்க வாழ்த்துக்கள்.

      நன்றி.

    29. March 15, 2006 at 6:03 pm

      வெங்கட், புத்தக அறிமுகத்திற்கு நன்றி! (தாமதமாகச் சொன்னாலும்).

      இந்த அவலத்தைச் சிறுவயதில் பொள்ளாச்சியில் பார்த்திருக்கிறேன். வெள்ளையம்மாள் என்பவர் தினமும் காலையில் மலம் நிறைந்த நகராட்சி வண்டி ஒன்றைத் தள்ளிக் கொண்டு போவார். என்னவொரு கொடுமையான வேலையது! கடந்த பல ஆண்டுகளாக இந்நிலை இல்லையென்றே நினைக்கிறேன்.

      நம் மக்களின் அறியாமையும், மனநிலைமையும் ஒருவகையில் பல பிரச்சனைகளுக்குக் காரணம். துப்புரவில் அக்கறையில்லாமல் இருப்பது, துப்புரவு வேலையைச் செய்பவர்களை இளக்காரமாக நடத்துவது என்ற நிலையே பொதுவில் காணப்படுகிறது. தம் வீட்டுக் கழிவறையைச் சுத்தம் செய்வதையே கேவலமாகக் கருதுவோரின் ‘சுத்தத்தை’ என்னவென்பது!

      கழிவு நீர் அகற்றல், குப்பைகளை வாருதல் என்ற பல இன்றியமையாத பணிகளுக்கு உள்ளூருக்கு ஏற்ற நுட்பங்களை அறிமுகப்படுத்தலாம். ஆனால், சாலையில் திறந்த வெளித் தொட்டிகளை அமைப்பதோடு சுகாதாரப் பணியை முடித்து விட்டதாகப் பெருமை கொள்வோரையே காணமுடிகிறது.

      கோவையில் சமீப காலத்தில் ‘டேங்கர்லாரி’ போன்ற ஒன்றின் மூலமாக ‘செப்டிக்’குளங்களைத் தூர் வாரும் பணியைச் செய்வதாகக் கேள்விப்பட்டேன். நகரங்களில் அசுத்தங்களுடன் மெல்ல நுட்பங்களும் நுழைந்து கொண்டுள்ளன. ஆனால் வேகமும், வீச்சும் நிச்சயம் போதாது.

    30. Jayashree Govindarajan
      March 15, 2006 at 9:50 pm

      தங்கமணி, தவறாக நினைக்கவேண்டாம். சரியாகச் சொல்லாமல் உங்களை வருத்தியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். பின்னூட்டத்தை உங்கள் பதிவில் இட்டதற்காக வருந்தவில்லை. அது உண்மையான தீர்வு என்று நான் சொல்ல நினைத்தவைகளை நீர்த்துப்போகச் செய்து மற்ற ஜாதி/மத காரணிகளால் அலைக்கழிக்கப்பட்டு அதற்கான பின்னூட்டங்களாக (என்னுடையதும்) மாறிவிட்டதற்காகவும், தனிமனிதத் தாக்குதல்களாக நேர்ந்ததற்குமே வருந்தினேன். உங்கள் பதிவு என்று அந்தப் பதிவைக் கீழிறிக்கிப் பேசியதாக நினைக்கவேண்டாம். நிச்சயம் உங்கள் பதிவுகளை, கருத்துகளை வைக்காவிட்டாலும் விரும்பியே ஆழ்ந்து படித்துவருகிறேன். அலைக்கழிக்கப்பட்ட பின்னூட்டங்களே என்னைச் சோர்ந்துபோக வைத்தன. நன்றி.

    31. venkat
      March 15, 2006 at 10:58 pm

      >இந்த வரிகள் என்னையும் சுட்டுவதாக நான் புரிந்துகொள்வதால் சில விதயங்களை மட்டும் சொல்லி விலகுகிறேன்..

      தங்கமணி நான் நேரடியாக யாரையும் தனிப்படுத்தி விமர்சிக்கவில்லை. நம்மிடையே காணப்படும் பொதுப்போக்கைத்தான் அப்படிச் சொன்னேன். காரணம் சமூக மேம்பாட்டு விடயங்கள் எல்லாவற்றையுமே இப்படிப் பார்ப்பனர் ஒழிப்பு, இந்து மத ஒழிப்பு என்ற ரீதியில் மாத்திரமே இங்கே விவாதிக்கப்படுகின்றன. அவற்றைக் கடந்த தீர்வு முறைகள் பற்றி யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனைக்கு வேறொரு கோணம், வேறெரு தீர்வு, (அது முழுமையற்ற தீர்வாக இருந்தாலுங்கூட) சாத்தியமேயில்லையா?

      ஒரு பயிரை வளர்க்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அருகிலிருக்கும் களையின் ஆணி வேரை அசைப்பது, மற்றது வளர வேண்டிய பயிரின் வேரில் உரமூட்டுவது. இங்கே பல பயிர்கள் வளருமிடத்தில் ஒன்றைக் களையை அடையாளம் காணல் மட்டுமே – கிட்டதட்ட ஒரு நூறாண்டு அனுபவத்தில் – போதுமானதென்று தோன்றவில்லை. நேரடியாக நலிந்த பயிருக்கு உரமூட்டும் நடவடிக்கைகளையும் இந்த நேரத்தில் வலுப்படுத்துவது இன்னொரு சாத்தியமல்லவா? உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கு இப்படியொரு விடயம் ஏன் அசுவாரசியமானதாக இருக்க வேண்டும்?

      இனி உங்கள் கருத்துக்களுக்குப் பதில் சொல்லுமுன். இப்படியொரு கோணத்தில் இந்த விவாததை நான் நடத்த விரும்பவில்லை. இது கட்டாயம் திசை திரும்பும். நான் பத்திபத்தியாக எழுதியவற்றில் ஒற்றைவரிக்கு மாத்திரம் இவ்வளவு கேள்விகள் என்றால் நான் இதற்கு விளக்கமாகப் பதில்சொல்ல முற்பட்டால் இது எப்படி வெடிக்கும் என்று பயமாக இருக்கிறது. இந்தத் தயக்கத்துடன்;

      >1. இந்து மதம்-பார்ப்பனர் இதை இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஒன்றாக புரிந்துகொள்ளப்போகிறீர்கள்?

      இந்தக் கேள்வியை என்னிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. இதை நான் சொல்லவில்லை. இங்கே நடக்கின்ற வாதங்களின் அடிப்படையே இந்துமதம் என்பது பார்ப்பனர்களின் நலனுக்காக மாத்திரமே கட்டியெழுப்பபட்டது, இந்துமதம் என்ற அமைப்பால் பயன்பெற்ற, பெறுபவர்கள் அவர்கள் மாத்திரமே என்பதுதான் அடிநாதம் என்பதை மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

      >2. இந்து மத ஒழிப்பு, சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல என் போன்றவர்களுக்கும் கூட ஏன் அவசியம் என்பதை என்னை விட சமூக இயங்கியலில் அதிக அறிவும், செயல்முறை அனுபவமும், கொண்ட அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக விஞ்ஞானிகளை இப்போதும் புறந்தள்ளி காருண்ய உபதேசங்கள் கேட்டு நடக்கவேண்டிய காலங்கள் மாறிவிட்டன.

      என்னால் இதை இந்துமதத்தின் தனிப்பட பிரச்சனையாகப் பார்க்கமுடிவதில்லை. இந்தியாவிற்கு வெளியேயும் நான் காண்பவை இதை மதம் என்ற கட்டமைப்பின் பொதுத் தீங்காகப் பார்க்கிறேன். இந்தியாவிற்கு வெளியே வசிக்கும், பிற சமூகங்களின் அபத்தங்களையும் காணக்கிடைக்கும் உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் சாத்தியமானவை என்று நம்புகிறேன். (அப்படியொரு விடயத்தில் முற்றாகக் கண்களை மூடிக்கொண்டாலேயொழிய). அந்த நிலையில் இதை எப்படி ஒரு சிறு எல்லைக்குள் வைத்து விவாதிக்கமுடிகிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

      காருண்ய உபதேசங்களைப் பற்றிய என் கருத்து உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தேடியெடுக்க முடிந்தால் Who needs a guru anyway? என்று தலைப்பிட்ட என்னுடைய பழைய மடல் ஒன்றை மீள்பார்வைக்குத் தருகிறேன்.

      >3. தலித்துகளை ஒழிக்கவேண்டும் (அப்படியொரு நிலை அல்லாது) என்பதை சரியாகப் புரிந்துகொள்ளுகிற உங்களைப்போன்ற நண்பர்கள் கூட பார்பனர்களை ஒழிக்கவேண்டும் என்று பெரியாரோ, அம்பேத்காரோ சொன்னால் புரிந்துகொள்ள முடியாமற் போவது ஏன் என்பது ஆச்சர்யம் தான் தருகிறது.

      இதை ஏன் இப்படி ஒற்றைப்படையாகத் தலையில் கட்டுகிறீர்கள் என்று புரியவில்லை. இங்கே வரும் வாதங்களில் எங்கும் பார்ப்பனர்கள் செழிக்க வேண்டும் என்று (யாரும்) சொல்லவில்லை. மாறாக இந்த அமைப்பே ஒழியவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்பது இங்கே சாதுரியமாகத் திரிக்கப்படுகிறது.

      இது சக்கரச் சுழற்சி, கீழிருப்பவனை மேலே ஏற்றிவிட்டு மேலிருப்பவனை கீழே இறக்கி எல்லாம் முடிந்துவிட்டதாகக் கைதட்டிக் கொள்ள முடியாது. மாறாக இந்தச் சுழற்சியை நிறுத்தவேண்டும். அதற்குச் சக்கரத்திற்கு வெளியே இருந்து செயல்படுவதுதான் சாத்தியம். அப்படியான ஒரு வசதியை அறிவியல் நமக்குத் தருகிறது. அறிவியல் பயிற்சி பெற்று அதன் சாத்தியத்தைக் நிதர்சனமாகக் காணக்கிடைப்பவர்கள் அதைப் புறக்கணிக்கும் பொழுது உண்மையில் சக்கரச் சுழற்சியை நிறுத்துவதில் அவர்களுக்கு நம்பிக்கையிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது.

      >4. இந்து மதம் என்றால் என்ன- அதன் ஒழிப்பு என்றால் என்ன என்பதைக் குறித்து அதையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்று சொன்னவர்களைப் படித்து பிறகு அதைப்பற்ற்றிய விவாதங்களைச் செய்தல் உங்களைப்போன்றவர்க்கு அழகு வெங்கட். அல்லாவிடில் பார்பனர் என்பதில் பெருமைகொள்ளுங்கள் என்று வலைப்பதிவு செய்பவர்களின் கருத்துக்களில் இருந்து இதை வேறுபடுத்தி புரிந்து கொள்ளுதல் இயலாததாகிவிடும்.

      தங்கமணி, இதைப்பற்றிய கேள்விகளும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் நிறைய இருக்கின்றன என்பதை நான் அறிவேன். முன் முடிபுகள் இல்லாத நிலையில் இவற்றைப் பற்றிய என் தேட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என் படிப்பறையில் நம்மாழ்வாருக்கும், திருமூலருக்கும், அம்பேத்காருக்கும், தேபிப்பிரசாத் சட்டோபாத்யாவுக்கும் நிறையவே இடமிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முற்றாக அறிவியல் கோணத்தில் இதை அனுகும் ரிச்சர்ட் டாக்கின்ஸ்-கூட. எனவேதான் இதை என்னால் ஒற்றைத்தளத்தில் சுருக்கிப் பார்க்க முடியவில்லை. முழுக்க முழுக்க கீதையில் முழ்கிப் பின்னால் பெரியாரைத் துணைகொண்டு அதை மறுத்தல் என்பது எனக்கு சாத்தியமற்ற விடயமாக இருக்கிறது. எந்த ஒன்றையும் என்னால் முரண்பாடுகள் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் எதையும் மறுதலிக்கும் திராணியற்றவனாக நான் மாறிவருகிறேன் என்பதுதான் உண்மை.

      இதனால் “பார்பனர் என்பதில் பெருமைகொள்ளுங்கள் என்று வலைப்பதிவு செய்பவர்களின் கருத்துக்களில் இருந்து இதை வேறுபடுத்தி புரிந்து கொள்ளுதல் இயலாததாகிவிடும்” என்று மாத்திரமே பிறருக்குப் பரிந்துரைக்கப்பட்டேனேயானால் எனக்கு வருத்தம் கிடையாது. அப்படிச் சாதுர்யமாகக் ‘கல்லெறிய வேண்டாம்’ என்று நெஞ்சுருக வேண்டும் விடுக்கும் திறமையையும் நேசிக்க முடிகிறது.

      இணையத்தில் அப்படியொரு விவாதத்திற்குச் சாத்தியமேயில்லை என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். என்னால் இதே தலைப்பில் அருள் செல்வனுடன் நாட்கணக்கில் விவாதிக்க முடியும் என்று தெரியும். காரணம் என்னவென்றால் இவற்றினாலெல்லாம் எனக்கும் அருளுக்கும் இருக்கும் நட்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. உங்களுடன் கூடத் தனிப்பட்டு இப்படி விவாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பொதுவில் இதை விவாதிக்க எனக்குத் திராணியில்லை. இங்கே இறைபடும் வார்த்தைகளில் வாதம் கட்டாயம் திசை திரும்பும். இதைக் கோழைத்தனம் என்று அழைப்பீர்களேயானால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு ஒரு கோழைப்பட்டம் கிடைத்து அதனால் சில நல்ல நண்பர்களைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்றால் நான் அதைத்தான் தேர்ந்தெடுப்பேன்.

      >5.இன்பம் துய்க்க எழுதுவதாய்ச் சொல்வதை நான் எழுதுவதே உங்களுக்கு துன்பம் விளைவிக்கத்தான் என்பதாக புரிந்துகொள்ளலாமா வெங்கட்? குடைபிடிப்பதும், செருப்பணிந்து நடப்பதும் ஒரு சாராரை அவமானப்படுத்தத்தான் என்ற அகராதியின் புதிய பதிப்பு என்று கொள்ளலாமா?

      உங்களுடைய இன்பத்தில் நான் துன்பம் காணுவதாக இதென்ன விபரீதக் கற்பனை!! இப்படியொரு அபத்த வாதம் உங்களுக்கு எப்படி சாத்தியமாகிறது? வாதங்கள் எல்லாவற்றையுமே ஒற்றைப்படையாக்கித் திசை திருப்பித்தான் தீர வேண்டுமா?

      அது கிடக்க. எனக்குத் துன்பம் விளைவிக்க வேறெதுவும் தேவையில்லை. இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் என் முப்பாட்டன் குடையையும் செருப்பையும் ஒருத்தனுக்கு மறுத்திருக்கக்கூடும் என்ற அருவருக்கத்தக்க நினைப்பே போதும்.

      >6. இந்து மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஒழிப்பதுதான் (அவர்கள் ஒழிக்கவிரும்பிய விதத்தில) தங்களுக்கு சமூக விடுதலைக்கான வழியென்று சொன்னால், விவாதித்தால் அதைச் செய்ய அவர்களுக்கே மிக அதிகமான உரிமை/ தேவை இருக்கிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள முயலாமல் இதெல்லாம் அநியாயம் என்று சொல்ல ஓடிவருபவர்களின் நியாய உணர்வு பற்றி உங்களூக்கு கேள்வி எழவில்லையா வெங்கட்?

      இது நம்மிருவரின் தனிப்பட்ட தெரிவுகளின்பாற்பட்டது. உங்கள் முன்னுரிமைகளை நான் மதிக்கிறேன். என்னுடைய மறுதீர்வுக்கான முன்வைத்தைலை முற்றாகப் புறங்கையால் தள்ளி பின்னூட்டத்தில் நான் சொன்ன ஒற்றைவரியை மாத்திரமே கைகொள்வது வியப்பளிக்கிறது.

      விடுதலைக்கான எனது தெரிவுகள் உங்களுக்கு விருப்பமற்றவையாக இருக்கலாம். உங்கள் இந்துமத ஒழிப்புத் தீர்வைப் பொதுவில் விவாதிப்பதில் எனக்கிருக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மறுபுறத்தில் உங்களுக்கு நுட்பம் தொடர்பான இந்த அணுகுமுறையை முற்றாகக் கண்டுகொள்ளாமல் நீங்கள் புறந்தள்ளுவது என் பதிவின் ஆதங்கத்தையே மீண்டும் எதிரொலிக்கிறது.

      >பீயள்ளுவர்களுக்கான் இப்படி ஒரு தீர்வை முன்வைக்க உங்களுக்கு இருக்கும் அதே உரிமையில் இந்து மதத்தை ஒழிப்பதுதான் அதற்கான தீர்வு என்பதாய் ஒரு வாதத்தை அவர்கள் சொன்னால் அதற்குத்தான் நான் அதிக கவனம் கொடுப்பேன் வெங்கட். ஏனெனில் இந்து மதத்தை காப்பாற்ற அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை என்பது ஒருபுறம்,

      நீங்கள் ‘இந்து’ என்று சுருக்குவதை விரிவுபடுத்தி நான் அவர்களுக்கு மதத்தின் தேவையே இல்லை என்றுதான் சொல்வேன். அவர்களின் தேவை சமூக அங்கீகாரமும், சுயச்சார்பும்தான். சுயச்சார்புகளுக்கான வழிகளை விஞ்ஞானத்தின் துணையுடன் நாம் கொடுத்தால் சமூக அங்கீகாரம் தானாகக் கனியுமென்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இதனிடையில் மதத்தைப் பற்றிய அக்கறையே அவர்களுக்குத் தேவையற்றது. இதை இந்துமதமாக மாத்திரம் ஏன் சுருக்க வேண்டும்?

      >இன்னொரு புறம் இந்த வாதத்தை முன்வைப்பவர்களான புத்தர், பல சித்தர்கள், பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் மற்ற எவரையும் விட மனிதநேயத்தையும், சர்வ ஜன சமத்துவத்தையும் விழைந்த சமூக விஞ்ஞானிகள் என்பதாலும்.

      புத்தரின், சித்தர்களின் பெரியாரின் தோள்களில் ஏறி நின்று அவர்கள் பாடுபட்ட அதே சகமனித நேயத்தை வளர்க்க இன்றைய விஞ்ஞானம் எனக்களித்திருக்கும் கருவிகளின் துணைகொண்டு விழைய எனக்கிருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்ள முடியுமானால் நான் சந்தோஷப்படுவேன். (இயன்றவரை அப்படியொரு அக்கறையை ஒற்றைப்படையாகப் பார்க்காமலிருந்தால் நன்றியுடையவனாக இருப்பேன்). அவர்களை மாத்திரம் மேற்கொள் காட்டிக்கொண்டிராமல் இப்படியொரு சுயேச்சையான சிந்தனையேத்தான் சித்தர்களும் பெரியாரும் விழைவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

    32. venkat
      March 15, 2006 at 11:33 pm

      >7. கடைசியாய் திரு Jayashree Govindarajanக்கு:

      > பின்னூட்டமிடவேண்டுமென்றாலும் வெங்கட்டின் பதிவுகள் தான் வேண்டுமென்றால் நல்லது Jayashree, நீங்கள் விரும்பியது கிடைக்க வாழ்த்துக்கள்.

      தங்கமணி, ஜெயஸ்ரீ-யின் சார்ப்பாக நான் பதிலளிக்கவில்லை. ஜெயஸ்ரீ என் பதிவுகளில் நிறைய கருத்துக்கள் எழுதியதில்லை. நான் மரத்தடி உட்பட வேறெந்த குழுமங்களுக்கும் தற்பொழுது செல்பவனல்லன். எனவே நான் அவருடைய கருத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதாகவும் சொல்லமுடியாது. எனக்குத் தோன்றியதெல்லாம் இதுதான்.

      உங்கள் பதிவில் இயன்ற அளவில் அக்கறையுடன், தான் உண்மையென்று நம்பியதை நேர்மையாகத்தான் ஜெயஸ்ரீ சொல்லிவந்தார். அவருடைய கருத்துகள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒத்துப்போகாமலிருக்கலாம். அவருடைய புரிதலில் பிழைகளிருக்கலாம். ஆனால அதைத்தொடர்ந்த தனிமனிதத் தாக்குதலுக்கு நீங்கள் உடனடியாக எந்தவிதமான மறுப்பையும் காட்டாததில் நான் ஆச்சரியமடைந்தேன்.

      இதற்கு முன் பலமுறை என்பதிவிலும் என்னைக் குறித்த தனிமனிதத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. (நீங்கள் கொல்லப்பட்டாலும் எனக்குச் சந்தோஷமே என்று ஒருவர் எழுதினார்). அவை எல்லாவற்றுக்கும் நான் இடம் கொடுத்திருக்கிறேன். ஆனால் வேறொருவர், அதிலும் பெண் என்பதையோ, அவர் பிறப்பையோ முன்வைத்துத் தாக்கப்பட்டால் அவற்றைத் தவிர்க்கும்படியாக நான் நேரடியாக வேண்டுகோள் விடுப்பேன். முகமுடியிடம் வருத்தம் தெரிவித்த நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டவரைக் கண்டுகொள்ளாமல் விட்டது வியப்பளிக்கிறது.

      இந்நிலையில் உங்கள் பதிவில் தொடர்ந்தும் கருத்தெழுத அவருக்கு அயர்விருப்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

    33. venkat
      March 15, 2006 at 11:44 pm

      மன்னிக்கவும். தங்கமணிக்கு நீண்ட பதிவெழுதி (இடையிடையே வேறுகாரியங்களையும் கவனித்துக்கொண்டு) இட்டபின் பார்த்தால் ஜெயஸ்ரீ-யின் பின்னூட்டம் அனுமதிக்காகக் காத்திருந்தது. முந்திரிக்கொட்டைபோல நான் அவர் சார்பாக எழுதியிருக்கத் தேவையில்லை.

      இருந்தபோதும் அதைச் சரியாக ஊகிக்க் முடிந்ததில் நிம்மதி.

    34. sarah
      March 15, 2006 at 11:48 pm

      //7. கடைசியாய் திரு Jayashree Govindarajanக்கு:

      உங்கள் நேரவிரயம் என்னுடைய பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்டதால் நிகழ்ந்திருந்தால் அதற்காக என்னுடைய தாழ்மையான வருத்தங்கள். உங்கள் பின்னூட்டங்களில் நான் கண்ட அறியாமையின் நிழலை அலட்சியப்படுத்தியே நீங்கள் சொல்லிய தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உங்கள் கருத்துக்களை புரிந்துகொள்ள முயன்றேன். ஆனாலும் அதனால் பயனில்லை என்றே உணர்கிறேன். உங்களுக்கு பெரியாரைப்படிக்க வேண்டுமென்றாலும் ரோசாவசந்துகள் போன்ற நம்பிக்கையான இடம் வேண்டும; பின்னூட்டமிடவேண்டுமென்றாலும் வெங்கட்டின் பதிவுகள் தான் வேண்டுமென்றால் நல்லது Jayashree, நீங்கள் விரும்பியது கிடைக்க வாழ்த்துக்கள்.

      //

      அல்ல தங்கமணி, நீங்கள் பார்ப்பனராய் இருக்கவேண்டும்.

      Sorry venkat, This comment is not to distract the discussion and degrade you OR Rosavasanth, but I feel that I should point out here.

      sarah

    35. venkat
      March 16, 2006 at 12:18 am

      அல்ல தங்கமணி, நீங்கள் பார்ப்பனராய் இருக்கவேண்டும்.

      Sorry venkat, This comment is not to distract the discussion and degrade you OR Rosavasanth, but I feel that I should point out here.

      >sarah

      சாரா. வியப்பளிக்கிறது. தங்கமணியின் பதிவில் எழுதியதைப் போல (அல்லது பிறரின் பதிவுகளில்) ஜெயஸ்ரீ என் பதிவில் அதிகம் எழுதியதுகூட இல்லை என்று நான் சுட்டியிரு்க்கிறேன் (எனக்கு நினைவிருக்கும் வரையில் முன்பு ஒரே ஒரு முறை என் எழுத்துப் ப்பிழைகளைச் சுட்டி எழுதியிருக்கிறார்).

      தங்கமணியின் பதிவில பொறுமையாக (அது முழுவதும் தவறு என்றுகூட நீங்கள் நம்ப உங்களுக்கு இருக்கும் உரிமையை நான் மறுக்க மாட்டேன்), நேர்மையாக (தான் உண்மை என்று நம்புவதைத்தான் ஜெயஸ்ரீ எழுதினார் என்பதையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் . அவருக்கு உண்மையில் வேறுவிதமாக நம்பிக்கொண்டு இப்படி எழுத எதுவும் ஆதாயத்திற்கான உள்நோக்கமிருக்கிறது என்றும் நீங்கள் சந்தேகிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்). அந்த நிலையில் நீங்கள் எல்லாவற்றையும் மீறி பிறப்பைச் சுட்டுவது வியப்பளிக்கிறது, அருவருப்பாக இருக்கிறது. இப்படித்தான் ஒருவரை எதிர்கொள்ள வேண்டுமென்றில்லை.

      தங்கமணியிடம் எதிர்பார்த்த அதே வேண்டுகோளை மிகுந்த வ்ருத்தத்துடன் உங்களுக்கு விடுக்கிறேன்; Please avoid hitting anyone below the belt.

      * * *

      (நகைப்புக்காக எழுதியது) நான் உங்களுக்கு ஆங்கிலத்தில் வேண்டுகோள் விடுத்ததில் உள்நோக்கம் எதுவுமில்லை. நீங்கள் தங்கமணிக்குத் தமிழில் எழுதினால்தான் புரியும் எனக்கு ஆங்கிலம்தான் புரியும் என்று நினைத்தாலும் கூட :) ))

    36. March 16, 2006 at 6:56 am

      வெங்கட்,
      “ஆக வேண்டியது என்ன என்று பட்டியலிட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் முன்வைத்து, குறிப்பிட்ட கால இலக்குக்குள் அவற்றை அடையப் பாடுபட வேண்டியது
      இன்னும் ஐந்து வருடங்களுக்குள் இந்திய இரயில்வேயில் கழிவு சுத்திகரிப்புத் தொழிலுக்கு நேரடி மனிதபலத்தைப் பயன்படுத்தக்கூடாது. இயந்திரங்கள் தேவை என்று வரையறுத்துக்கொண்டு அதில் போராடலாம்”

      so, what is next?

    37. sarah
      March 16, 2006 at 8:20 am

      I will mail you soon venkat. I dont like to disturb the way of thinking, and the way you would like your blog to be.

      I would like to add a line that I didnot mean to hurt anybody personally, and that too aruvarukka thakka alavukku, i pointed out how the human thinking exists.

      sari

      I will mail you, i typed a lot here but if i put that again, that will go for different arguement and it is different issue and will disturb the core issue and track will change which is not the motto now for us, So please go ahead with the current issue and how to rectify things in your point of view, all the best.

      sarah

    38. venkat
      March 16, 2006 at 9:56 am

      ரோசா வஸந்தின் பதிவில் என்னால் பின்னூட்டமிட முடியாமலிருக்கிறது. எனவே, இப்போதைக்கு இங்கே போட்டு வைத்துக்கொள்கிறேன். பின்னர் அங்கும் இடலாம்;

      >வெங்கட்டின் பதிவு, அதில் தொடர்ந்த மறுமொழிகளை பார்தால், வில்சனின் கட்டுரை பெரிதாய் படிக்கப் பட்டதாக தெரியவில்லை.

      நான் படித்திருக்கிறேன். அதிலிருக்கும் பெரும்பாலான விடயங்களை நான் மறுக்கவில்லை. இதையொழிக்க ஆணிவேராகிய சாதியை ஒழிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு மறுப்பில்லை. ஆனால் அதை ஒழிக்கக் கைக்கொள்ளும் ஒற்றைப்படைத்தனமான வழிமுறைகளை மட்டுமே நான் விமர்சித்து, மாற்றுவழிகளின் சாத்தியங்களில் ஒன்றை முன்வைத்தேன்.

      அதே ஒற்றைப்படைத்தனமான வாதங்களை நானும் மேற்கொள்ளாததால் என் வாதங்கள் முற்றாகத் திசைதிருப்பப்படுவதைக் காணமுடிகிறது. நம்மில் இன்றைய சமூகத்தில் அறிவியலின் பங்கு குறித்து தெரிந்து கொண்டவர்கள்கூட அதை புறக்கணிப்பதின் நோக்கத்தை நான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. (One can imagine very well where India might be today had it not supported ‘information based’ economy. The way it drastically changes the landscape is obvious be it economy, development or respect from other countries).

      திரு. வில்ஸனின் ஒரே ஒரு விடயத்தை மட்டும் என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை

      >இந்த அவலத்தை ஒழிப்பதில் தடையாக இருக்கிறதே ஒழிய, தொழில்நுட்பக் குறைவோ, நிதிநிலை பற்றாக்குறையோ, ஒரு அங்க்கீகரிக்கப் பட்ட சட்டகம் ஒன்று இருப்பதோ இல்லாதிருப்பதோ அல்ல பிரச்சனை.

      பிற நாடுகளில் இதற்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களைக் காண்பவன் என்ற ரீதியில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நாம் இதில் நுட்பத்தின் பயன்பாட்டில் இன்னும் இம்மிகூட முன்னேறவில்லை. இதை மறுத்து இல்லை நாம் இதில் கரைகண்டுவிட்டோம் ரீதியில் யாராவது மார்தட்டிக்கொண்டிருந்தால் ஒன்று அவர்களின் அறியாமைக்கு நான் வருத்தப்பட வேண்டும், அல்லது அவர்களின் நோக்கங்களை நான் சந்தேகிக்க வேண்டும்.

      மற்றும் நிதிநிலை; இந்திய பட்ஜெட்டில் R&D க்கான ஒதுக்கீட்டில்

      2000 : Atomic Energy
      3000 : DRDO
      3610 : Space
      2160 : Agriculture
      1750 : CSIR
      1746 : DST
      0534 : Biotech
      2774 : UGC, etc.
      1718 : Tech. Ed.
      1436 : Medicine

      இதில் biotech, medicine, Agri மூன்றும்தான் சுகாதாரம் சார்ந்தவை. இது இராணுவம் சம்பந்தமான space, Atomic Energy, DRDO க்கு ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவு. ஆஹா, நமக்கு இந்திய அரசு தாராளமாகப் பணம் தருகிறது என்று நினைத்துக்கொண்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

      வில்ஸனின் ஒத்துக்கொள்ள முடியாத இந்த ஒரே விடயத்தைப் பற்றித்தான் என்னுடைய அக்கறையே.

    39. venkat
      March 16, 2006 at 10:01 am

      திரு ஜோஸப்பின் தலித்துகளியும் உடல் ஊனமுற்றவர்களையும் ஒப்பிடும் வாதத்தின் பொருத்தமின்மையை நான் விமர்சிக்கவில்லை என்று வஸந்த் சொல்லியிருக்கிறார்.

      >நீங்கள் சொல்லும் “அவர்களைத் தனியே விடுங்கள்” என்பது உண்மையானாலும், இது ஒரள்வுக்குத்தான் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

      என்று எழுதியிருந்த நான் அதன் பொருத்தமின்மையையும் நேரடியாக எழுதியிருக்க வேண்டும். வேலைகளுக்கிடையில் கிடைத்த சிறு இடைவெளிகளில் பதிலிடும்பொழுது கோர்வையாகச் சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. இதன் பொருத்தமின்மையை வஸந்த் இப்பொழுது தெளிவுபடுத்தியிருக்கிறார். இதையே நானும் எழுதியிருக்கலாம்.

    40. Thangamani
      March 17, 2006 at 12:50 am

      உங்கள் விளக்கங்களுக்கு நன்றி வெங்கட்.

    41. Pingback: கில்லி - Gilli » India Stinking

    42. Pingback: நேஷனல் போஸ்ட்டில் இன்னொரு தலையங்கம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *