• தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – மூன்று

    by  • August 21, 2005 • இசை • 10 Comments

    ஜாஸின் ஆதாரம் improvisation என்று சொல்லப்படும் நொடியில் மாறும் திறம்தான். தமிழ்த் திரையிசையில் (பொதுவாகத் திரையிசையில்) இசைக்கப்படுவது தொகுக்கப்பட்ட இசை (Composed music); அதாவது இசையமைப்பாளர் ஏற்கனவே தீர்மானித்து அதற்கேற்ற வகையில் பாடலாசிரியர் பாட்டெழுதி துல்லியமாகப் பிரிக்கப்பட்டு இசைக்கலைஞர்களிடம் சொல்லப்பட்டு இசைக்கப்படுவது. இந்த இடத்தில் ஜாஸின் அடிப்படை இதயமான சுதந்திர மாற்றங்களுக்குச் சாத்தியமில்லாமல் போவதால் திரையுலகில் ஜாஸ் என்பது ஒரு சொல்முரண்தானா?

    இதற்குப் பதில் ஒரு வகையில் ஆம். ஆனால் கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் இல்லை, திரையிசையில் ஜாஸ் சாத்தியமே என்று புலப்படும். நீண்ட ராக ஆலாபனைகள், தனி ஆவர்த்தனங்கள், ஸ்வரப் பிரஸ்தாரங்கள் இதெல்லாம் இல்லாமலேயே ஒற்றை வரியில் ராகத்தின் சாயல்வரும் திரைப்படப் பாடல்களைக் கர்நாடக இசையின் ராகங்களின் அடிப்படையில் இனங்காணுவது எப்படிச் சாத்தியமோ அதோபோல கொஞ்சம் வகைப்படுத்திப் பார்க்கலாமே. ஜாஸின் அடிப்படை சமாச்சாரங்களாக blue note, Syncopation, Swing, Call and Response, polyrhythms, Improvisation என்று முதல் வாரத்தில் பட்டியல் போட்டிருந்தேன். அதில் இரண்டு, மூன்று அடிப்படைக் கூறுகள் பொருந்தி வருபவை, மற்றும் ஜாஸின் ஆதார இசைக்கருவிகளான சாக்ஸஃபோன், ட்ரம்பெட், பியானோ, கிடார், பாஸ், ட்ரம்ஸ் போன்றவற்றை மாத்திரமே பயன்படுத்தி வரும் பாடல்களில் கட்டாயமாக ஜாஸின் சாயலை அடையாளம் காணமுடிகிறது.

    ஆனால் இவற்றை “தமிழ் ஜாஸ்” என்று தைரியமாக வகையிடுவதற்குத் தயக்கமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலான பாடல்களில் ஜாஸ் இசைய்டுடன் பிற வகை இசைகளையும் கலந்துதான் தமிழில் தந்திருக்கிறார்கள். எனவேதான் “ஜாஸ் வடிவம்” என்று தலைப்பு கொடுத்திருக்கிறேன்.

    நான் இந்தத் தொடரை எழுதுவதற்காகத் தேடியபொழுது என்னால் முதன் முதலில் தமிழில் ஜாஸ் தாக்கம் எப்பொழுது வந்தது என்பதை என்னால் உறுதியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அறுபதுகளில்தான் இது துவங்கியிருப்பதாகத் தெரிகிறது. வேதா, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, எம்.பி.ஸ்ரீனிவாஸன், .. அப்புறம் நீண்ட நாட்கள் கழிந்த்து ஏ.ஆர். ரகுமான், இளையராஜா என்று கொஞ்சம் பாடல்கள்தான் தேறுகின்றன. தமிழ்-ஜாஸ் என்று பேசத் தொடங்கினால் முதலின் சொல்லியாக வேண்டிய பெயர் – எல்.ஆர். ஈஸ்வரி. தமிழ்த் திரையிசை உலகில் இந்தக் குரலுக்கு இணையாக அல்லது மாற்றாக வேறு யாரையும் சொல்லமுடியாது என்ற தனித்துவம் மிக்கவர்களின் ஈஸ்வரி முதன்மையானவர். மிகச் சிறியவயதிலேயே 1959ல் நல்ல இடத்து சம்மந்தம் என்ற படத்தில் கே.வி. மஹாதேவனால் அறிமுகப்படுத்தப் பட்டவர். மிகச் சமீபத்தில் (2004) ஹாரிஸ் ஜெயராஸ் வரை (அருள் திரைப்படம்) ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார். தமிழில் ஜாஸ் சாயலில் உள்ள பாடல்களை மிக அதிகமாகப் பாடியவர் எல்.ஆர். ஈஸ்வரிதான்.

    * * *

    பாடல் :வரவேண்டும் ஒரு பொழுது

    படம் : கலைக்கோயில் (1964)

    பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி

    இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி

    Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

    என்னுடைய பட்டியலில் இருக்கும் மிகப் பழைய ஜாஸ் சாயல் கொண்ட பாடல் இதுதான். சொல்லப்போனால் நீண்ட நாட்களுக்கு இந்தப் பாடல் அளவிற்கு சுத்தமான ஜாஸ் வடிவம் கொண்ட பாடலே தமிழில் இல்லை என்று சொல்லலாம். பாடலின் ஆரம்பத்தில் துவங்கும் பியானோ இசை, அதைத் தொடர்ந்த ட்ரம்பெட், சாக்ஸஃபேன் இவற்றுடன் இணையும் ட்ரம்ஸின் ரிதம் இவை எல்லாமே துல்லியமான ஜாஸ் வடிவங்கள். இந்தப் பாடலில் ஜாஸ்-க்கே அடிப்படையான கருவிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்கும். எனக்கென்னமோ இந்தப் பாடலுக்கு வடிவம் தந்தவர்கள் (இதை arrangement என்று சொல்வார்கள், அதாவது மெட்டை ஒருவர் தீர்மானித்தபின் அதில் வரும் இசைக்கருவிகளின் வரிசை மற்றும் எந்தெந்தக் கருவிகள் சேர்ந்திசைக்க வேண்டும் எவை தனியாகச் செல்ல வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பவர் வேறு ஒருவராக இருப்பார். சில டிஸ்ஸி கில்லெஸ்பி (Dizzy Gillespie) பாடல்களுக்கு க்வின்ஸி ஜோன்ஸ் (Qunicy Jones) செய்திருக்கும் அமைப்புகள் அற்புதமான இருக்கும். (இளையராஜாவைப் பற்றி எழுதும் பொழுது இவர்களின் பாடல் ஒன்றைப் போடுகிறேன்). எம்.எஸ்.விக்கு – கோவர்தனம், ஹென்றி டேனியல், ஜேஸப் கிருஷ்ணா என்று மூன்று உதவியாளர்கள் இருந்தார்கள். இவர்களில் ஹென்றி டேனியல் இதைப் போன்ற ஜாஸ் அல்லது பாப் இசையில் வரும் பாடல்களுக்கு arrangement செய்வார் என்று சொல்வார்கள். ஆனால் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சேர்ந்து இசைத்தபொழுது எப்படி என்று தெரியவில்லை.

    பாடலின் இடையீடுகளில் (interlude) வரும் இசையும் வழக்கமாக ஜாஸில் கேட்கும் ஒலி. இந்தப்பாடலில் ஒரு ஆச்சரியமான, இனிமையான விஷயம் ஆண்களின் கோரஸ் குரலை ரிதம் இசைக்கப் பயன்படுத்தியிருப்பது. வழக்கமான ஜாஸ் இசையில் பாஸ் கருவியைப் பயன்படுத்துவார்கள். விஸ்வநாதன் – ராமமூர்த்தி அதற்குப் பதிலாக ஆண்களின் குரலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இசையோடு சேர்ந்து வரும் ஈஸ்வரியின் குரல் பாடலின் சூழ்நிலையை நன்றாகக் காட்டுகிறது.

    பாடல் : நீ என்பதென்ன (1965)

    படம்: வெண்ணிற ஆடை

    பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி

    இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி

    பாடல் : கண்ணதாசன்

    Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

    வரவேண்டும் ஒரு பொழுது பாடல் வந்து ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே அடுத்ததாக வந்த பாடல் இது. கொஞ்சம் வித்தியாசமான பாடல். ஈஸ்வரியின் குரல் ஜாஸின் வடிவத்திற்கு எப்படி ஒத்துப் போகிறது என்று காட்டுவதற்காக வரும் உதாரணம் இது. ஜாஸின் முன்னோடி ஆப்பிரிக்க நாட்டார் இசை வடிவில் பொய்க்குரலுக்கு முக்கியமான இடமுண்டு. ஆண்கள் தங்கள் குரலை அசாத்தியமான உச்சஸ்தாயிகளுக்குக் கொண்டு சென்று கத்துவது – falsetto – ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடையே முக்கியமான பழக்கம். (பால் சைமனின் க்ரேஸ்லாண்ட் ஆல்பத்தில் இருக்கும் பல பாடல்களில் ஆப்பிரிக்கப் பாடகர்கள் இப்படி falsetto -வில் கத்துவதைக் கேட்கமுடியும்). இதன் தொடர்ச்சியாக ஜாஸிலும் பொய்க்குரல்களுக்கு முக்கிய இடமுண்டு. எப்படி ஆண் பாடகர்கள் குரலை உயர்த்துகிறார்களோ அதேபோல் பெண்கள் தாழ்த்திப் பாடுவதும் வழக்கம். இந்தப் பாடலின் துவக்கத்தில் முதல் இரண்டு வரிகளை ஈஸ்வரி சற்றுத் தாழ்த்தி அழகாகப் பாடியிருப்பார். இதேபோல இந்தப் பாடலின் இடையில் வரும் சிரிப்புகள் மற்றும் எக்காளங்கள் எல்லாம் ஆரம்பகால ஜாஸ் பாடல்களில் மிகவும் முக்கியமான பகுதிகளாக இருந்தவை. இப்பொழுதைய ஜாஸ் பாடல்களில் இது குறைந்துபோயிருக்கிறது.

    இந்தப் பாடலின் முக்கியமான விஷயம் – இதில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வரும் கிட்டார். சென்ற பாடலில் எப்படி சாக்ஸஃபோன், ட்ரம்பெட் முக்கியமான இடத்தில் இருக்கின்றனவோ அதேபோல் இங்கே கிட்டார் மிக அற்புதமாக பெண்குரலுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பாடலின் இடையீடுகளில் வரும் கிடார் இசை ப்ளூஸ் தாக்கம் அதிகம் பெற்ற Cream, Yard Birds, Led Zepplin போன்ற குழுக்களில் எரிக் க்ளாப்டன், ஜிம்மி பேஜ் போன்றவர்களின் இசையின் சாயலைக் கொண்டிருப்பதைக் கேட்கமுடியும்.

    * * *

    இந்த இரண்டு பாடல்களின் வரிகளும் சற்றே சோகம் ததும்பிய விரகம் அல்லது விரக்தியான கருத்துக்களைக் கொண்டிருபப்தைக் கவனிக்கலாம். கேளிக்கை விடுதிகள், பாலியல் தொழிலாளிகளின் வீடுகள் போன்றவற்றில் பாடப்படும் பாடல்கள் எல்லாமே ப்ளூஸ் எனப்படும் சோகம் தோய்ந்த பாடல்களாக இருக்கும். மிகவும் ஆச்சரியமாக இந்த இரண்டு பாடல்களுமே அதே சாயலில் வருபவை.

    (தொடரும்)

    10 Responses to தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – மூன்று

    1. just
      August 22, 2005 at 12:08 am

      Eswari ~ Billie Holiday
      Though they mix in times, and these these terms are used interchangingly, there is a difference between Jazz and Blues. In the beginning, Blues is much more connected to the telling of hardship of the Blacks (Soul Music may be the "religious" counterpart) than Jazz, I think.

    2. August 22, 2005 at 8:26 am

      [1] பெயரிலி – ஆச்சரியம். நானும் பில்லி ஹாலிடே பற்றி எழுத வேண்டும் என்றிருந்தேன். ஆனால் பதிவு நீண்டு கொண்டே போய்விட்டது. தனியாக எழுத வேண்டும்.

      குரலில், இசைப்புப் பாங்கில் இருவருக்கும் நிறைய ஒற்றுமை இருந்தாலும் அடிப்படையில் நிறைய வேற்றுமைகள் உண்டு. பில்லி பொதுவில் ஒரு ப்ளூஸ் பாடகி, இவருடைய பாடல்கள் (அவரது வாழ்க்கையைப் போலவே) சோகம் நிறைந்தவை. ஆனால், ஈஸ்வரி ஜாலியான பாடகி – கிட்டத்தட்ட எல்லா ப்ரிட்ஜெரால்டைப் போல. ஆனால் எல்லாவின் குரலும் ஈஸ்வரியின் குரலும் வெவ்வேறானவை. பில்லி-எல்லா இருவரையும் பற்றி ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதவிருக்கிறேன். அதில் ஈஸ்வரியும் வருவார் :)

    3. Padma Arvind
      August 22, 2005 at 8:53 am

      வெங்கட்
      இந்த வரிசையில் வரும் கட்டுரைகளை நான் விரும்பி படித்து வருகிறேன். ஆனால் இந்த பதிவின் கடைசி பத்தியுடன் என்னால் ஒத்து போக முடியவில்லை. சோகமும் இலேசான விரகம் மட்டும் அல்லாமல் முதலில் blues பற்றி பாடல்கள் வந்தது சந்தித்த சோகங்கள் மற்றும் தாக்கங்கள் சொல்லத்தான் என்று நினைக்கிறேன். பிறகு பதின்மவயதினர் எதோ ஒருவகை குறையுடன், எந்த சோக பாடலை கேட்டாலும் அதில் தன்னை பொறுத்திக்கொண்டு தானும் பாடல்கள் எழுதுவதும் சில காலத்திற்கு இங்கே சகஜமாக இருந்தது. கேளிக்கை விடுதிகள் பாலியல் தொடர்புகளுடன் மட்டுமே அதை அடையாளாம் காட்டாமல் அடிமைத்தனம், இனவெறி போன்ற வருத்தங்களுடனும் சேர்த்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
      நீ வந்ததென்ன பாடல் நல்ல தேர்வு. நன்றி.

    4. ஸ்ரீகாந்த்
      August 22, 2005 at 9:00 am

      தொடருக்கு நன்றி, வெங்கட். இம்மாதிரியான இசையில் அமைந்த பாடல்களுக்கு கண்ணதாசன் வரிகள்் எத்தனை கச்சிதமாகப் பஒருந்துகின்றன!

    5. August 22, 2005 at 12:38 pm

      [1] பெயரிலி – ப்ளூஸ் என்பவை அடிப்படையில் சோகப்பாடல்கள். இவை தங்கள் அன்றாட சோங்களில் தொடங்கி, வாழ்க்கையின் அபத்தங்கள், நிறவெறியின் அடிப்படையிலான ஒடுக்கு முறைகள் என்று தங்கள் சோகங்களையே முன் வைப்பவை. ஐந்து ஸ்வர அடிப்படையிலான ப்ளூ ஸ்கேலும் இசை ரீதியாக இதற்குப் பெரிதும் உதவுகிறது.

      ஜாஸில் ப்ளூஸ் ஸ்வரங்கள்தான் பெரிதும் பயன்படுத்தப் பட வேண்டும். ஆனால் ஜாஸில் சந்தோஷம், துக்கம் என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.

    6. August 22, 2005 at 12:42 pm

      [3] நான் சொன்ன சோகமும் விரகமும் கலந்தவை ஜாஸ் என்பது இன்றைக்குப் போட்டிருக்கும் இரண்டு பாடல்களையும் ஜாஸ் அடிப்படையிலானவை என்பதை வரையறுக்க (ஜாஸ் ப்ளூஸையும் உள்ளடக்கியது). ஆனால் இது ப்ளூஸ்கான வரையறை இல்லை. (அதற்கு முந்தைய பதிலைப் பார்க்கவும் :) ).

      பொதுவில் நம்மூர் காபரே ஆட்டக்காரி நடிகைகளுக்கான பாடல்களிலிருந்து மாறுபட்டு கொஞ்சம் சோகக் கலப்பும் இருப்பது ஜாஸிற்கு இயற்கையாகப் பொருந்திப் போகிறது என்பதைச் சொல்வதற்காகத்தான் அந்தக் கடைசி பத்தி.

    7. -/இரமணிதரன், க.
      August 23, 2005 at 5:09 pm

      [2] வெங்கட்,
      கட்டாயம் எழுதுங்கள். விரிவாக அதிலே பேசலாம்.

    8. August 26, 2005 at 2:14 pm

      இந்தத் தொடர் பல தகவல்களைக் கோர்வையாகவும் எளிமையாகவும் கொடுக்கிறது. நன்றி.

      சமீபத்திய wnyc-இல் இருந்து:
      http://wnyc.org/stream/ram.py?file=ranews/fishko/feature2005-08-12fishko-jazz-companion.MP3…

      Read about jazz in a kind of encyclopedia. It’s about 3 inches thick, with over 800 pages and 59 articles. WNYC’s Sara Fishko says leafing through it is – like the music itself – a positively non-linear experience.

    9. July 18, 2010 at 11:33 am

      இளையராஜா, ஏ.ஆர்.இரகுமான் அளவுக்கு MSVயின் நுணுக்கமான திறமைகள் பாராட்டப்பட்டதில்லை. குறிப்பாக இந்த தலைமுறையினருக்கு அவரைப் பற்றி சுத்தமாகத் தெரியாது. நல்ல வேளையாக மெகா டிவியில் அவரை வைத்து 100 வாரங்களுக்கு மேல் ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுவும் உங்கள் கட்டுரையை போன்று இசையின் நுணுக்கங்களை அலசுவதாக இல்லை.

      உங்கள் கட்டுரையை இரசித்து வாசித்தேன். பாராட்டுகள்!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *