• அமெரிக்க பயணிகள் விமானத்தில் ஏவுகணைகள்

    by  • May 30, 2005 • பொது • 11 Comments

    us air missile

    அமெரிக்கா விரைவில் தன்னுடைய பயணிகள் விமானங்களுக்கு தற்காப்பு ஏவுகணைகளைப் பொருத்தப் போகிறது. இதற்கான மொத்த செலவு பத்து பில்லியன் டாலர்கள். (இதன்மூலம் அமெரிக்க இராணுவ வியாபாரிகள் சம்பாதிக்கப்போவது பத்து பில்லியன் என்று படிக்கவும்). வெறிபிடித்து அலையும் தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் இன்னொரு அபத்த நடவடிக்கை இது.

    அமெரிக்கர்களின் கணிப்புப்படி உலகெங்கிலும் மூன்றரை இலட்சம் தோளிலிருந்து ஏவக்கூடிய விமானத்தாக்கு ஏவுகணைகள் இருக்கின்றனவாம். இவற்றில் சில ஆயிரம் கணக்கில் வராமல் காணாமல் போயிருக்கின்றனவாம். இந்த ஆயிரத்தில் சிலவற்றை யாராவது திருடிக்கொண்டுவந்து அமெரிக்க விமானங்களைச் சுட்டுவிடுவார்களாம். எனவே இதிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு அமெரிக்க பயணிகள் விமானங்களில் ஏவுகணைகள் பொருத்தப்படுமாம். பயவெறியின் (paranoia) உச்சம் இது.

    இப்படி இதற்கு முன் அமெரிக்க பயணிகள் விமானத்தின்மீது ஏவுகணை எறியப்பட்டதற்கான அல்லது முயற்சிக்கப்பட்ட வரலாறு ஒன்றும் கிடையாது. நாளதுவரை அமெரிக்க விமானங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது இராணுவ நடவடிக்கைகளின்போதுதான். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற இடங்களில் இப்படி நடக்கிறது. ஆனால் அவையெல்லாம் வரையறுக்கப்பட்ட போர்ப் பிரதேசங்கள். பயணிகள் விமானங்கள் ஒருபோதும் போர்ப்பிரதேசங்களில் பறப்பதில்லை.

    முதலில் காணாமல் போன விமானந்தாக்கு ஏவுகணைகள் யாராவது அமெரிக்க எதிரியின் கையில் கிடைத்திருக்க வேண்டும் (இதற்கான சாத்தியங்கள் குறைவு, இவை தமிழீழம், கஷ்மீர் உட்பட பல்வேறு ஆயுதப் போராட்டங்களில் உள்நாட்டுப் போர்களைத்தான் பெரிதும் சென்றடைகின்றன). இரண்டாவதாக, அமெரிக்க விமானங்கள் பெரும்பாலும் அவர்களது நிலப்பரப்புக்கு மேலாகத்தான் பறக்கின்றன. இவற்றைத் தரையிலிருந்து காப்பாற்ற முடியாதவர்களால் வானத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதற்கும் மேலாக எல்லோராலும் இந்த ஏவுகணைகளை இயக்கமுடியாது. முறையான பயிற்சி தேவை. அப்படியான பயிற்சி தருபவர்கள் அமெரிக்க நாட்டின் உள்ளேயே பள்ளிக்கூடம் நடத்துவார்களேயானால் ஆகாயத்தில் இருக்கும் எந்தக் கடவுளாலும் அமெரிக்காவைக் காப்பாற்ற முடியாது.

    மிக முக்கியமாக, பயணிகள் விமானங்களையெல்லாம் ஆயுதம் தாங்கிகளாக மாற்றுவது கொடுமை. இதுபோன்ற ஒரு கொடிய செயலை அமெரிக்காவைத் தவிர வேறெந்த நாடும் இப்பொழுதெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்ப்பதில்லை. இராணுவங்களில் இருக்கும் ஆயுதங்கள் போதாது என்று பயணிகள் போக்குவரத்திலும் ஆயுதங்களை நுழைக்கிறார்கள். இன்னும் கொடுமை, பயணி விமான ஓட்டிகளுக்கு ஏவுகணை ஏவுவதில் பயிற்சிகள் பெரும்பாலும் இருக்காது. இப்படிப் பயிற்சியில்லாதவர்களின் காலில் இதற்கான விசையைப் பொருத்திவிட்டு நாளை வேறெங்காவது வெடித்து மனிதர்கள் சாவதற்கான சாத்தியம், ஏவுகணை தாக்கி அமெரிக்க விமானம் வெடிக்கும் சாத்தியத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமிருக்கலாம். இதில் பல விமானிகள் டாம் குரூஸின் டாப் கன் படம் பார்த்திருப்பார்கள். தங்களையும் அப்படியான ஒரு ஹிரோவாகக் கற்பனை செய்துகொண்டு இவர்கள் வேண்டுமென்றே வெடிப்பதும் சாத்தியம்தான். (இப்படியாக வெறிகொண்டு அமெரிக்க ஆயுதம் தாங்கிகள் நடந்துகொள்வதற்கு நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன).

    பேரழிவுக்குத் தயாராகும் ஒரு வல்லரசின் எல்லாவிதமான நடவடிக்கைகளும் அமெரிக்காவிடம் இப்பொழுது தென்படுகின்றன. அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்து அமெரிக்க மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

    11 Responses to அமெரிக்க பயணிகள் விமானத்தில் ஏவுகணைகள்

    1. May 30, 2005 at 1:36 pm

      கொடுமை. ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. கத்தியை எடுத்தவன்…

      //இப்படிப் பயிற்சியில்லாதவர்களின் காலில் இதற்கான விசையைப் பொருத்திவிட்டு நாளை வேறெங்காவது வெடித்து//
      friendly fire போல ஏதாவது சொல்லிக் கொள்ளலாம்.

      //முதலில் காணாமல் போன விமானந்தாக்கு ஏவுகணைகள் யாராவது அமெரிக்க எதிரியின் கையில் கிடைத்திருக்க வேண்டும் (இதற்கான சாத்தியங்கள் குறைவு, இவை தமிழீழம், கஷ்மீர் உட்பட பல்வேறு ஆயுதப் போராட்டங்களில் உள்நாட்டுப் போர்களைத்தான் பெரிதும் சென்றடைகின்றன).//
      இந்தக் கூற்றினை எதை ஆதாரமாகக் கொண்டு குறிப்பிடுகிறீர்கள்?

    2. May 30, 2005 at 2:35 pm

      [1] //இந்தக் கூற்றினை எதை ஆதாரமாகக் கொண்டு குறிப்பிடுகிறீர்கள்?//

      சுந்தர் – பொதுவில் உள்நாட்டுப் போர்க்குழுக்களுக்கு சக்திவாய்ந்த விமானந்தாக்கி ஆயுதங்கள் தயாரிக்கும் நுட்பம் இருப்பதில்லை. அதற்கும் மேலாக இதற்கான தொழிற்கூடங்களை வைத்துப் பராமரிப்பது அவற்றுக்கு இயலாத காரியம் (போர்ச்சூழலில்). இப்படியிருக்க அவர்கள் வெளியிலிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதுதானே சாத்தியம்! அந்த வகையில் பல விமானந்தாக்கி ஏவுகணைகள் ஆயுதப்போராளிக் குழுக்களையே சென்றடைகின்றன. (சிறு அளவில் போதைப் பொருட்கள் கடத்தும் மாஃப்யியாக்களிடம், குறிபாகக் கொலம்பியா, மத்திய அமெரிக்க நாடுகளில்) அரசுப்படைகளை எதிர்க்கப் பயன்படுகின்றன.

      இதுபோல ஆயுதங்கள் பரவும் வழிகளைப் பல ஆய்வு நிறுவனங்கள் ஆவணப்படுத்தியிருக்கின்றன (ராண்ட் – அமெரிக்கா, மெக்கின்ஸி இன்ஸ்டிட்யூட் – கனடா, இன்னும் ஓஸ்லோ பல்கலைக்கழகம் (நார்வே), க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் – ஆஸ்திரேலியா போன்றவை பல ஆயுதப் போக்குவரத்துப் பாதைகளை தீர்மானித்திருக்கின்றன.

      இவற்றில் சில தமிழ்நேஷன்.ஆர்க் வலைத்தளத்தில்கூடக் கிடைக்கின்றன.

    3. Padma Arvind
      May 30, 2005 at 2:44 pm

      தேர்தலின் போது பனம் கொடுத்த ஆயுத வியாபாரிகளுக்கு பின் எப்படி நன்றி சொல்வதாம். உள்நாட்டு பாதுகாப்பு பற்றி பேசாதீர்கள். வாரம் 10 மணி நேரம் நான் அதற்கே செலவிடுகிறேன். இதற்காகவேனும் ஹிலரி ஜனாதிபதியாக வேண்டும்!!

    4. ag
      May 30, 2005 at 2:47 pm

      The news link you have provided does not say US is going to equip the passenger flights with missiles. I undetstand from the link that they are going to fit missile defence system -no missiles- in the passenger jets.

    5. May 30, 2005 at 3:22 pm

      [4] hi hi :) My feeble intellect is unable to fathom the use of missile defense system, without missiles. Could you enlighten me as to how? :)

    6. ag
      May 30, 2005 at 3:31 pm

      Hi venkat,
      I searched web a bit. Here is what I got.

      The system uses plane-mounted sensors to detect heat-seeking missiles, then automatically fires infrared lasers to jam the missiles' guidance systems.

      http://www.forbes.com/work/feeds/afx/2005/05/29/afx2063251.html…

      Thanks.

    7. ag
      May 30, 2005 at 3:50 pm

      I am not sure if the Forbes link I provided is working. Here is Times of India link.

      http://timesofindia.indiatimes.com/articleshow/1125840.cms…

    8. May 30, 2005 at 4:10 pm

      [6] ag – ஃபோர்ப்ஸ்-இல் சொல்லப்பட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் இதன் கூடவே அழிக்கும் ஏவுகணைகளும் தேவை என்று சில ரிபப்ளிக்கன் செனட்டர்கள் வலியுறுத்திவருகிறார்கள். (seek and destroy)

      இதுபோன்ற சாதனங்களைப் பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன். தீவிரவாதிகள் கையில் இருக்கும் தோளேற்றி செலுத்தப்படும் ஏவுகணைகள் பெரும்பாலும் விமானத்தில் வெளியிடப்படும் வெப்பத்தை(அகச்சிவப்புக் கதிர்கள் வெப்பத்தின் சின்னங்கள்) அடையாளம் கண்டு அதன்போக்கிற்கு ஏவுகணையைச் செலுத்த வல்லவை.

      சமீபத்திய கண்டுபிடிப்பில் பறக்கும் விமானத்தைச் சுற்றி ஒருவித ஒழுங்கற்ற வெப்ப அலையை அகச்சிவப்பு லேசர்கள் உருவாக்குகின்றன. இவை விமானத்தின் பாதையை அடையாளம் காணமுடியாமல் சிதைக்கின்றன.

      ஆனால் இப்பொழுதைய புதிய தோளேறி விமானந்தாக்கு ஏவுகணைகள் சிறு கணினி பொருத்தப்பட்டு இந்த ஒழுங்கற்ற் அலையைக் (Random heat waves) கணக்கிட்டு மீண்டும் துல்லியமாகச் செலுத்த வல்லவை. இதனால்தான் seek and destroy வகை ஏவுகணைகள் தேவை என்று சொல்லப்படுகிறது.

      முதலில் விமான ஓட்டி அறைகளில் துப்பாக்கிகள் தேவை என்றார்கள். இப்பொழுது விமானத்தில் ஏவுகணைத்தடுப்பு/ஒழிப்பு சாதனங்கள் என்கிறார்கள். அடுத்ததாக சராசரி அமெரிக்கரின் உச்சந்தலையில் தீவிரவாத ஒழிப்பு சாதனங்களைப் பொருத்தக்கூடும்.

    9. May 30, 2005 at 4:18 pm

      [8] BTW there is another drawback/hazard in this approach. Most of these shoulder lauched anti-aircraft missiles are useful only for the first 30 miles of the take-off and last 50 miles of landing. This is the low flying zone for commercial/passenger aircrafts, that comes within the reach of these missiles.

      The anti-missile infrared jammers are essentially Class 4 lasers, which are hazardous in free space (even the scattered radiation from non-reflecting rough surfaces). Currently there are no internationally agreed standard on using these military devices in civilian zones. Nominal hazard distances are very high for these IR lasers and as such would be dangerous to people living close to the airports in high-rise buildings.

      The current US government and the US arms lobby is exploiting this lack of standard to money-making. No one has ever studied the hazards associated with these lasers in low-flying non-combat zones.

      In all probability, once these devices are sold and fitted in aircraft they will cite safety issues and deactivate them.

    10. May 30, 2005 at 4:31 pm

      //அடுத்ததாக சராசரி அமெரிக்கரின் உச்சந்தலையில் தீவிரவாத ஒழிப்பு சாதனங்களைப் பொருத்தக்கூடும்.//

      அதான் ஏற்கனவே புஷ்ஷும் அவரது நண்பர்களும் பொருத்திகொண்டு மற்ற அமெரிக்கர்களி மண்டையிலும் பொருத்த முனைந்து இருக்கிறார்களே!

    11. May 30, 2005 at 11:51 pm

      //பேரழிவுக்குத் தயாராகும் ஒரு வல்லரசின் எல்லாவிதமான நடவடிக்கைகளும் அமெரிக்காவிடம் இப்பொழுது தென்படுகின்றன. அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்து அமெரிக்க மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.//

      அணைகிற விளக்கு பிரகாசமாக தான் எரியும். ம்ஹூம், எனக்கென்னவோ அமெரிக்கா மேல் பெரிதாக நம்பிக்கை வரவில்லை. பயத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு சொந்த நாட்டிலேயே, பயத்தாலும்,அச்சத்தாலும் வாழ வேண்டிய கட்டாயம். இதன் உளவியலை மைக்கேல் மூரின் 9/11-ல் கேட்டிருக்கலாம். டார்வினின் கொள்கையை குப்பையில் போட்டு, மனிதனை காபாற்ற மட்டும் அமெரிக்க பள்ளிகளில் பிதா வருவார். ஆனால், விசா, பாஸ்போர்ட் பிரச்சனைகளால், அதே பிதா, அமெரிக்க விமானங்களை காபாற்ற மாட்டார். நல்ல நாடு. நல்ல மக்கள். நல்ல தலைவர்கள். ஆமென். ;-)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *