பத்மநாப ஐயருக்குக் கனடாவின் இயல்விருது
by வெங்கட் • December 29, 2004 • இலக்கியம் • 2 Comments
சற்று நேரம் முன் கிடைத்த இந்த மகிழ்சி தரும் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் சந்தோஷமடைகிறேன்.
கனேடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறான்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2004 ஆம் ஆண்டிற்கான இயல்விருது இம்முறை திரு. பத்மநாப ஐயருக்கு அளிக்கப்படுகின்றது. அவரின் தமிழ்த் தொண்டு வகைமைப் பாட்டிற்குள் அடஙக் மறுக்கும் அதேவேளை பலர் கால் பதிக்காத புதிய தடம். ஏற்கனவே சுந்தர ராமசாமி, கே. கணேஸ், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் இயல்விருது பெற்றவர்கள் என்பது அணைவரும் அறிந்ததே.
ஒருவர் தமிழுக்கு ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக இயல்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுடன் 1500 கனேடியன் டொலரும் 2005 யூன் மாதன் ரொறான்ரோ பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படும் என்பதை இலக்கியத் தோட்டம் அறியத் தருகின்றது.
நாற்பது ஆண்டுகளாக பல தியாகங்களுக்கு மத்தியில் தன்னலமற்று, முழுநேரப் பணி போல ஈழத்தமிழ் நூல் வெளியீடு, தொகுப்பு வெளியீடு, ஈழ எழுத்தாளர்களை பொது நீரோட்டத்திற்கு அறிமுகம் செய்த, ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்ய வைத்துப் பிரசுரித்தல், எழுத்தாளர்களை லண்டன் வரவழைத்து கலந்துரையாடல்கள் செய்தல் என்று பலவகையில் இவர் செயலாற்றியுள்ளார்.
தகவல்: மு. மகாலிங்கம், கனேடிய இலக்கியத் தோட்டம்.
வரப்புயர!
நன்றி வெங்கட். மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி இது. பத்மனாப ஐயர் தமிழ் இலக்கியத்திற்கு இடர்களுக்கு இடையே ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.
அருள்