கனேடிய ஒலிபரப்புக் கழகத்தில் வெளியான “யாருடைய உண்மைகள்” என்ற ஈழப்போராட்டம் குறித்த தொடர் நிகழ்ச்சியைப் பற்றி நான் எழுத அதன் பின்னாக எனக்கும் பத்ரிக்கும் இடையில் எழுந்த உரையாடலின் தொடர்ச்சி.
பத்ரி – நீங்கள் சொல்வதில் பல முரண்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி பின்னர்.
முதலில் – போராளிச் சிறுவர்களைப் பற்றிய என் கண்ணோட்டம் என் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற பார்வையில். நேற்று மாலை பள்ளிக்கூடத்தில் ஓசி ஸ்கேட்போர்ட்டில் சறுக்கி இரண்டு காலிலும் முட்டியைப் பேர்த்துக்கொண்டு வந்தான் ஜேஷ்டபுத்ரன் – கிழிந்த புத்த்தம் புது Gap Pant ஊடாக ஷ்ரெக் படம் போட்ட பிளாஸ்டரைப் பெருமையாகக் காட்டிக் கொண்டு. ஆனால் கிழிசலின் வழியாக கீழோடிக் காய்ந்துபோன இரத்தம்தான் என் கண்ணில் தெரிந்தது. இதுதான் இந்த விஷயத்திலும் என் பார்வை.
இனி… முதலாவதாக , இந்த 17-19 என்பது விஷயத்தை நீர்த்துப்போகச் செய்யும் உத்தி. நான் சொல்வது 12 – 19. அதாவது கிட்டத்தட்ட இரண்டு பங்கு மூத்தவர்கள் இளையவர்கள் என்ற பாகுபாடு. மிக எளிதாகக் கோட்டுக்கு அந்தப்புறம் இந்தப்புறம் என்று மெல்லிய கோட்டை வரைகிறீர்கள். நான் காண்பது தளிர்களுக்கும் மரத்துக்கும் உள்ள இடைவெளியை.
>ஆனால் தற்காப்புப் படைகள் இந்த வரம்பைப் பின்பற்ற முடியாது. தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் “எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்” என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
பத்ரி, நீங்களும் சொல்லிவிட்டீர்கள். பிரகாஷும் சபாஷ் சொல்லிவிட்டார் 🙂 நாம் இங்கே பேசுவது தற்காப்பைப் பற்றியல்ல. படைதிரட்டுவதைப் பற்றி. எனக்கு மேலே வன்னியன் பெருமையாகச் சொல்லும் கட்டுக்கோப்பான இயக்கத்தின் நடவடிக்கைகள் திட்டமிடாமல் அடிக்கவரும்பொழுது குழந்தைகளை அடிவாங்கச் செய்கிறதா? இதன் முரண் புரியவில்லை? இது தனது செயல்பாடுகளின்மீது தார்மீகப் பெருமைகொள்ளும் இயக்கம்.
>கடந்த ஆறு மாதங்களின் டொராண்டோவில் புலிகள் யாரையாவது கொன்றிருக்கிறார்களா? கை கால்களை உடைத்திருக்கிறார்களா? ஜெர்மனியில்? பிரான்சில்? பிரிட்டனில்?
அதென்ன ஆறுமாத வரையறை என்று புரியவில்லை 🙂 மெக்கின்ஸி இன்ஸ்டிட்யூட்டின் தளத்தில் கொஞ்சம் கனேடிய வரலாறு கிடைக்கும்.
இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது, எந்தத் தரவுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். தங்கமணி சொன்னதைப்போல ஹிந்துவுக்குச் சில மறைமுக நோக்கங்கள் இருக்கலாம் (கின்றன என்றுதான் நானும் நம்புகிறேன்). ஆனால் அம்னெஸ்டி? யுனிஸெஃப்? சேவகி ‘லெக்ஷ்மி’? பத்ரிக்கையாளர் ஜெயராஜ்? முன்னாள் போராளி புஷ்பராஜா? எழுத்தாளர் ஷோபா சக்தி? மக்கின்ஸி இன்ஸ்டிட்யூட்? கனேடிய அமைச்சர்?? யாரைத்தான் நம்புவது??
> தந்தை இல்லாத வீட்டில், மூத்த பிள்ளை – 18 வயதுக்குக் கீழே இருந்தாலும் – ஏதோ வேலை பார்த்து தன் தம்பி தங்கைகளைக் காப்பதில்லையா?
என்ன ஒரு முரண்? உடலை வருத்தி வேலை செய்வதையும் உடலைப் பணயம் வைத்துக் கேடயங்களாக்குவதையும் ஒரே தட்டில் போட்டுப் பார்க்கிறீர்களே?
>அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா?
பத்ரி? சரியாகத்தான் சொல்கிறீர்களா? யாரைப் பணயம் வைத்து யாரைக் காப்பாற்றுவது? நாம் சொல்வது எந்த சமூகத்தின் விழுமியங்களை??
>”There is a contradiction here.” அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், புலிகள் ஆதரவாளராகவும் இருக்க முடியாது என்பதே மறைபொருள். இந்த வரியின் மூலம் சேவியரின் வாக்குமூலத்தை சற்றே நீர்த்துப்போகச் செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்.
இதை எப்படி நீங்கள் முழுமையாக புலிகளுக்கு எதிரான பேச்சு என்று கொள்கிறீர்கள்? அவர் காட்டும் முரண் “இறைதூதரின் கருணையைப் போதிக்கும் ஒருவர் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குத் துணை நிற்பது” குறித்த வியப்பு. சமீப உலக வரலாற்றில் ஆர்ச் பிஷப் டெஸ்மன் டுடூ, கார்டினல் ஸின் போன்றவர்களின் அமைதியான மக்கள் எழுச்சி ச் செயல்பாட்டுடன் ஒப்பிடும்பொழுது தோன்றும் முரண்தான் இங்கே சுட்டப்படுகிறது. நீங்கள் புலிகள் அதிமுக்கியமானவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். கனேடியர்களுக்கு இவர்களைக் கடந்து அல் கைடா, காலிஸ்தான், அபு முகை, இன்னும் ஐ.ஆர்.ஏ என்று பல அகதிச் சிக்கல்களில் ஒன்று. எனவே முன்முடிபுடன் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல வலிந்து புலிகளைத் தூக்கிப் பிடிக்கவும்.
> டேவிட் ஜெயராஜோ, ‘லக்ஷ்மி’யோ, புஷ்பராஜாவோ, யாராயிருந்தாலும் புலிகளுக்கு எதிரானவர் என்றால் அவர்கள் உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் போய்விடலாம் என்பது உண்மை நிலையா அல்லது வெறும் propagandaவா என்பது எனக்குத் தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எனக்கு நண்பர் இரமணி பரிந்துரைத்த Broken Palmyrah, மற்றும் புஷ்பராஜா, கோவிந்தன் புத்தகங்களும் நானாகத் தெரிந்துகொண்ட ஈழ வரலாறும், இங்கே அகதியாக வந்தவர்களுடன் கதைத்ததும் கொஞ்சம் உதவின.
>அதைப்போல முழு அமைதி இருந்தால் … நம் படைகளில் குழந்தைப் போராளிகளையும் ஒழிக்கலாம். Survival என்று வந்துவிட்டால் நாகரிக நாடுகளின் சட்ட திட்டங்கள் அனைத்தும் காற்றில்தான் பறக்கவேண்டும். These are wars fought in extraordinary circumstances. There cannot be any rules in guerilla warfare. Unfortunately.
இது போரைத் தவிர வேறெந்த தீர்வுமே இல்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டதைக் காட்டுகிறது. உண்மையில் இதுதான் உங்கள் தீர்வா என்று புரியவில்லை. இதுதான் என்றிருக்கும் பட்சத்தில் எனக்கு மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை. என்னுடைய கண்ணோட்டத்தில் சமாதானத்திற்கு இன்னும் சில வழிகள் இருக்கின்றன. அது அபரிமிதமான புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பல நாடுகளின் நிர்ப்பந்த்தத்துக்கு இலங்கையை ஆளாக்குவது. கனடாவிலிருந்து பார்ப்பவன் என்ற முறையில் தமிழர்களின சக்தி இங்கு பயன்படுத்தப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.
> போரே கூடாது என்ற நிலையே நான் விரும்புவது.
என்று சொல்லும் நீங்களா சிறுவர்களையும் அதற்கு அனுப்பவதை நியாயப்படுத்துவது? ஒருக்கால் அடி ஒன்றுதான் உதவும் என்று சொல்லியிருந்தால் உங்கள் தர்க்கங்களுக்கு நியாயம் புலப்படும். இங்கே முரண்தான் மிஞ்சுகிறது.
துரதிருஷ்டவசமாக இருபத்தைந்து வருட போர் வரலாற்றில் தீர்வே இல்லையே? போராலும் முடியாது அமைதியாலும் முடியாது என்றிருந்தால்கூட Give peace a chance!
* * *
>விடுதலைப் புலிகள் பல்வேறு காரணங்களால் வயது குறைந்தவர்களைத் தங்கள் படைகளில் வற்புறுத்தியே சேர்த்திருக்கலாம். அதையும் நான் குறை கூற மாட்டேன்.
இந்த ஒற்றைவரியே எனக்கு ஆசுவாசத்தைத் தருகிறது. என்னால் ஒரு நிலையிலும் இதைச் சொல்ல முடியாது.
நான் முதலில் சொன்னதைப் போல ஒரு தகப்பனின் பார்வை மட்டுமே எனக்கு எல்லாவற்றையும் தாண்டி மேலெழும்புகிறது.
இதெல்லாவற்றையும் தாண்டி என் எழுத்து “மேல்தட்டு நியாயம்” என்று வேறு முத்திரை குத்தப்படும்பொழுது anguish க்கு என்ன சொல்லாம்? ம்ம்.. மன உளைச்சல் மேலிடுகிறது.
* * *
நிற்க. வானொலி நிகழ்ச்சி நான் ஏற்கனவே சொன்னதுபோல் முழுமையானது இல்லை, ஆனால் நல்ல துவக்கமாக ஆக்குவது சாத்தியம். பல போராளிக் குழுக்களைப் பற்றிய ஒலிபரப்புகளைக் கேட்டிருக்கிறேன். அவற்றுடன் ஒப்பிட்டுத்தான் இதுவும் நேர்மையானது என்று சொன்னேன். எனக்கென்னமோ பல தரப்புகளையும் பங்களிக்க வைத்தது சரியாகப் படுகிறது. விட்டுப் போனது ஒரு கனடாவில் வசிக்கும் புலி என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பிரதிநிதி. ஆனால் அவரைப் பேச வைப்பதில் இருக்கும் சங்கடம் தெரியும்தானே) சில தவறுகள் தென்படுவது கண்கூடு. உண்மையில் ஜெயராஜ் assholes என்று சொன்னதை எடிட் செய்யாமல் அப்படியே விட்டது உட்பட. இதெல்லாவற்றையும் அவர்கள் தளத்தில் எழுதி அவர்களைத் தெருட்ட வேண்டியது நம் கடமை. (நான் நிகழ்ச்சி நடந்து பல நாட்களுக்குப் பிறகுதான் இதை எதேச்சையாகக் கண்டுபிடித்தேன்). ஆனால் தமிழர்கள் யாரும் அங்கே போகவில்லை. உண்மையில் இதுதான் நிலை – தங்களின் அவலத்தை உலகெங்கிலும் இன்னும் சரிவர எடுத்துச் சொல்லவில்லை.
பின்புலம்
வானொலி நிகழ்ச்சிகள் குறித்த என் தொகுப்பும் பத்ரியின் கருத்தும்
Very useful discussion with lot of information!
Thanks for the post and discussions!
//நான் முதலில் சொன்னதைப் போல ஒரு தகப்பனின் பார்வை மட்டுமே எனக்கு எல்லாவற்றையும் தாண்டி மேலெழும்புகிறது. //
நாம் எந்த ஒரு இனஒடுக்குமுறை, இன அழிப்புக்கு ஆட்படாத தகப்பனாக, தனது குழந்தைகளில் ஒருவரைக்கூட நியாயமெதுவும் இன்றி இழக்காத தகப்பனாக மட்டுமே இருக்கிறோம்; பார்க்கிறோம். வங்கத்தில் ஏற்பட்ட கொடும் பஞ்சமொன்றின் போது தாய்மார்கள் தங்கள் கைக்குழந்தைகளைக் கூட விற்றார்கள். அது இன்னொருவருக்கு உணவாகப்போகிறது என்று மறைமுகமாகத் தெரிந்தும் கூட. அங்கே மற்ற குழந்தைகளை உள்ளடக்கிய தாய்ப்பாசம் தான் அதையும் செய்யவைத்தது.
நிற்க.
//தமிழர்கள் யாரும் அங்கே போகவில்லை. உண்மையில் இதுதான் நிலை – தங்களின் அவலத்தை உலகெங்கிலும் இன்னும் சரிவர எடுத்துச் சொல்லவில்லை.///
இது முற்றிலும் சரி.
நன்றி, இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி, விவாதத்தை முன்னெடுத்ததுக்கு.
நன்றி வெங்கட்!
பத்ரி 15, 16 வயது பற்றிக் கதைத்த போது நீங்கள் மறுத்து இன்னும் கீழிறங்கி குழந்தை, தளிர்கள் என்று கதைக்கிறீர்கள். குழந்தை, தளிர்கள் என்ற பதத்தைச் சற்று விளங்கப்படுத்துவீரகளா? வேற்று மொழிச்சொல்லிலிருந்து நேரடியாகத் தமிழ்ப்படுத்துகிறீர்கள் போலுள்ளது. இது அபத்தம். மேலும் செத்துப்போன வீரர்களின் விவரங்கள் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. நீஙக்ள் சொல்லும் தளிர்களைத் தேடிப்பாரக்கோணும்.
மேலும் அரசியல் தீர்வுக்கு இன்னும் சாத்தியமிருக்கிறது என்று நீங்கள் நம்பிக்கொண்டு யுத்தம் தேவையற்றது என்று சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. எந்த உலகநாடு சிறிலங்காவை அழுத்தியது? அல்லது அழுத்தம் கொடுக்குமென்று நீங்கள் தெளிவுபடுத்தினால் அடியேன் அறிந்துகொள்வேன். ஐயா பனடோல் கூட இல்லாமல் தான் வருடக்கணக்கில் இருந்தனாங்கள். மின்சாரம் எண்டாலே மறந்து போற அளவுக்கு 10 வருசம் மின்சாரமில்லாமல் தான் வளரந்தோம். (இப்படிச்சொல்ல என் வெள்ளையின நண்பன் என்னை அதியசப் பிறவியாகப் பாக்கிறான்) அதுக்குள்ளதான் படிச்சனாங்கள். பெற்றோல் கண்ணால கண்டதேயில்ல. ஆருக்கேன் காயமெண்டா ரத்தம் ஏத்து ரத்த வங்கியில்ல. உடன் ரத்தம்; எடுத்துத்தான் ஏத்த வேணும். ஏன் சின்ன புண்களுக்குக் கூட மருந்து கட்ட மருத்துவ உபகரணங்கள் இல்ல. சின்னப்பிள்ளைகளை கண்டபடி விளையாட வேண்டாம் எண்டு பிரச்சாரம் செய்த நிலைதான் யாழ்ப்பாணத்தில இருந்தது. எவன் கேட்டவன்? எவன் அழுத்தம் குடுத்தவன்? இவ்வளவுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட எல்லாம் யாழ்ப்பாணத்தில இருந்தவை. அவுஸ்திரேலியப் பிரஜையான யாழ்மாவட்ட செஞ்சிலுவைச் சங்கப்பொறுப்பாளர் வல்லைப் பாலத்தில் இலங்கை அரசின் வான் படையால் கொல்லப்பட்டபோது (ஒரேயொரு வாகனம் மட்டுமே அந்த இடத்தில்; நின்றது. அதுவும் செஞ்சிலுச் சங்க அடையாளத்;தோடும் கொடியோடும்) அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதைவிடக்கொடுமை அந்தச் சம்பவத்தை 'புலிகளின் வாகனம் தாக்கப்பட்டது, முக்கிய தளபதி கொல்லப்பட்டார்' என்று அரசு அறிவிக்கும் போது அதையும் கேட்டுக்கொண்டு வாளாவிருந்தது.
(தொடரும்)
நவாலி, மடு, வவுனிக்குளத் தேவாலயங்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும் நந்தாவில் அம்மன் ஆலயம் உட்பட இந்துக்கோவில்களின் நரபலிகள் நடந்தபோதும் பள்ளிக்கூடப் படுகொலைகளையும் (நாகர்கோவில் பள்ளிக்கூடத்தில் மட்டும் 42 பேர். அவர்கள் தான் நீங்கள் சொன்ன <b>தளிர்கள்</b>) காணாமலே இருந்தவர்கள் அழுத்தம் கொடுப்பார்களாம். இன்று ஓரளவு கதைக்கத் தொடங்கியிருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? போராட்ட்டத்தின் வெற்றிக்கு இதில் பங்கில்லை என்பதை மறுக்க முடியுமா உங்களால்? (வெற்றியென்று போரின் வெற்றிகளைச் சொல்கிறேன்)
இன்று இஸ்ரேலில் ஒரு குண்டுவெடித்தால் வரிந்துகட்டிக்கொண்டு கத்த நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் மந்துவில் சந்தியில் குண்டு போட்டு 28 பேர் செத்தபோது ரெண்டு நாளாக மூச்சுவிடாதவர்கள் எல்லைக்கிராமமொன்றில் சிங்களவர் வெட்டப்பட்டபோது பதறியடித்துத் துடித்தது தெரியாதா? அதன்பிறகுதான் 'மந்துவிலிலும் 28 பேர் செத்தவையாம்' எண்டு போகிற போக்கில் செய்தி சொன்னவர்கள் இவர்கள். உண்மையை வெளியில் கொண்டு வரவாவது 'திருப்பிக் கொல்ல வேண்டும்' என்ற புதுத் தத்துவத்தை உருவாக்கியவர்களை நம்பச்சொல்கிறீரகள்.
சரி, இன்றைய சமாதானப் பேச்சு நிலைக்கு வருவோம். இந்தநிலையில் சமாதானம் சாத்தியம் என்று நீங்கள் நம்புகிறீரகள். இந்த நிலைவரை வரத்தானையா இவ்வளவும் நடந்தது. இன்றும் புலிகளின் பலம் குறைந்துவிட்டதென்று ஒரு தோற்றப்பாடு வந்தால் என்ன நடக்கும்? ஏகாதிபத்தியங்களின் துணையோடு போர் தொடங்காது என்று நம்புகிறீர்களா? அரசு போரைத் தொடங்கினால் எவனாவது கண்டிப்பான் என்று நினைக்கிறீர்களா? (எவனாவது என்று நான் சொல்வது அரசுகளை, வலைப்பதியும் தனிமனிதர்களையல்ல)
மேலும் 'தற்காப்பைப் பற்றியல்ல. படைதிரட்டுவதைப்பற்றி' என்று நீங்கள் கூறுவது புரியவில்லை. படைதிரட்டுவது தற்காப்புக்காக இல்லாமல் வேறு எதற்காம்?
போரே கூடாது என்று சொல்வது சுலபம். யார் போரை விரும்பியது?
மேலேயுள்ள எனது பின்னூட்டத்தில் நகைக்குறி தவறுதலாக வந்து விட்டது. அவ்விடத்தில் அடைப்புக்குறி முடிய வேண்டும்.
தொடர்ச்சி…
சரி, யுத்தநிறுத்தம் வந்து 3 வருடங்களையும் தாண்டிவிட்டது. இன்னும் என் குடும்பம் உட்பட எவ்வளவுபேர் மின்சாரமில்லாமல் வன்னியில் இருக்கிறார்கள்? நீங்கள் சொல்லும் அழுத்தம் கொடுப்பவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? ஒரு இடைக்கால நிர்வாக சபையை நிறுவக்கூட அரசுக்கு அழுத்தம் கொடுக்காதவர்கள் (அழுத்தம் கொடுப்பதாகச் சொல்வதெல்லாம் உண்மையென்று நான் நம்பத்தயாரில்லை) என்னையா தீர்வு தரப்போகிறார்கள்? சுனாமி அழிவைப் பார்க்க வந்த அனானுக்கு வடகிழக்குக்குப் போக(அவரே விரும்பியிருந்தும்) அனுமதி மறுக்கப்பட்டவுடன் பேசாமல் திரும்பிவந்ததும் அதுபற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாதவர்களிடம் என்ன அழுத்தத்தை எதிர்பார்க்கிறீரக்ள்? (இந்த ஆரவாரத்துக்குள்ள சிறுவர் படைசேர்ப்புப் பற்றி கண்டித்து அறிக்கை விட ஏலுமாம்.
வெங்கட் ஐயா, தமிழர் நாம் நம்பிக்கை கொள்ள ஐ.நா. உட்பட ஏதாவது நாடு இருந்தால் (உங்களுக்கு விருப்பமிருந்தால்) சொல்லுங்கள். செஞ்சிலுவை உட்பட ஏதாவது பொது தாபனம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் புண்ணியத்தில் அறிந்து கொள்கிறேன்.
நான் ஏற்கெனவே சொல்லிவிட்டது போல் அவரவர்க்கு அவரவர் கருத்து சரி. என்ன இப்பிடிச் சொல்லீட்டியள்? என்று யாரையும் நோகும் நிலையில் நானில்லை.
மேலே ஐ.நா உட்பட என்று போட்டுள்ளேன். ஐ.நா நாடுகளின் வகைக்குள் அடங்காது. தவறுதலாகப் போட்டதற்கு மன்னிக்கவும். மேலும் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. பொறுத்துக்கொள்க.
[5] வன்னியன் – வலியை அனுபவித்திருக்காவிட்டாலும் உங்களைப் போன்றவர்கள் சொல்லும்பொழுது உணரமுடிகிறது. இன்னும் சிலர் என்னிடம் நேரிலேயே இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அந்த நேரங்களில் எனக்கு மௌனத்தைத் தவிர வேறெதுவும் பதிலாகச் சொல்லமுடிவதில்லை.
ஆனாலும் என்னால் வலியை அனுபவிப்பவன் போல நடித்துக்கொண்டு முழுவதுமாக எல்லா செயல்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. வாதங்களையும் வரலாற்றையும் உள்வாங்கிக் கொண்டு என்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதுதான் எனக்குச் சாத்தியமாகிறது. இதனாலேயே சங்கரரோ, புத்தரோ, கிறிஸ்துவோ, பெரியாரோ யாரையும் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாமல் போகிறது. இந்த ஒரே காரணமே எனக்கு அறிவியலில் ஆர்வமூட்டுகிறது.
தங்கையையும் தந்தையையும் பறிகொடுத்த ஈழத்து நண்பர்கள் எனக்குண்டு. அதிசயமாக அவர்களும் நான் சொல்வதைத்தான் சொல்கிறார்கள். "போரால் தீர்வு காணும் சாத்தியம் இல்லை". ஆனாலும் உண்மையில் இந்தச் சதுரங்கத்தில் வியூகங்களைக் கலைக்காமல் இருக்க போர் முக்கியம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் எல்லா காய்களையும் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருப்பதை – குறிப்பாக நம் காய்களை நாமே பலியிடுவதை – மோசமான உத்தியாகத்தான் காணுகிறேன்.
மீண்டும் என் கருத்து இதுதான், ஒன்றரை இலட்சம் தமிழர்கள் வசிக்கும் டொராண்டோவில் சிபிசியின் தளத்துக்குப் போய் ஒருவரியில் தங்களை முன்வைக்க யாரும் முன்வரவில்லை என்றால் – நாம் உலகுக்குச் சரியாக எடுத்துச் சொல்வதில்லை என்றுதான் பொருள். எல்லா உலகநாடுகளையும் ஒட்டுமொத்தமாகக் குறைசொல்லும் முன் நம் நடவடிக்கைகளை நாம் சரிபடுத்திக் கொள்வது அவசியமாக்த் தெரிகிறது.
[2] தங்கமணி – இயற்கையின் பேரழிவில் நின்றுகொண்டு தாய் தன் மகனைப் பலியிடுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆளெடுப்புக்கு அனுப்புவதும் எனக்கு வேறாகத்தான் தோன்றுகிறது. இயற்கையின் சீற்றத்திற்கு மனிதன் பணிந்துபோகும் நாட்களிலிருந்து நாம் வெகுதூரம் வந்திருக்கிறோம். இன்றைய மனிதன் பெருமளவு தன் நடப்பைத் தானே தீர்மானிக்கிறான் (தனி உதாரணங்கள் தேவையில்லை, பெருமப்புள்ளியியல் (macro statistics) ரீதியாக (சமூகங்களில்) இதுதான் இன்றைய உண்மை).
>நாம் எந்த ஒரு இனஒடுக்குமுறை, இன அழிப்புக்கு ஆட்படாத தகப்பனாக, தனது குழந்தைகளில் ஒருவரைக்கூட நியாயமெதுவும் இன்றி இழக்காத தகப்பனாக மட்டுமே இருக்கிறோம்; பார்க்கிறோம்
நீங்கள் சொன்னது உண்மைதான். ஆனால் இதுமட்டுமே நான் நேர்மையாகச் செய்யக்கூடியது. அடி என் மேல் விழாதவரை, முதல் ஆள் வந்து கேட்கிறார் என்று சொல்லி இரண்டாவது ஆளின் மகனை மூன்றாமவனான என்னால் தாரை வார்த்துக் கொடுக்கமுடியாது. உண்மை இதுதான், இதைத் தவிர எல்லாமே பிரச்சாரத்திற்குத் தன்னை விற்றுக்கொள்வது என்றுதான் படுகிறது. இயன்றவரை நலிந்தவர்களைக் காப்பது அவசியம் என்று தோன்றவில்லை?
//'போரால் தீர்வு காணும் சாத்தியமில்லை.'//
சரி. நான் சொல்வது இதுதான். தீர்வு காண்பதற்குப் போர் அவசியமாயிருந்தது ஈழத்தில். தீர்வு காணும் நிலைக்கு வரவாவது போர் அவசியமாயிருந்தது. நீங்கள் சொல்வதை நான் தான் தப்பாகப் புரிந்து கொள்கிறேனோ தெரியவில்லை. போராட்டம் ஆரம்பித்ததே தவறு என்று சொல்கிறீர்களா என்பதே என் சந்தேகம். அப்பிடியில்லதவிடத்து போரால் தீர்வு காணமுடியாது என்பது என்பது என்ன வாதம்?
இன்றைய நிலை வரை வந்துவிட்டபிறகு இனி போரால் பிரயோசினமில்லை என்று சொல்கிறீர்களா? அப்பிடியானால் உங்கள் கருத்து புரிகிறது.
ஆனால் 'போர் மூலமே சமாதானம்' என்று பகிரங்கமாக முழங்கிக் கொண்ட சந்திரிக்காவுக்குக் கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து நேரடியாகவே பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கி ஊக்குவித்த உலகம் 'போர் மூலம் சமாதானம் என்பதை நம்பியது' என்பது என் கருதுகோள். ஆனால் யாருக்கு வெற்றி என்பதைப்பொறுத்து அது மாறுபடும். புலிகள் வென்றால் உடனே ஜனநாயகத்துக்குத் திரும்ப வேண்டும். ஆனால் அரசு வென்றால் மேலும் 'சமாதானத்தை' உருவாக்க தொடர்ந்து போர் செய்ய வேண்டும்.
இங்கு யாருமே எமது பிரதேசத்தை பூரணமாக எதிரியிடமிருந்து அடித்துப் பிடித்து விடுவோம் என்று நம்பவில்லை. அந்த வழியில் என்றாவது தீர்வு வரும் என்ற நம்பிக்கைதான்.
மற்றும்படி இன்னும் வானொலி விவாதத்திற்கு கருத்துச் சொல்லாத தமிழர்களின் பால் உங்கள் விசனம் சரியானது. சரியாக உலகுக்குக் கருத்தைச் சொல்லவில்லை எனும் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் சக கனேடியனைப் புரிய வைக்கலாம் என்பதைத் தாண்டி எந்தப் பிரயோசினமுமில்லை என்பது என்கருத்து. பகிரங்க இனவாதத்துக்கே கண்ணை மூடிக்கொண்டிருக்கும் அரசுகளுக்கு எதைப்புரிய வைப்பது?
உங்கள் பதிவில் நேற்றிரவில் நான் அளித்த பின்னூட்டத்தை ஏற்க வில்லை. நேரமின்மையால் சுருக்கமாக…
"மேல் தட்டு நியாயம்" என்று நான் கூறியது உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு வருந்துகிறேன். மேல் தட்டு நியாயத்தை நீங்கள் வேண்டுமென்றே சொல்லுவதாக நான் நினைக்கவில்லை. உங்கள் எழுத்துக்களை Forum Hub காலத்திலிருந்தே படித்து வருபவன் நான். நீங்களே கூறியது படி அறிவியல் உங்களுக்கு ஆர்வமூட்டுகிறது என்பதை உங்கள் எழுத்துக்களிலும் செயல்பாடுகளிலும் நான் கண்டு வருகிறேன். அதனால்தான் நான் உங்களிடம் விவாதிக்கவே வந்திருக்கிறேன், இந்தக் கேள்வியையும் முன் வைத்தேன்.
பெரியாரையோ, மார்க்ஸையோ கேள்வியில்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது அறிவுடைமையாகாதுதான். ஆனால் தனிப் பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மட்டும் ஒரு சமூகப் பிரச்சினையை ஆராய்வதும் அறிவியலுக்கு உகந்ததல்ல. நீங்கள் அடிக்கடி உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தவற்றை பிரதானப் படுத்தி வந்திருக்கிறீர்கள் – அது இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையானாலும் சரி, பார்ப்பனர் – பறையர் விவாதமானாலும் சரி, இப்பொழுது ஈழப்பிரச்சினயானாலும் சரி. அதிலும் உங்களிடம் வாதிப்பவர்களுக்கு அது மாதிரி நியாயமான அனுபவங்கள் இருக்க முடியாது என்று கற்பனை செய்வது போலவும் இருக்கின்றன உங்கள் வாதங்கள்.
"மேல் தட்டு நியாயம்" என்று நான் கூறுவதை உங்களைத் தாக்குவது போல நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களுடைய அல்லது உங்களைச் சார்ந்தவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் நீங்கள் வரையறுக்கும் நியாயங்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் அனுபவங்களை உள்ளடக்கியவையல்ல என்பது என் கருத்து. ஏனெனில் நானும் கூட அந்த மாதிரி நிலையைக் கடந்து வந்தவன் தான். உங்களைப் போலவே என்னுடைய, என்னைச் சார்ந்தவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை வைத்து "மேல் தட்டு அல்லது நடுத்தட்டு நியாயம்" பேசியிருக்கின்றேன். அதைச் சொல்ல எனக்கு வெட்கமுமில்லை.
அந்த நிலையை நீங்கள் கடக்க வேண்டுமெனில் நீங்கள் உங்கள் சமூக அடையாளங்கள் என்று கருதும் அடையாளங்களில் இருந்து உடைத்து வெளியே வரவேண்டும். அந்த அனுபவம் எனக்கு முதலில் அதிர்ச்சியையும், கோபத்தையும், மன உளைச்சளையும் தந்திருக்கிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் தோன்றிய உண்மைகளை டோண்டு ஐயாவின் பதிவில் பின்னூட்டமிட்டேன். அது இந்தப் பதிவை விட உங்களுடைய பழைய பதிவுகளுக்கான எதிர்வினை. அதை இங்கு குறிப்பிட்டு நேரமின்மையால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மற்றபடி உங்கள் மனத்தை உளைச்சல் பண்ண வைக்க வேண்டும் என்பதல்ல என் நோக்கம். தளைகளிலிருந்து விடுபட வேண்டியவர்கள் நாம் எல்லோருமே!
“வேளாளச் சாதிகளுக்கும், அச்சாதிகளில் தோன்றிய பெரியார் உள்ளிட்ட சாதி மறுப்பு சிந்தனைவாதிகளுக்கும், தலித்துகள் காட்டும் எதிர்ப்பு நியாயமானவை. அவற்றை புரிந்து கொள்ள முன்வர வேண்டும், சில நேரங்களில் அவை பார்ப்பனியவாதிகளின் தூண்டுதலின் பேரால் நடந்தாலும் கூட. ஏனெனில் படிநிலை அமைப்பான சாதிய ஒடுக்குமுறையில் மேலே உள்ளவர்களை கீழே இருப்பவர்கள் எதிர்க்கவும், சந்தேகிக்கவும், அதை வெளிப்படையாக சாதியைக் குறிப்பிட்டுப் பேசவும் நியாயம் உண்டு என நினைக்கிறேன்.”
நன்றி – சொ. சங்கரபாண்டி
வெங்கட்,பத்ரி,தங்கமணி,வன்னியன்,சுந்தரமூர்த்தி கவனமாக அசைபோட்டபடி உங்கள் விவாதத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.உடனடியாகப் பதில் சொன்னால் உணர்ச்சிவசப்படக்கூடும் என்பதால் ஆறுதலாக என்பதிவில் தருகிறேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து அனுப்புவதற்கு பத்ரிபட்ட கஷ்டம் அவருக்கு நல்லதொரு அனுபவமாக அமைந்திருக்கிறது.நிறையப் புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.வெங்கட்டின் பார்வையைக் கூடத் தவறு என்று சொல்வதற்கில்லை சாதாரண ஒரு பிள்ளையின் தந்தையாய் இந்த விடயத்தை அணுகுகிறார்.ஆனால் இதில் உறவு முறைகளை விட சந்தர்ப்ப சூழ்நிலைகள் நிலமையின் தீவிரம் என்பனவும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
வெங்கட் நாளையே நீங்களும் மகனும் வெளியே செல்லும் நேரத்தில் யாராவது உங்களைத் தாக்கினால் உங்கள் மகன் சிறு கல்தானும் எடுத்து அடிப்பான் அல்லது அவனை வளர்ந்து பெரியவனாகி அடிப்பேன் என்பான்.இந்த வன்முறைக் கருத்துருவாக்கத்தை விதைத்தவர்களை விட்டு வளர்த்தவர்களை நோவதில் பயனில்லை.
போர் நிற்கவேண்டும் என் வயதிலிருக்கும் நண்பர்கள் இயக்கத்தைவிட்டுத் திரும்பி வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் இதெல்லாம் எப்போது நடக்கும்.சமாதானம் எப்போது வரும் அதுவரை போரிடுவதை விட்டால் இலங்கை அரசு முழ்த் தமிழரையுமே கபளீகரம் பண்ணிவிடும்,சுனாமி நல்லதொரு உதாரணம்.
நீங்கள் குழந்தைகள் என்று கூறியது அந்த ஊடகம் குறிப்பிட்டதின் நேரடித்தமிழாக்கம்.வயது ரீதியில் சிறுவன்,குழந்தை,தளிர்,முதிரா இளைஞன் என்னும் நிலைகளுக்குள் வேறுபாடு உண்டு.இதில் குழந்தைகளை இயக்கத்தில் சேர்த்து விடுதலைப்புலிகள் பாலூட்டவா முடியும்?
இலட்சியங்கள் மட்டும் சரியாக அமைந்தால் போதாது, இலட்சியங்களுக்கான பாதைகளும் சரியாக அமையவேண்டும். புலிகளுக்கு மக்களுக்கு ஆரம்பத்தில் இருந்த நற்பெயருக்கான் காரணம் என்னவென்றால், அவர்கள் "ஆள்கட்டத்துவதில்லை" என்ற கருத்தே. புலிகள் "ஆள் சேர்பதை" (மக்கள் மயமாக்கல் என்ற பேர்வையில்) என்று கட்டயாம் ஆக்கினார்களோ, அவர்களும் ஆதிக்க சக்தியாக பரிமாணிக்கதொடங்கினார்கள். விமர்சனத்தை புலிகள் வன்முறையால் எதிர்கொள்வதும், தங்களை (தங்களுடைய) சட்டத்துக்கு வெளியில் நிறுத்திகொள்வதும் அவர்களை மேலும் ஆதிக்க சக்திகளாக உணரவைக்கும்.
[1] ஆனால் அம்னெஸ்டி? யுனிஸெஃப்? சேவகி 'லெக்ஷ்மி'? பத்ரிக்கையாளர் ஜெயராஜ்? முன்னாள் போராளி புஷ்பராஜா? எழுத்தாளர் ஷோபா சக்தி? மக்கின்ஸி இன்ஸ்டிட்யூட்? கனேடிய அமைச்சர்?? யாரைத்தான் நம்புவது??
Every one you mentioned above is having hidden agenda to
condemn LTTE.Ltte recruited underaged youngsters in the
past.Now they don't recruit any youngster.Sri-Lanka doing this propaganda knowing that child soldiers is a very sensity issue and it will catch every one attention.Try to understand the ground realities
[10] சங்கரபாண்டி – கருத்துக்களுக்கு நன்றி! சில விளக்கங்கள்.
>ஆனால் தனிப் பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மட்டும் ஒரு சமூகப் பிரச்சினையை ஆராய்வதும் அறிவியலுக்கு உகந்ததல்ல. நீங்கள் அடிக்கடி உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தவற்றை பிரதானப் படுத்தி வந்திருக்கிறீர்கள்
முதலில் சமூகப்பிரச்சனையை அறிவியல் ரீதியாக அனுகலாம் என்ற உங்கள் எண்ணமே தவறு. அறிவியல் நோக்குடன் சமூகத்தைப் புரிந்துகொள்வேன் என்று யாராவது சொன்னால் அது ஜல்லியடி. எந்த இடத்தில் அறிவியலின் பங்கு முடிகிறது எங்கே வாழ்வனுபவத்தின் பங்கு தொடங்குகிறது என்று தெளிவாகவே இருக்கிறேன். எனவே, முரண் என்னிடம் இல்லை; இயற்கை.
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து நான் கற்றுக்கொண்டவற்றைச் சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்களா? எனக்குத் தனிப்பட்ட முறையில் இந்த உரிமைய மறுக்கிறீர்களா அல்லது பொதுவிலேயே யாருமே தங்கள் அனுபவங்களை முன்வைக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா? எனக்கு மட்டும்தான் என்றால் என் பாவம் (அரசாங்கச் சான்றிதழ் தவிர்த்து) என்ன என்பதை விளக்குவீர்களா? பொதுவில் அனுபவப்பகிர்வை மறுப்பதைச் செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
[10]
>…. அதிலும் உங்களிடம் வாதிப்பவர்களுக்கு அது மாதிரி நியாயமான அனுபவங்கள் இருக்க முடியாது என்று கற்பனை செய்வது போலவும் இருக்கின்றன உங்கள் வாதங்கள்.
இது கொஞ்சம் கடுமை என்று தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். என்ன அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை!! யாருடைய சுய அனுபவத்தைப் பற்றியும் ஒருக்காலத்திலும் நான் இப்படிச் சொன்னவனல்லன். யாருடைய சுய அனுபவப் பதிவின்கீழும் நான் சென்று நீ கதைவிடுகிறாய் ரீதியில் மறுத்ததில்லை (அல்லது உன் சுய அனுபவங்களைப் பற்றி அதிகம் எழுதுகிறாய் என்று சொன்னதில்லை). ஃபோரம் ஹப் காலத்திலிருந்து என்னைக் கவனித்துவருபவன் என்று சொல்கிறீர்கள். தயவு செய்து இதற்கான உதாரணங்களைச் சொல்ல முடியுமா? என் மனதறிந்தவரை நான் இப்படிச் செய்ததில்லை. நான் என்னுடைய அனுபவங்களைச் சொல்லும்பொழுது பிறருடைய அனுபவங்களை மறுப்பதாக உங்களுக்குத் தோன்றினால் அது அதீதக் கற்பனை. மன்னிக்கவும்.
உங்கள் வார்த்தைகள் கடுமையாக இருக்கின்றன. முதலில் என் சுய அனுபவங்களை நான் சொல்வது தவறு என்கிறீர்கள். இரண்டாவதாக நான் செய்யாத பிறரின் சுயானுபவ மறுப்பை என் தலையில் சுமத்துகிறீர்கள். வியப்பின் விளிம்பிற்கு என்னை இட்டுச்செல்கிறீர்கள்.
[11]>உங்களுடைய அல்லது உங்களைச் சார்ந்தவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் நீங்கள் வரையறுக்கும் நியாயங்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் அனுபவங்களை உள்ளடக்கியவையல்ல என்பது என் கருத்து.
சமகாலத்தில் சில ஒடுக்கங்களுக்கு ஆளாகும் ஒரு சமூகத்தின் நியாயம் என்ற வகையில்தான் என் நியாயங்கள் அமைந்திருக்கின்றன. இப்படிச் சொல்வதால் நான் வரலாற்றை மறுப்பவனல்லன். மாறாக வரலாற்றுக்கு என் அனுபவங்களின் வழியே புரிதல்களைத் தேடிக்கொள்வபன். ஐம்பதாண்டுகால இழப்பே எனக்குப் பெரிதாகத் தோன்றும் பொழுது இரண்டாயிரமாண்டு ஒடுக்கத்தின் பிரம்மாண்டத்தின் அவலத்தை உணரமுடிகிறது. இங்குதான் என் அனுபவங்கள் எனக்குக் கைகொடுக்கின்றன. மாறாக என் அனுபவங்களை முற்றாக மறுதலித்துவிட்டால் நான் எழுப்பும் புரிதல்கள் கற்பனையாகத்தான் இருக்கமுடியும்.
>அந்த நிலையை நீங்கள் கடக்க வேண்டுமெனில் நீங்கள் உங்கள் சமூக அடையாளங்கள் என்று கருதும் அடையாளங்களில் இருந்து உடைத்து வெளியே வரவேண்டும்.
இந்த சித்தி எல்லோருக்கும் சுலபமாக வாய்க்கப்பெறுவதில்லை. ஜீவாத்மாவிலிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடையக் காத்துக் கொண்டிருப்பதற்கு எனக்குப் பொறுமையில்லை. மாறாக நடப்புகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கிறது.
>ஏனெனில் படிநிலை அமைப்பான சாதிய ஒடுக்குமுறையில் மேலே உள்ளவர்களை கீழே இருப்பவர்கள் எதிர்க்கவும், சந்தேகிக்கவும், அதை வெளிப்படையாக சாதியைக் குறிப்பிட்டுப் பேசவும் நியாயம் உண்டு என நினைக்கிறேன்.”
கட்டாயமாக. இதைதான் நான் தலித்துகளுக்குகோபத்தின் உரிமையையும் நியாயத்தையும் புரிந்துகொள்வதாகப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
கூடவே இடையிலிருப்பவர்களுக்குத் தேவைப்படும்பொழுது காலை இந்தப் பக்கமும் வசதியானபொழுது அந்தப் பக்கமும் வைத்துக் கொண்டு ஆதாயம் காண்பது இன்னும் அநியாயம் என்று நினைக்கிறேன். உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமிருப்பதால் இதன் நியாய அநியாங்களைப் பற்றி யாராவது பேச முற்பாட்டால் அவர்களது குரல்வளை நெறிக்க்கப்படுகிறது.
[15] //>வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மட்டும் ஒரு சமூகப் பிரச்சினையை ஆராய்வதும் அறிவியலுக்கு உகந்ததல்ல//
நேரமின்மையால் அவசரமாக எழுதும் வாக்கியங்கள் மேலும் குழப்பத்துக்குத் தான் வழி வகுக்கும். நான் சொல்ல வந்தது – அறிவியல் பூர்வமானதல்ல – என்று.
//என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை முன்வைத்து நான் கற்றுக்கொண்டவற்றைச் சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்களா? எனக்குத் தனிப்பட்ட முறையில் இந்த உரிமைய மறுக்கிறீர்களா அல்லது பொதுவிலேயே யாருமே தங்கள் அனுபவங்களை முன்வைக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா? எனக்கு மட்டும்தான் என்றால் என் பாவம் (அரசாங்கச் சான்றிதழ் தவிர்த்து) என்ன என்பதை விளக்குவீர்களா? பொதுவில் அனுபவப்பகிர்வை மறுப்பதைச் செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.//
உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு எந்த உரிமையையும் நான் மறுக்கவில்லை, நான் யார் உங்களை அவ்வாறு சொல்வதற்கு? அரசாங்கச் சான்றிதழை அடிக்கடி இழுப்பதனால் தான், நீங்கள் உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் மட்டும் பிரச்சினைகளை அணுகுவது மட்டுமல்லாமல் தீர்ப்பும் சொல்லுகிறீர்கள் என்பதை சுட்டிக் காட்ட மட்டுமே செய்கிறேன். நீங்கள் தீர்ப்புச் சொல்வதைக் கூட நான் குற்றம் சொல்லவில்லை. அந்த தீர்ப்பை மற்றவர்கள் (குறைந்த பட்சம் நான்) ஏற்றுக் கொள்ள வில்லை என்று தான் சொன்னேன்.
ஒருவித சுயபச்சாதாப உணர்வுடன் அணுகும் பொழுது யார் என்ன சொன்னாலும் தவறாகப் புரிந்து கொள்வீர்கள். எனவே இனிமேல் நான் உங்களிடம் விவாதிக்க முடியாது. நான் உங்களை தவறாகப் பேசினேன் என்று நினைத்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் உருப்படியான காரியங்களை வைத்து உங்களை மிகவும் மதிக்கிறேன். உங்கள் தீர்ப்பு என்பது கூட வெறும் கருத்துதான்!. உங்கள் மீது எனக்கு கோபமுமில்லை. நீங்கள் செய்யும் அரும்பணிகளை மட்டும் வழக்கம் போல் உங்களுடைய அறிவியல் தமிழ்ப்பணிகள் பற்றி படிக்காதவர்களிடம் பாராட்டிச் செல்கிறேன்.
[16] //>…. அதிலும் உங்களிடம் வாதிப்பவர்களுக்கு அது மாதிரி >நியாயமான அனுபவங்கள் இருக்க
>முடியாது என்று கற்பனை செய்வது போலவும் இருக்கின்றன >உங்கள் வாதங்கள்.
இது கொஞ்சம் கடுமை என்று தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். என்ன அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை!! யாருடைய சுய அனுபவத்தைப் பற்றியும் ஒருக்காலத்திலும் நான் இப்படிச் சொன்னவனல்லன்.
//
நான் அப்படிக் கூறவில்லை. "கற்பனை செய்வது போலவும் இருக்கின்றன உங்கள் வாதங்கள்" என்று நான் ஊகமாய்ச் சொன்னதற்கு ஒரு உதாரணம் கீழே:
//நான் உருவாக்கியிருக்கும் அபிப்பிராயங்கள் முழுக்க முழுக்க என் அனுபவங்களிலிருந்து கிளர்ந்தெழுந்தவை. மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து எந்தவிதமான சலுகைகளும் இல்லாமல் என்னை வளர்த்துக்கொண்டவன்//
//வன்முறையின் அபத்தத்தை சிறுவயதிலேயே அருகில் சந்தித்தவன். //
நீங்கள் இங்கு கூறியிருக்கும் இரண்டு அனுபவங்களில் இரண்டாவது அனுபவம் நீங்கள் பேசும் கருத்துக்குத் தொடர்புள்ளது. அதனால் வாதத்துக்கு வலு சேர்க்கக் கூடியது. ஆனால் முதல் வரியில் சொல்லும், "எந்தவிதமான சலுகைகளும் இல்லாமல்" என்ற தொடர் தொடர்பில்லாமல் யாரையோ இடித்துக் (இழித்து அல்ல) கூறுவது போலத் தோன்றியது. இதே தொனியில் நீங்கள் முன்னரும் உங்கள் வாதத்தில் குறிப்பிட்டுச் சொன்னபடியால் நான் அப்படி என் ஊகத்தை வெளிப்படுத்தினேன். நீங்கள் உதாரணம் கேட்டதால் மட்டுமே இங்கு வாதத்தை நீட்டினேன். மற்றபடி இனி இந்த பிரச்சினை பற்றி தொடர்வதாக இல்லை.
நன்றி – சொ. சங்கரபாண்டி
[19] சங்கரபாண்டி – விளக்கங்களும் மறுவிளக்கங்களும் என்று வார்த்தைகள் நீளநீள புரிதலைக்காட்டிலும் முரண்களே மிஞ்சும். அந்தவகையில் நம்மிடையே துரதிருஷ்டவசமாக இது நடந்திருக்கிறது. ஒருபுறம் சுயபச்சாதாபம் என்றும் மறுபுறம் மற்றவரை இடித்துக் கூறுகிறேன் என்றும்… கட்டாயம் இது நானில்லை என்று மாத்திரமே சொல்லிக்கொள்ள ஆசை. உங்கள் எழுத்துக்களை நான் அதிகம் படித்தவனல்லன். ஆனால் நெருங்கிய நண்பர்கள் வாயிலாகத் தெரியவந்தது. உங்களைத் தொடர்புகொள்ள ஆவல். உங்களால் முடிந்தால் தலைப்பில் இருக்கும் இணைப்பின் மூலம் உங்கள் மின்னஞ்சலை அறியத்தருவீர்களா?
http://pooraayam.blogspot.com/2005/05/blog-post_28.html