நற்செய்தி: அண்ணா பல்கலையில் தளையறு மென்கலன் மையம்
by வெங்கட் • April 25, 2005 • அறிவியல்/நுட்பம் • 8 Comments
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் தளையறு மென்கலன் (Free – Open Source Software) மையம் நிறுவப்படவிருக்கிறது. மத்திய அரசு இதற்கென கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய்கள் அண்ணாவிற்கு மானியம் அளித்திருக்கிறது. நண்பர் சரவணன் அவருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கே.பி. சந்திரசேகர் மையத்தின் தலைவர் திரு கிருஷணமூர்த்திக்கும் இடையில் நடந்த தகவல் பரிமாற்றத்தின் சில பகுதிகளை அனுப்பியிருந்தார். இது குறித்த செய்தி தி ஹிந்து நாளிதழிலும் வெளியாகியிருக்கிறது.
தகவல் நுட்பத்தின் முழுப்பயனும் ஆங்கிலம் தெரியாத பெரும்பகுதி பொதுமக்களைச் சென்றடைய விழையும் நோக்குடன் இந்த மையம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த மையத்தில் முறையாகவும் முறைசாராத வகையிலும் பலரும் தளையறு மென்கலன் குறித்த பயிற்சிகளைப் பெற்று அதைப் பரப்புவார்கள் என்று துணை வேந்தர் பாலகுருசாமி சொல்லியிருக்கிறார். அவருடைய கூற்றுப்படி இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு ரீதியாக தளையறு மென்கலனை அங்கீகரித்திருப்பது தமிழகம்தான். இது பெருமையளிக்கிறது.
இந்த மையத்தில் தொழில்முனைவுப் பயிற்சியும் அளிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் மென்கலன் உற்பத்திக்கு இருக்கும் பெரிய சந்தையில் இன்னும் நிறைய பேர் சுய தொழில் தொடங்கி முன்னேற முடியும், எனவே மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியுடன் தொழில்முனைவுப் பயிற்சியும் முக்கியமானது. உள்ளூர் சந்தைக்கு ஏற்ற மென்கலன்கள் இன்னும் இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கவேயில்லை. இதுவரை நாம் மேற்கத்தியர்களின் தேவைக்கே நிரல் எழுதிக் கொண்டிருக்கிறோம். தளையறு மென்கலன் பயிற்சி கட்டாயம் உள்ளூர் தேவைகள் பக்கம் இளைஞர்களைத் திருப்பும்.
என்னைப் பொருத்தவரை இந்த மையத்தின் முதல் நடவடிக்கை நாளதுவரை தமிழ் லினக்ஸ், தமிழா! ழ-கணினி போன்ற தன்னார்வக் குழுக்கள் செய்த பணிகளை ஒன்று திரட்டி, அவற்றின் பின்னணியை வரையறுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பூச்சியத்திலிருந்து துவக்கி தங்கள் சக்தியையும் பணத்தையும் விரையமாக்கக் கூடாது. சரவணன் மையத்தின் தலைவர் பேரா. கிருஷ்ணன் இது குறித்த ஆலோசனைகளை வரவேற்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் தொடர்பு கொண்டு இதுபற்றி நான் சொல்லியிருக்கிறேன்.
கொசுறு: செய்தியளித்த துணைவேந்தர் “The main problem with open source software applications is that security is not built-in,” said Prof. Balagurusamy. “We have to develop tools for security.”
என்று சொல்லியிருக்கிறார். இது பொத்தாம் பொதுவான உண்மையற்ற கூற்று. திறந்த ஆணைமூலங்கள் இன்றைக்கு வெகுவாக மதிக்கப்படுகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவற்றின் உள்ளார்ந்த பாதுகாப்பு திறமே. நிரலிகளின் மூலங்கள் பொதுவில் திறந்து காட்டப்படுவதால் அவற்றில் இருக்கும் குறைகள் மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு களையப்படுகின்றன. (எரிக் ரேமண்ட் இதை மில்லியன் கழுகுக் கண்களின் பார்வையில் எந்தப் பிழையும் தப்பமுடியாது என்று சொல்வார்). நாஸாவின் விண்கலன்களை ஏவுவதிலிருந்து அமேசான்.காமின் மின்வணிகத்தை இயக்குவதுவரை எல்லாமே திறந்த ஆணைமூல நிரலிகள்தான்.
I agree. I am not sure how many applications Balagurusamy has tried by hime himself. If someone like Balagurusamy is making astaement like this think about other's knowledge about opensource.
//இது பொத்தாம் பொதுவான உண்மையற்ற கூற்று. திறந்த ஆணைமூலங்கள் இன்றைக்கு வெகுவாக மதிக்கப்படுகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவற்றின் உள்ளார்ந்த பாதுகாப்பு திறமே.//
Venkat,
Your stars dont work?
நல்ல செய்தி!
//என்னைப் பொருத்தவரை இந்த மையத்தின் முதல் நடவடிக்கை நாளதுவரை தமிழ் லினக்ஸ், தமிழா! ழ-கணினி போன்ற தன்னார்வக் குழுக்கள் செய்த பணிகளை ஒன்று திரட்டி, அவற்றின் பின்னணியை வரையறுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பூச்சியத்திலிருந்து துவக்கி தங்கள் சக்தியையும் பணத்தையும் விரையமாக்கக் கூடாத//
இது புதிதாக வருபவர்களை பொருத்தது. சிலர் மற்றவர்கள் செய்வதை தொடர்ந்து அவர்களுக்கு பேரும் புகழும் வருவதை விரும்ப மாட்டார்கள். புதிதாக ஆரம்பிப்பார்கள். அப்படி நடகாமல் இருந்தால் சரி தான்
அடுத்த வாரம் இந்தியா செல்கிறேன், ஒரு மாத விடுமுறையில். அண்ணாவில் என் வாத்தியார்கள் மற்றும் KBC பாஸ்கரன், முகுந்த இன்னும் பிற ஆர்வலர்களை சந்திக்க திட்டம். இந்த புது நிலையம் கேட்க நல்லாதான் இருக்கு. கிரவுண்ட் ஸீரோ'ல என்ன சொல்றாங்கனு பார்த்துவிட்டு வந்து எழுதறேன்.
//அவருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கே.பி. சந்திரசேகர் மையத்தின் தலைவர் திரு கிருஷணமூர்த்திக்கும் இடையில் //
சிறு திருத்தம்: கிருஷ்ணமுர்த்தி –> பேராசிரியர்.திரு. சி.என். கிருஷ்ணன்.
மு.கே. சரவணன்.
[5] சரவணன், திருத்தத்திற்கு நன்றி!
என்னுடைய எண்ணங்கள் முழுவதிலும் கடந்த இரண்டு வாரங்களாக நான் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் மானிய விண்ணப்பத்திலேயே இருக்கின்றன. Chemical warfare, biological agents, diffractive optics, nerve gases, என்று எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத சமாச்சாரங்களைப் போட்டு காற்றுள்ளபோதே homeland security லிருந்து தூற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
இப்படித் தனிநபர்கள் பெயரைத் தவறாக உச்சரிப்பது எனக்கு மிகுந்த வெட்கத்தைத் தருகிறது (நேற்று பொன்விழி தஸ்கி என்று தவறாக எழுதினேன்). என்னையறியாமல் இதுபோன்ற தவறுகள் விழுந்துவிடுகின்றன. மன்னிக்கவும். கவனமாக எழுத முயற்சிக்கிறேன்.
ஒரு ஒருங்கிணைந்த தமிழ் மென்பொருள்கள் பற்றிய பதிவினை இரண்டொரு நாட்களில் வெளியிடுகிறேன். பூர்வாங்க வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. வெங்கட் தனியாக மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
யக்ஞா, இந்தியா வந்தால், எனக்கொரு போன் அடியுங்கள். சந்திக்கலாம். இல்லையென்றால் சொல்லுங்கள், ஒரு வலைப்பதிவர் சந்திப்பினை ஏற்பாடு செய்தால் போயிற்று வாரயிறுதியில்.
தகவலுக்கு நன்றி, வெங்கட்.
(மன்னிக்கவும், அன்றே படித்தேன்… இருந்தாலு இன்று இங்கு சும்மா… பின்னூட்டமிடக்காரணம் – இந்தப்பதிவை தமிழ்மணத்தின் (சமீபத்தில் மறுமொழியப்பட்ட 25 ஆக்கங்கள்) எதாவது ஒரு பிரிவில் மேலெடுத்து வந்து மேலும் நாலுபேர் படிக்கவைக்கத்தான்:)